ஐயா வருண பகவானே..! இந்தியா பாக் World Cup மேட்ச்ல் மட்டும் நிறைய நல்ல விளம்பரம் வந்திருக்கு. இது 100 கோடி ரூபாய் ப்ராஜெக்ட்..! தயவு செஞ்சி நாளைக்கி (ஜூன் 16, 2019, ஞாயிற்றுக்கிழமை) இந்தியா பாக் மேட்ச் நடக்குறப்ப இங்கிலாந்து பக்கம் வந்துடாதீங்க.
இங்க இங்கிலாந்துல பெய்யுற மழை, அங்கிட்டாக்க போய் தமிழ்நாடு பக்கம் பெய்ஞ்சிங்கன்னா கூட மக்கள் உங்கள தலையில தூக்கி வெச்சி கொண்டாடுவாய்ங்க, என மொத்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமமும் மனமுருக வருண காயத்ரி ஜபம் செய்து யாகம் நடத்துவதாக இணையவெளியில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஏன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) நிறுவனம் மழை பெய்யாமல் இருக்க யாகம் நடத்துவதாக ட்ரோல் செய்கிறார்கள்..? மற்ற எல்லா ஆட்டங்களை விடவும் இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்துக்கு மட்டும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அதிகம் கவலைப்படுவது ஏன்..?
உரிமம்
இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடந்து கொண்டிருக்கும் உலகக் கோப்பை 2019 போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தான் வாங்கி இருக்கிறார்கள். டிவியில் ஒளிபரப்புவது மட்டும் இன்றி, தன் ஹாட் ஸ்டார் செயலியிலும் (அப்ளிகேஷன்) ஒளிபரப்பி வருகிறார்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தினர். ஆக பொதுவாகவே உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டியில் எந்த ஆட்டம் தடை பட்டாலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு நஷ்டம் ஏற்படும்.
முக்கிய நாடுகள்
ஆனாலும் அதிலும் குறிப்பாக, இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் போன்ற கிரிக்கெட் வெறி பிடித்த நாடுகள் ஆடும் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு கிடைக்கும் லாபம், மற்ற நாடுகளின் போட்டிகளில் கிடைக்கும் லாபத்தை விட அதிகமாகத் தான் இருக்குமாம். ஆகையால் இந்த நாடுகள் விளையாடும் போட்டிகள் தடை பட்டால் பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதை இந்தியா நியூஸிலாந்து போட்டி ரத்திலேயே எதார்த்தமாக தெரிந்து கொண்டது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.
தலைப்புச் செய்தி
இந்தியா பாகிஸ்தான் என இரண்டு நாட்டிலும் கிரிக்கெட் ஆர்வலர்கள் அதிகம். இரண்டு நாடுகளிலுமே இந்து - இஸ்லாம் மதத்தை விட கிரிக்கெட் மதம் வலுவாக வேறூன்றி இருப்பதை பார்க்க முடியும். இந்தியா பாக் போட்டிகளில் எந்த நாடு வென்றாலும் அது தான் இரு நாடுகளிலும் அடுத்த நாள் தலைப்புச் செய்தியாகும். ஆனால் இரு நாடும் திறமையான எதிரி நாட்டு கிரிக்கெட் வீரர்களைக் கூட பாராட்டாமல் இருந்ததில்லை. இதற்கு மேல் இந்தியா பாக் கிரிக்கெட்டை விளக்க வேண்டுமா என்ன..?
நேருக்கு நேர்
1947-ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து... இந்திய விமானப் படை வீரர் அபிநந்தனை வைத்து விளம்பரம் மூலம் ஒரண்டை இழுந்தது வரை இந்தியா பாகிஸ்தானுக்கு மத்தியில் இருக்கும் கோபம் ஒரு விதமாக வளைந்து நெளிந்து வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆக இரு நாடுகளும் நேருக்கு நேர் மோதுவதால் இரண்டு நாட்டு மக்களும் ஒரு பந்து விடாமல் பார்ப்பார்கள். அதனால் விளம்பரங்களும் அதிக அளவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு குவிந்து கொண்டிருக்கிறதாம்.
விளம்பரம்
10 நொடி தொலைக்காட்சி விளம்பரத்துக்கு 10 - 15 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ், இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் 25 லட்சம் ரூபாய்க்கு மேல் அசால்டாக வாங்குகிறார்களாம். அதே போல ஹாட் ஸ்டாரில் தங்கள் விளம்பரத்தை ஒளிபரப்பக் கூட மற்ற போட்டிகளுக்கு, 10 நொடிகளுக்கு 5 -10 லட்சம் வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது இந்தியா பாக் போட்டிக்கு அதே 10 நொடி ஹாட் ஸ்டாரில் விளம்பரம் செய்ய 16 - 18 லட்சம் ரூபாய் வரை வாங்குகிறார்களாம். இப்படியாக சுமார் 100 கோடிக்கு மேல் விளம்பர ஒப்பந்தங்கள் செய்திருக்கிறார்களாம்.
இன்ஷூரன்ஸ்
பொதுவாகவே இது போன்ற பெரிய போட்டிகளுக்கு டிவி சேனல்கள் இன்ஷூரன்ஸ் செய்திருப்பார்களாம். ஆனால் ஏற்படும் முழு நஷ்டத்தையும் எந்த ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனியும் தராது என்பதையும் கண்ணீரில் அடிக் கோடு போடுகிறார்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தினர். ஒருவேளை இந்தியா பாக் போட்டி மழை காரணமாக ரத்தானால், இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் போக சுமார் 50 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படும் என இங்கிலாந்து குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறார்களாம்.
ஐந்தாவது போட்டி
ஏற்கனவே இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து, பங்களாதேஷ் - இலங்கை, தென் ஆப்பிரிக்கா - மேற்கு இந்தியத் தீவுகள், பாகிஸ்தான் - இலங்கை என நான்கு போட்டிகள் ரத்தாகி சுமார் 50 - 70 கோடி வரை லாபத்தில் நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள் விளம்பரத் துறையில் பணியாற்றும் அனலிஸ்டுகள். இப்போது மீண்டும் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டியும் ரத்தானால் உலகக் கோப்பையில் ரத்தான ஐந்தாவது போட்டியாக இருக்கும். அதோடு இன்னொரு 50 கோடி ரூபாய் வரை நஷ்டமும் ஏற்படும் என மீண்டும் கண்களைக் கசக்குகிறார்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தினர்கள்.
இருக்கு மழை இருக்கு
இத்தனை கதறிய பின்னும் வெதர்மன் என்கிற வானிலை ஆய்வு மையம், இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறும் ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நாளை (ஜூன் 16, 2019 ஞாயிற்றுக்கிழமை) மழைக்கு வாய்ப்பிருப்பதகவே சொல்லி எச்சரித்திருக்கிறார்கள். இதற்கு மத்தியில் இந்தியா பாகிஸ்தனுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டிக்கு டிக்கெட்டுகள் வேறு 18 கிராம் தங்கம் விலைக்கு எகிறிக் கொண்டிருக்கிறது.
ட்ரோல்
அதனால் தான் வருண காயத்ரியை மந்திரத்தை, ஸ்டார் போர்ட்ஸ் நிறுவனத்தினர் தொடர்ந்து ஜபித்து யாகம் செய்து கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனாலும் இந்தியா பாக் மேட்ச் நிற்கக் கூடாது என ஆத்திகர்கள் யாகம், செய்ய நாத்திகர்கள், மழை விவரங்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள். எது எப்படியோ மதங்களை மறந்து மனித மனங்கள் இணையும் இந்த போட்டி சிறப்பாக நடக்கட்டும். நாமும் பாப்கார்ன் உடன் படுத்த மேனிக்கு போட்டியை ரசிப்போம்.