உலகின் வேகமாக வளர்ச்சிக்கு மிகவும் முக்கியப் பங்கு வகிக்கும் ஆட்டோமொபைல் துறையில் டெஸ்லா வெற்றிக்கு பின்பும், உச்சக்கட்டத்தை அடைந்துள்ள சுற்றுச்சூழல் பாதிப்பும் இத்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
டெஸ்லா நிறுவனத்திற்குப் போட்டியாகவும், உலக நாடுகளில் பெரிய அளவில் உருவாகி வரும் எலக்ட்ரிக் வாகன சந்தையைக் கைப்பற்றும் நோக்கத்துடன் பியாட் கிரிஸ்லெர் மற்றும் Peugeot-ன் தாய் நிறுவனமான பிஎஸ்ஏ குரூப் ஆகிய இரு பெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து ஸ்டெலான்டிஸ் என்ற மாபெரும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
இந்த இணைப்பின் மூலம் ஸ்டெலான்டிஸ் நிறுவனம் உலகின் 4வது பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக உயர்ந்துள்ளது.
ஸ்டெலான்டிஸ் - புதிய நிறுவனம்
இத்தாலி நிறுவனமான பியாட் கிரிஸ்லெர்-ம், பிரென்ஞ்ச் நாட்டின் பிஎஸ்ஏ குரூப் இணைந்தது மூலம் வருடத்திற்கு 81 லட்சம் கார்களை உலகம் முழுவதும் விற்பனை செய்யும் மாபெரும் நிறுவனமாக உயர்ந்துள்ளது ஸ்டெலான்டிஸ்.
கொரோனா தொற்று
இந்த இணைப்பு குறித்த முடிவை அக்டோபர் 2019ல் அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்றுக் காரணமாகச் சர்வதேச பொருளாதாரப் பாதிப்புகள் கிட்டதட்ட ஒரு வருடம் இணைப்புத் திட்டம் கால தாமதமானது. தற்போது இரு நிறுவனமும் இணைந்து ஸ்டெலான்டிஸ் என்ற புது நிறுவனம் செயல்படத் துவங்கியுள்ளது.
ஸ்டெலான்டிஸ் மாபெரும் திட்டம்
ஸ்டெலான்டிஸ் நிறுவனம் உலகளவில் உருவாகி வரும் எலக்ட்ரிக் வாகன சந்தையைக் கைப்பற்றும் திட்டத்தை முதன்மையான இலக்காக கொண்டு பயணியாற்ற முடிவு செய்துள்ளது. இதேவேளையில், ஆட்டோமொபைல் துறையில் தனது சக போட்டி நிறுவனமான டோயோட்டோ மற்றும் வோக்ஸ் வேகன் நிறுவனங்களுடன் நேரடியாகப் போட்டிப்போட்டு தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
6.1 பில்லியன் டாலர் சேமிப்பு
மேலும் இந்த இணைப்பின் மூலம் கூட்டணி நிறுவனம் வருடம் சுமார் 5 பில்லியன் யூரோ, டாலர் மதிப்பில் 6.1 பில்லியன் டாலர் அளவிலான செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எலக்ட்ரிக் கார்கள்
உலகில் பல நாடுகள் பெட்ரோல், டீசல் கார்களைத் தயாரிப்பதையும், பயன்படுத்துவதையும் தடை செய்யும் முக்கியமான ஆலோசனையில் இருக்கும் நிலையில், அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களையும் வாகனங்களையும் தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
ஆட்டோமொபைல் துறை பாதிப்பு
மேலும் கொரோனா மற்றும் பொருளாதாரப் பாதிப்பின் காரணமாகச் சர்வதேச ஆட்டோமொபைல் சந்தை பெருமளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் பியாட் கிரிஸ்லெர் மற்றும் பிஎஸ்ஏ குரூப்-ன் இணைப்பு அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுகிறது.
ஆராய்ச்சிக்கு முதலீடு
இதுமட்டும் இக்கூட்டணி மூலம் ஒவ்வொரு வருடமும் சேமிக்கப்படும் 6.1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை எலக்ட்ரிக் வாகன தயாரிப்புக்கான ஆராய்ச்சியில் முதலீடு செய்யத் திட்டமிடும் என இத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்டெலான்டிஸ் நிர்வாகம்
தற்போது இக்கூட்டணி நிறுவனமான ஸ்டெலான்டிஸ் நிறுவனத்தைப் பிஎஸ்ஏ குரூப்-ன் தலைவரான கார்லோஸ் டாவரீஸ் தலைமை வகிக்கிறார். இதேபோல் பியாட் கிரிஸ்லெர் நிறுவனத்தின் சிஇஓ மைக் மேன்லீ ஸ்டெலான்டிஸ் நிறுவனத்தின் வட அமெரிக்க வர்த்தகத்தை முழுமையாகத் தலைமையேற்று நடத்த உள்ளார்.
ஸ்டெலான்டிஸ் பிராண்டுகள்
தற்போது புதிதாக உருவாகியுள்ள ஸ்டெலான்டிஸ் கூட்டணி நிறுவனத்தின் கீழ் சுமார் 14 பிராண்டு கார்கள் உள்ளது. இதன் மூலம் உலகளவில் அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களையும் ஸ்டெலான்டிஸ் நிறுவனத்தால் கவர முடியும். இதன் படி ஸ்டெலான்டிஸ் நிறுவனத்தின் கீழ் Abarth, Alfa Romeo, Chrysler, Citroën, Dodge, DS Automobiles, Fiat/Fiat Professional, Jeep, Lancia, Maserati, Opel, Peugeot, RAM, Vauxhall ஆகிய பிராண்டுகள் உள்ளது.


Click it and Unblock the Notifications