எலான் மஸ்க். இந்த பெயரைக் கேட்ட உடனேயே நமக்கு நினைவுக்கு வருவது இவரின் டெஸ்லா பேட்டரி கார்கள் தான்.
பேட்டரி கார்கள் என்றாலே, வேகம் இருக்காது, உறுதியாக இருக்காது, சார்ஜிங் சிரமங்கள் இருக்கும், மைலேஜ் இருக்காது என்று பல குற்றம் குறைகளைச் சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.
எல்லாவற்றுக்கும் விடை கொடுக்கும் விதத்தில், பல தடை கற்களையும் படிக் கல்லாக்கி, டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களை, உலகப் புகழ்பெற்ற கார்களில் ஒன்றாக மாற்றி இருக்கிறார் எலான் மஸ்க்.
Model S
உதாரணத்துக்கு டெஸ்லாவின் எஸ் மாடல் கார், சிங்கில் சார்ஜில் 402 மைல் தூரம் பயணிக்கலாம். 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 163 மைல் பயணிக்கலாம். 2.3 நொடிக்குள் 60 மைல் வேகத்தில் கார் பறக்கும். உச்ச பட்ச வேகமாக 163 மைல் வேகத்தில் பயணிக்கலாம் என ஒரு புரட்சிகரமான காரை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க்.
இந்தியாவில் எப்போது
இந்தியாவில் இதுவரை எலான் மஸ்கின் டெஸ்லா கம்பெனி களம் இறங்கவில்லை. இந்தியாவில் இருக்கும் கூடுதல் வரி மற்றும் சில அரசு கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவில் களம் இறங்கவில்லை என, எலான் மஸ்கே சில வருடங்களுக்கு முன் சொல்லி இருந்தார். மீண்டும் எப்போது இந்தியாவுக்கு வருவீர்கள் என்கிற கேள்வியை, ட்விட்டரில் கேட்டு இருக்கிறார்கள் டெஸ்லா ரசிகர்கள்.
எலான் மஸ்க் பதில்
அடுத்த வருடம் நிச்சயமாக வருவோம் (Next year for sure) என ட்விட்டரில் சொல்லி இருக்கிறார் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க். இந்தியாவுக்கு எப்போது வருவீர்கள் என எலான் மஸ்கை கேட்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல. இந்த கேள்விக்கு எலான் மஸ்க் பதில் கொடுப்பதும் முதல் முறை அல்ல. ஆனால் இந்த முறை 2021-ல் கட்டாயம் வருவோம் எனச் சொல்லி இருப்பது, டெஸ்லா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
வெளியேறும் அமெரிக்க கம்பெனிகள்
சமீபத்தில் தான் ஹார்லி டேவிட்சன் கம்பெனி, இந்தியாவில் இருந்து வெளியேறுவதாகச் சொல்லி இருந்தது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் வெளியேறுவதாகச் சொல்லி இருந்தார்கள். ஃபோர்ட் கம்பெனியும், தன் வியாபாரத்தை மஹிந்திரா & மஹிந்திரா உடனான ஜாயிண்ட் வெஞ்சர் கம்பெனிக்கு மாற்றி விட்டு வெளியேறுவதாகச் சொல்லி இருக்கிறது. ஆக எல்லோரும் வெளியேறிக் கொண்டு இருக்கும் போது, டெஸ்லா உள்ளே வருவதாகச் சொல்லி இருப்பது, கூடுதல் கவனத்தை ஈர்க்கிறது.