உலகின் இரண்டு பெரிய பொருளாதார சக்திகள் என்றால் அது அமெரிக்க மற்றும் சீனா தான்.
இந்த இரண்டு பெரிய நாடுகளும், கடந்த 2018 முதல் தொடர்ந்து குழாய் அடிச் சண்டை கணக்காக அடித்துக் கொள்கிறார்கள்.
வர்த்தகப் போராகத் தொடங்கிய சண்டை, இப்போது கொரோனாவுக்கு காரணம் சீனா தான் பழி சொல்லும் அளவுக்கு என பரிணமித்து இருக்கிறது.
ட்ரம்ப் சாடல்
"அமெரிக்காவில் ஏற்பட்டு இருக்கும் உயிரிழப்புகள் மற்றும் கணக்கில் அடங்காத பொருளாதார சேதங்களுக்கு எல்லாம் சீனா தான் காரணம்" என வெளிப்படையாக குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறார் ட்ரம்ப். அவ்வளவு ஏன் அமெரிக்காவில் சிலர், சீன அரசு மீது நஷ்ட ஈடு எல்லாம் கேட்டு வழக்கு தொடுத்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
சீன உறவு
சில தினங்களுக்கு முன்பு, "அமெரிக்கா, சீனா உடனான உறவை, முழுமையாக முறித்துக் கொள்ள முடியும். அப்படி முறித்துக் கொண்டால், அமெரிக்காவுக்கு சுமார் 500 பில்லியன் டாலர் இறக்குமதி செலவுகள் குறையும்" எனச் சொல்லி உலக பொருளாதார அறிஞர்களே கவலைப்படும் அளவுக்கு பகீர் கிளப்பினார், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
சீனா தரப்பு
"அமெரிக்கா மற்றும் சீனாவில் வாழும் மக்களின் நலன் கருதியும், உலக அமைதிக்காகவும், உலகின் நிலைத்தன்மைக்காகவும், இரு நாடுகளும் தங்கள் உறவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்" என சீனாவின் வெளி விவகாரத் துறைப் பேச்சாளர் சா லிஜின் (Zhao Lijian) சொல்லி இருக்கிறார்.
கரம் நீட்டிய சீனா
மேலும் பேசியவர் "இந்த இக்கட்டான நேரத்தில் அமெரிக்காவும் சீனாவும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். கொரோனாவை எவ்வளவு விரைவாக வெல்ல முடியுமோ, அவ்வளவு விரைவாக வெல்ல வேண்டும்" என பாசிட்டிவாகப் பேசி இருக்கிறார்.
கை கோர்க்க வேண்டும்
அதோடு "கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது, உற்பத்தி ஆலைகளை பழைய படி செயல்பட வைப்பது என பல வேலைகள் இருக்கிறது. அதற்கு அமெரிக்காவும் சீனாவும் கை கோர்க்க வேண்டும். (US to meet halfway with China)" எனச் சொல்லி இருக்கிறார் சீன வெளி விவகாரத் துறை பேச்சாளர்.
டிரேட் டீல்
கடந்த 2018-ம் ஆண்டு, சீன பொருட்களுக்கு, அமெரிக்கா முதலில் கூடுதல் வரி விதித்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அமெரிக்க பொருட்களுக்கு சீனா கூடுதலாக வரி விதித்தது. இந்த கூடுதல் வரி விதித்து சண்டை போட்டதைத் தான் நாம் டிரேட் வார் என்கிறோம்.
டிரேட் டீல் பாகம் 1
இந்த வர்த்தகப் போரை ஒரு சுமூகமான முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா & சீனா, டிரேட் டீலின் முதல் பாகத்தை, கடந்த ஜனவரி 2020-ல் தான் கையெழுத்து போட்டார்கள். இந்த டிரேட் டீலின் முதல் பாகத்தின் படி, சீனா, அமெரிக்காவிடம் இருந்து 200 பில்லியன் டாலருக்கு பொருட்களை வாங்க வேண்டும்.
நிலைமை மோசம்
இப்போது இருக்கும் மோசமான உலக பொருளாதார சூழலில் சீனா, சொன்ன படி அமெரிக்காவிடம் இருந்து 200 பில்லியன் டாலருக்கு பொருட்களை வாங்குமா..? எனத் தெரியவில்லை. இந்த கொரோனாவால் நாளுக்கு நாள் பொருளாதார மற்றும் அரசியல் சூழல் மோசமாகிக் கொண்டே இருக்கிறது என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.
கை கொடுக்குமா?
இருப்பினும் அமெரிக்கா, சீனாவை குறைசொல்லி முறைத்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் சீனாவோ, ஆனது எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் இப்போது ஆக வேண்டிய வேலையைப் பார்ப்போம் என கரம் நீட்டுகிறது. கை கொடுக்குமா அமெரிக்கா..?