கச்சா எண்ணெய் சந்தையின் இரண்டு பெரிய தலைகள் என்றால் அது சவுதி அரேபியா மற்றும் ரஷ்ய நாடுகள் தான். தற்போது இரு நாடுகளுக்கு மத்தியில் நடந்து வரும் வரலாறு காணாத வர்த்தகச் சந்தைக்கான சண்டை அமெரிக்கப் போன்ற வல்லரசு நாடுகள் உட்பட அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.
ஏற்கனவே கொரோனா தாக்குதலால் கச்சா எண்ணெய் தேவை உலக நாடுகளில் பெரிய அளவில் குறைந்திருக்கும் நிலையில், உலக நாடுகளின் பொருளாதாரமும் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதன் வாயிலாகத் தற்போது உலகக் கச்சா எண்ணெய் சேவை 2009ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக 2020ல் சரிந்துள்ளது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் 1991ஆம் ஆண்டு வளைகுடா போர் காலத்தில் கச்சா எண்ணெய் அதிகளவிலான சரிவைச் சந்தித்தது, இதேபோன்ற சரிவு தான் தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்த விலை போரின் நோக்கம் என்ன..? இதனால் யாருக்கு பாதிப்பு..? இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இதனால் என்ன லாபம்..? போன்ற அனைத்து கேள்விக்கும் நச்சுன்னு பதில்..!!
கச்சா எண்ணெய் விலை குறைய என்ன காரணம்..?
ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூலம் உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் தேவை மற்றும் பயன்பாடு அதிகளவில் குறைந்து, அதன் விலையும் 69 டாலரில் இருந்து 50 டாலராகக் குறைந்தது.
இந்நிலையில் விலையை மேம்படுத்தச் சவுதி அரேபியா, ரஷ்யா மற்றும் OPEC அமைப்புகள் இணைந்து 2.2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை மார்ச் மாதம் வரையில் குறைத்தது. இந்நிலையில் OPEC அமைப்பு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டுக் கூடுதலாக 1.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது.
இதற்கு ரஷ்யா கடுமையாண எதிர்ப்பு தெரிவித்து உற்பத்தியை குறைக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
சவுதி அவசர முடிவு..
ரஷ்யாவின் எதிர்ப்பை ஏதிர்கொள்ள முடியாத சவுதி, ரஷ்யாவின் வர்த்தகத்தைச் சீர்குலைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு, இந்த மாதம் சவுதி அரேபியா ஒரு நாளுக்கு 9.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் மட்டும் உற்பத்தி செய்து வந்த நிலையில் தற்போது எப்போதும் இல்லாத வகையில் ஒரு நாளுக்கு 12 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் உள்நாட்டு சந்தையை விடுத்து வெளிநாடுகள் அதாவது ஆசியா, ஐரோப்பா, அமெரிக்க நாடுகள் பிற கச்சா எண்ணெய் விநியோக நாடுகளை விடுத்து சவுதி நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் கடந்த 20 வருடத்தில் இல்லாத சலுகையில் விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது.
இங்குத் தான் பிரச்சனை வெடிக்கத் துவங்கியது.
ரஷ்யாவின் மறுப்புக்குப் பின்னால் இருக்கும் காரணம்..!!
கச்சா எண்ணெய் உற்பத்தியில் பெரும் தலைகளாக இருக்கும் ரஷ்யா மற்றும் சவுதியின் உற்பத்தி குறைப்பு, விலை கட்டுப்பாட்டின் காரணமாக அமெரிக்காவின் கச்சா எண்ணெய் அதிக லாபத்திற்குச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் உற்பத்தி குறைப்பின் மூலம் கண்டிப்பாகக் கச்சா எண்ணெய் விலை உயரும். இது கண்டிப்பாக அமெரிக்காவிற்குச் சாதகமாக அமையும் இந்த வாய்ப்பை அமெரிக்காவிற்குக் கண்டிப்பாக உருவாக்கித் தர கூடாது என ரஷ்யா உற்பத்தி குறைப்பிற்கு ஒப்புதல் தரவில்லை.
சவுதி மற்றும் ரஷ்ய பொருளாதாரம்
இரு நாடுகளும் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய்-ஐ அதிகளவில் நம்பியிருக்கிறது. ஆனால் ரஷ்யா வேறு துறைகளின் மூலம் அதிக வருவாய் ஈட்டும் வழிகளைக் கொண்டு உள்ளதால் பேரலுக்கு 42 டாலர் விலையும் தற்போது இருக்கும் வர்த்தகச் சந்தையும் போதும் என முடிவு செய்தது.
ஆனால் சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விற்பனையை நம்பி தான் மொத்த பொருளாதாரமும் உள்ளது. இதனால் ஒரு பேரலுக்கு 80 டாலர் வரையில் உயர்த்த வேண்டும் எனச் சவுதி அரேபியா அடம்பிடிக்கிறது.
இந்நிலையில் சவுதி அரேபியா தற்போது எடுத்துள்ள முடிவின் மூலம் இரு நாடுகளுக்கும் பெரிய நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
அமெரிக்கக் கச்சா எண்ணெய்
அமெரிக்கா - ரஷ்யா இடையே பல பிரச்சனைகள் இருப்பது எல்லோருக்கும் தெரியும், சமீபத்தில் கூட வெனிசுலா கச்சா எண்ணெய்யை வெளிநாட்டுச் சந்தையில் விற்பனை செய்ய ரஷ்யாவின் அரசு கச்சா எண்ணெய் நிறுவனமான Rosneft உதவி செய்த போது அமெரிக்கா ரஷ்யா மீது தடை விதித்தது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தான் ரஷ்யா சவுதியின் முடிவை ஏற்காமல் மறுப்புத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவிற்குப் பாதிப்பு
தற்போது ஏற்பட்டுள்ள விலை சரிவின் காரணமாக அமெரிக்காவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் சந்தையும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஒருபக்கம் உற்பத்தி குறைக்க அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது, இதனால் வர்த்தகம் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் அமெரிக்கக் கச்சா எண்ணெய் சந்தையின் வேலைவாய்ப்புத் தற்போது மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் இலக்கு
ஆகமொத்தம் ரஷ்யாவின் இலக்கு என்னவோ அது நடந்துவிட்டாலும், சவுதிக்குத் தான் இதன் மூலம் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. சரி இதனால் இந்தியாவிற்குக் கிடைக்கும் லாபம் என்ன தெரியுமா..?
இந்தியா
நாம் எல்லோருக்கும் தெரிந்ததைப் போல் இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையைச் சுமார் 80 சதவீதம் வரையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதன் வாயிலாக மட்டுமே தீர்த்து வருகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 30 சதவீதம் வரையில் சரிந்தால் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்காகச் செலவிடும் தொகை அதிகளவில் குறையும்.
இதனால் நாட்டின் செலவுகள் குறைந்து டாலர் இருப்பு அளவில் கணிசமான உயர்வு ஏற்படும். ஆனால் சாமானியர்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலை இதன் மூலம் குறையுமா என்றால் அது மோடி அரசின் கையில் தான் உள்ளது.