பொதுவாக பலருக்கும் வார இறுதி என்றாலே மிக குதூகலமாக வேலை பார்ப்பார்கள். ஏனெனில் அடுத்த நாள் விடுமுறை என்பதாலேயே அது ஒரு சொல்ல முடியா சுறுசுறுப்பையும் , சந்தோஷத்தினையும் கொடுக்கும். அதுவே விரைவில் நன்றாக வேலையை முடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தினை கொடுக்கும். இதனால் பரபரப்பாக வேலை பார்ப்பார்கள். இதனை நம்மில் பலரும் அனுபவித்திருக்கலாம்.
இதே விடுமுறை நாளில் வேலை என்றால், அந்த வாரம் முழுக்கவே வேலையில் ஒரு சோம்பல் இருக்கும். சொல்லப்போனால், அடுத்த விடுமுறை எப்போது வரும் என எதிர்பார்ப்போம்.
எப்போது விடுமுறை கிடைக்கும். வாரத்தில் ஒரு நாள் விடுமுறை நாளன்று எந்த பரப்பரப்பும் இல்லாமல், நிம்மதியாக சாப்பிட்டுவிட்டு, மதிய வேளையில் ஒரு குட்டி தூக்கம், மாலை குடும்பத்தினருடன் வெளியில் செல்வதுமே பலரின் முக்கிய பணியாக இருக்கும்.
அன்லிமிடெட் லீவு
ஆனால் இப்படிப்பட்டவர்களுக்கு நியூசிலாந்து நிறுவனத்தின் அறிவிப்பானது கடுப்பேற்றலாம். அப்படி என்ன தான் அறிவிப்பினை கொடுத்துள்ளது வாருங்கள் பார்க்கலாம்.
நியூசிலாந்தினை சேர்ந்த தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்று, அதன் ஊழியர்களுக்கு வரம்பற்ற விடுமுறையை (Unlimited leaves) அளிக்க முன் வந்துள்ளது.
ஊழியர்கள் செம ஹேப்பி
ஒவ்வொரு நிறுவனமும் ஆண்டுக்கு இத்தனை நாட்கள் தான் விடுமுறை அளிக்கப்படும் என்று நிர்ணயம் செய்திருப்பார்கள். ஆனால் நியூசிலாந்தினை சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்று அன்லிமிடெட் லீவு வழங்கப்படும் என ஊழியர்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்துள்ளது.
நம்பிக்கை ( high trust model )
இத்தகைய சூப்பரான அறிவிப்பினை நியூசிலாந்தினை சேர்ந்த ஆக்ஷன் ஸ்டெப் என்ற ஐடி நிறுவனம் தான் கொடுத்துள்ளது. இதனை அந்த நிறுவனம் உயர் நம்பிக்கை மாடல் ( high trust model ) என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நிறுவனம் ஊழியர்களுக்கு விடுமுறையில் விதித்திருந்த கட்டுப்பாட்டினை நீக்கியுள்ளது. ஆக இந்த அறிவிப்பினையடுத்து ஊழியர்கள் விரும்பும் வரையில் விடுமுறையில் செல்லலாம் என்றும் அறிவித்துள்ளது.
தேவையான விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்
இந்த விடுமுறையால் ஊழியர்கள் தங்களுக்கு தேவையான விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம். திரும்பி வந்து எங்களுக்காக சிறந்த முறையில் வேலை செய்ய நிறுவனம் அனுமதிக்கிறது என்று இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வாழ்க்கை + வேலை
இது குறித்து இந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்டீவ் மாஹே, எங்கள் ஊழியர்களுக்கு வரம்பற்ற விடுமுறையை அளிக்க நாங்கள் முன் வந்துள்ளோம். அவர்களது உடல் நிலை, மகப்பேறு என அனைத்து விடுமுறைகளும் இதில் அடங்கும். நாங்கள் ஒரு குழுவாக உள்ளோம். ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்துள்ளோம். வாழ்க்கையும், வேலையையும் சரி விகிதத்தில் வைத்துக் கொள்ளும்போது, மிகச்சிறந்த பணி வெளிப்படும் என நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
வாரத்தில் 4 நாள் வேலை
சில ஆண்டுகளுக்கு முன்பு Rocketwerkz என்ற நியூசிலாந்து நிறுவனமும் இதே போன்ற வரம்பற்ற விடுமுறை என்ற திட்டத்தினை வழங்கியது நினைவுகூறத்தக்கது. இந்த திட்டத்தினை பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ஊக்குவித்தார் என்பதும் நினைவு கூறத்தக்கது.
மேலும் அவர் வாரத்தில் 4 வேலை என்பதை நிறுவனங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை பரிந்துரை செய்திருந்தார்.