இணையப் பொழுதுபோக்குத் தளத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ள டிக்டாக், கடந்த சில வருடங்களாகவே பல்வேறு சிக்கல்களையும், அரசின் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகிறது.
இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்பு அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்த டிக்டாக் லாக்டவுன் நேரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையத் துவங்கியது.
ஆனால் தகவல் பாதுகாப்பு என்ற பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டது.
டிக்டாக் செயலி
டிக்டாக் செயலி மீது தகவல் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகமாக இருந்த காரணத்தாலும், இந்நிறுவனம் அமெரிக்க மக்களின் தரவுகளைத் திரட்டுவதிலும், சேமிப்பதிலும் அமெரிக்க அரசுக்கு பல்வேறு சந்தேகமும், கேள்விகளும் இருந்தது.
3 ஆப்ஷன்
இதனால் டிக்டாக் செயலியை தடை செய்வது அல்லது அமெரிக்க நிறுவனங்களுக்கு விற்பனை செய்துவிட்டுச் சீனா தொடர்பை துண்டித்து விட்டு இயங்குவது அல்லது அரசு கூறும் விதிமுறைகளை எவ்விதமான சமரசமின்றி நடைமுறைப்படுத்துவது என்ற 3 ஆப்ஷனை முன்வைத்தது. இதற்கான முடிவைத் தான் தற்போது டிக்டாக் நிர்வாகம் எடுத்துள்ளது.
அமெரிக்க அரசு மற்றும் டிக்டாக்
அமெரிக்க அரசு மற்றும் டிக்டாக் இணைந்து ஒரு திட்டத்தைத் தீட்ட முடிவு செய்துள்ளது, இத்திட்டத்தின் கீழ் டிக்டாக் நிறுவனம் தனது டேட்டா செக்யூரிட்டி மற்றும் நிர்வாகத்தைச் சீனா தாய் நிறுவனம் பையிட்டான்ஸ்-ன் எவ்விதமான உதவிகளும் இல்லாமல் இயங்க உள்ளது.
நெருக்கடி
இதன் மூலம் டிக்டாக் நிறுவனத்தை அமெரிக்க நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நெருக்கடியில் இருந்து தப்பிக்க உள்ளது. இதற்காக டிக்டாக் மற்றும் பைடன் அரசும் ஏற்கனவே ஆரம்பக்கட்ட ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், விரிவான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை இரு தரப்பும் ஆலோசனை செய்து வருகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை
தற்போது இந்த ஒப்பந்தம் குறித்தும், முடிவுகள் குறித்தும் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிக்டாக், பையிட்டான்ஸ், அமெரிக்க அரசு தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. மேலும் 2 வருடத்திற்கு முன்பு அமெரிக்க அரசு டிக்டாக்-ஐ சீன நிறுவனத்திலிருந்து தனியாகப் பிரித்து இயக்க உத்தரவிட்டது.