வர்த்தகப் போர் இந்த வார்த்தையை கேட்டு இருப்பீர்கள் அல்லது பத்திரிகைகளில் படித்து இருப்பீர்கள். அதற்கு முழு முதல் காரணம் அமெரிக்காவும் சீனாவும் தான்.
சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப் போரைப் பற்றிய கதையை தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் குறைந்தபட்சம் 2018-ம் ஆண்டு வரை பின் நோக்கிப் போக வேண்டும்.
2018-ம் ஆண்டில் சீன பொருட்கள் மீது பில்லியன் டாலர், கணக்கில் வரி விதித்தது அமெரிக்கா. அதற்கு சீனாவும் தன் தரப்பில் அமெரிக்க பொருட்கள் மீது பில்லியன் டாலர் கணக்கில் வரி விதித்தது.
சமாதான உடன்படிக்கை
உலகின் இரு பெரும் பொருளாதாரங்களும் ஒருவர் மீது ஒருவர் மாற்றி மாற்றி வரி விதித்துக் கொண்டார்கள். இந்த போரைத் தான் வர்த்தகப் போர் என்கிறோம். உலகின் இரண்டு சக்தி வாய்ந்த நாடுகள், இப்படி தரை லோக்கலாக இறங்கி அடித்துக் கொண்டதால் உலக பங்குச் சந்தைகள் எல்லாம் ஆட்டம் கண்டன. ஒட்டு மொத்த உலக ஏற்றுமதி இறக்குமதி கூட சல சலப்புக்கு உள்ளானது. இதை தீர்த்துக் கொள்ள, இரு தரப்பும் சேர்ந்து ஒரு டிரேட் டீல் கொண்டு வந்தார்கள்.
வர்த்தக உடன்படிக்கை பாகம் 1 (Trade Deal Phase 1)
இந்த 2020-ம் ஆண்டில் நடந்த உருப்படியான ஒரு சர்வதேச காரியம் என்றால் அது இந்த டிரேட் டீல் தான். கடந்த ஜனவரி மாதத்தில் சீனா & அமெரிக்கா டிரேட் டீலின் முதல் பாகத்தை இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டு கையெழுத்து போட்டார்கள். அந்த டீலின் படி, சீனா, அமெரிக்காவிடம் இருந்து 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும், என்பது தான் டீலின் மிக முக்கிய அம்சம். ஆனால் கையெழுத்து போட்ட பின்னும் வர்த்தகப் போர் ஓயவில்லை.
ட்ரம்ப் மிரட்டல் - ரத்து செய்துவிடுவேன்
சில மாதங்களுக்கு முன்பு "சீனா முறையாக டிரேட் டீலில் சொல்லி இருப்பது போல அமெரிக்க பொருட்களை வாங்க வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி அமெரிக்க பொருட்களை, சீனா வாங்க மறுத்தால், மொத்த டிரேட் டீலையும் ரத்து செய்து விடுவேன்" என மிரட்டல் விடுத்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
இப்போதும் அதே தொனி
இப்படி ஏகப்பட்ட மிரட்டல்கள் மற்றும் கொரோனா வைரஸ் பிரச்சனைகளுக்குப் பின், டிரேட் டீலின் இரண்டாம் பாகம் குறித்து பத்திரிகையாளர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு "நான் இப்போதைக்கு சீனா உடன் பேச விரும்பவில்லை" என முகத்தில் அடித்தாற் போலச் சொல்லி இருக்கிறார்.
வைரஸால் அடித்துவிட்டார்கள்
"நாம், சீனா உடன் ஒரு நல்ல டிரேட் டீலைச் செய்தோம். டிரேட் டீலின் முதல் பாகத்தில் கையெழுத்து போட்ட பேனா மையின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் சீனர்கள் கொரோனா வைரஸால் நம்மைத் தாக்கிவிட்டார்கள்" என சீனா மீது மீண்டும் குற்றம் சுமத்தி இருக்கிறார். சீனாவை, சர்வதேச அரங்குகளிலும், மீடியாக்களில் டிரம்ப் தொடர்ந்து வைத்து செய்து கொண்டு இருக்கிறார்.
ஹாங்காங் தன்னாட்சி சட்டம் (Hongkong Autonomy Act)
இந்த புதிய அமெரிக்க சட்டத்தால், ஹாங்காங்கின் அடிப்படை விதிகளை (தன்னாட்சி) பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் சீன அதிகாரிகள், ஹாங்காங் காவல் துறையினர்கள், அவர்களோடு அதிக பணப் பரிமாற்றங்களைச் செய்யும் வங்கிகள் என பலர் மீதும் தடை விதிக்க வழி வகை செய்கிறதாம். அதோடு இனி ஹாங்காங் மக்கள், அமெரிக்கா விசா வாங்குவதும் மிகவும் சிரமம் தான். அதே போல அமெரிக்க மக்களும் இனி விசா இல்லாமல் ஹாங்காங்குக்குச் செல்ல முடியாது.
கிடுக்கிப் பிடி
மேலே சொன்னது போல ஹாங்காங்கின் தன்னாட்சியை பாதிக்கும் நிறுவனங்களோடு, சீன வங்கிகள் தொடர்ந்து வங்கி பணப் பரிமாற்றங்களைச் செய்தால், அது அமெரிக்காவின் தடையில் சென்று முடியும். அதன் பிறகு அமெரிக்க டாலர் பரிமாற்றங்களை மேற்கொள்வதும், அமெரிக்காவில் இயங்குவதும் சிரமமாகிவிடும். எனவே சீன வங்கிகள், ஹாங்காங்கை வளைக்கப் போராடும் சீன அரசின் நடவடிக்கைகளுக்கு உதவுவதா அல்லது உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தில் இயங்கி டாலர் கரன்ஸி பரிமாற்றங்களைச் செய்வதா என்பதை தீர்மானிக்க வேண்டிய சூழலில் இருக்கிறார்கள்.
ட்ரம்பின் அதிரடி
இப்படி சீனாவுக்கு தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நெருக்கடி மேல் நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருக்கிறார். சீனாவின் தன் தரப்பில் இருந்து பதிலடி கொடுப்பேன் என கடுமையாக எச்சரித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். சில அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து இருக்கிறார்கள். இந்த இரண்டு நாடுகளும் எப்போது சமாதானமாகப் போவார்களோ தெரியவில்லை. எல்லாம் உலக பொருளாதாரத்துக்கு தான் வெளிச்சம்.