கொரோனா வைரஸ் அமெரிக்காவைத் தான் அதிகம் தாக்கி பிரட்டி எடுத்துக் கொண்டு இருக்கிறது.
இந்த கோபத்தாலேயே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீன வைரஸ், சீனாவில் உருவான வைரஸ் என எங்கு சுற்றினாலும் அங்கு வந்துவிடுகிறார்.
அதோடு சீனா மீதான கோபத்தை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
சமீபத்தைய மிரட்டல்கள்
சீனா இந்த கொரோனா வைரஸை காரணம் காட்டி டிரேட் டீலில் சொல்லப்பட்ட விஷயங்களைச் செய்யாமல் இருக்கக் கூடாது. முறையாக அமெரிக்க பொருட்களை வாங்க வேண்டும் இல்லை என்றால், ஒட்டு மொத்த டிரேட் டீலையும் ரத்து செய்து விடுவேன் என மிரட்டினார்.
கூடுதல் வரி
அதோடு, சீனா மீது என்னால் கூடுதலாக வரி விதிக்க முடியும். அதையும் செய்வேன் என தொடர்ந்து மிரட்டிக் கொண்டே இருக்கிறார். சீனாவும் தன் பங்குக்கு பதில்களைச் சொல்லி சமாளித்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் ட்ரம்பின் கோபம் தணிந்ததாகத் தெரியவில்லை.
உறவு ரத்து
நேற்று மே 14, 2020 வியாழக்கிழமை, Fox Business சேனலில் பேட்டி கொடுத்த அதிபர் ட்ரம்ப் "நம்மால் நிறைய செய்ய முடியும். சீனா உடனான உறவை முழுமையாக ரத்து செய்து கொள்ள முடியும்" எனச் சொல்லி எல்லோர் மனதிலும் ஒரு பகீர் பயத்தைக் கிளப்பி இருக்கிறார்.
விளைவுகள்
ஒருவேளை, அமெரிக்கா, சீனா உடனான உறவுகளை முழுமையாக முறித்துக் கொண்டால், அமெரிக்காவுக்கு 500 பில்லியன் டாலர் மிச்சமாகும் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பே விளக்கம் கொடுத்து இருக்கிறார். ட்ரம்ப், சீனாவில் இருந்து, அமெரிக்கா இறக்குமதி செய்யும் 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களைச் சொல்கிறார் போல என்கிறது பிசினஸ் இன்சைடர் பத்திரிகை.
சீனா மீது வருத்தம்
சீனாவின் வுகான் நகரத்தில் உருவான, கொரோனா வைரஸை, சீனா சரியாக கட்டுப்படுத்தவில்லை. சீனா மீது எனக்கு மிகப் பெரிய வருத்தம் இருக்கிறது எனவும் சொல்லி இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்ப். அதிபர் ட்ரம்ப் சொல்வது போல ஒரே அடியாக சீனா உடன் உறவை முறித்துக் கொள்ள முடியுமா..?
அமெரிக்கா அடி வாங்கும்
அமெரிக்கா ஒரே அடியாக சீனா உடனான உறவை முறித்துக் கொள்ள முடியாது. காரணம், இன்னமும் அமெரிக்காவின் வர்த்தகத்தில் கணிசமான அளவு சீனாவை நம்பித் தான் இருக்கிறது. சீனா உடனான உறவு முறிவு அமெரிக்க பொருளாதாரத்தை பயங்கரமாக பாதிக்கும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
ரிபப்ளிகன் ஆதரவு
அமெரிக்காவின் அரசியல் கட்சிகளில் ஒன்றான ரிபப்ளிகன் கட்சியினர், அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வார்த்தைகளை தொடர்ந்து ஆமோதித்துக் கொண்டு இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு, சீனாவை விலை கொடுக்கச் சொல்லுங்கள் எனவும் ரிபப்ளிகன் கட்சியினர்கள் கொக்கரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அமெரிக்க அரசு
சீனாவிடம் நஷ்ட ஈடு கேட்டு தண்டிக்க, அமெரிக்க அரசு நிர்வாகம், பல திட்டங்களை ஆலோசித்துக் கொண்டு இருக்கிறார்களாம். இல்லை என்றால் சீனாவுக்கு இருக்கும் sovereign immunity-ஐ பறிக்கவும் ஆலோசித்துக் கொண்டு இருக்கிறார்களாம். இந்த sovereign immunity பறிக்கப்பட்டால் அமெரிக்க போல பால அரசுகளும், சீனா மீது Lawsuit (வழக்கு) போட வழி வகுத்து விடுமாம்.
மோசம்
ஏற்கனவே அதிபர் ட்ரம்ப் பதவிக்கு வந்ததில் இருந்து, சீனா - அமெரிக்கா இடையிலான உறவு, நாளுக்கு நாள் படு மோசமாகிக் கொண்டு இருக்கிறது. இதில் இப்போது சீனா உடனான உறவை முழுமையாக வெட்டிக் கொள்ள முடியும் எனச் சொல்லி, பிரச்சனையை மேலும் ஆழப்படுத்தி இருக்கிறார் ட்ரம்ப். சீனா இதுவரை ட்ரம்பின் பேச்சுக்கு பதிலளிக்கவில்லை.
பங்குச் சந்தைகள்
ட்ரம்பின் இந்த வார்த்தைகள் ஒட்டு மொத்த உலக சந்தைகளுக்கும் ஒரு ஷாக் கொடுத்து இருக்கிறது. நேற்று மே 14, 2020 லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய சந்தைகள் எல்லாமே 1.6 - 2.7 % சரிந்து இருக்கிறது. இன்று மே 15, 2020 ஆசிய சந்தைகளில் சிங்கப்பூர், ஹாங்காங், இந்தோனேசியா, தாய்லாந்து, சீனா, இந்தியா என பல நாட்டு பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.