ஒரு பக்கம் உலக அளவில் அமெரிக்காவும் சீனாவும் ஒருவரை ஒருவரை கடுமையாக தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். மறு பக்கம், அமெரிக்கா, சீனா சீண்டும் எல்லா நாடுகளோடும் நல்லுறவை உறுதிப்படுத்த முயற்சித்துக் கொண்டு இருக்கிறது.
சீனா ஒரண்டை இழுத்து இருக்கும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளையும் ஒன்று திரட்டும் வேலையிலும் அமெரிக்கா இருக்கிறது.
இதற்கு மத்தியில் தன் சொந்த நாட்டு பொருளாதாரத்தையும் மேம்படுத்த வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்க மக்களின் வேலை வாய்ப்புகள்.
முந்தைய விசா தடை
கடந்த ஜூன் 2020 காலத்தில், இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் H-1B விசா உட்பட பல்வேறு விசாக்களுக்கு, இந்த ஆண்டு இறுதி வரை தடை விதித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இதனால் புதிதாக யாரும் H-1B வாங்கி அமெரிக்காவுக்கு போக முடியாது. இது உள்நாட்டில் ஓரளவுக்காவது வேலை வாய்ப்பு பிரச்சனைகளை சரி செய்யும் என நம்புகிறது அமெரிக்க அரசு.
புதிய தடை
அது ஒரு பக்கம் இருக்க, இப்போது H-1B விசா உடன், அமெரிக்காவிலேயே இருப்பவர்களுக்கு, ஒரு புதிய தடை விதித்து இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்ப். அமெரிக்க மத்திய அரசின் ஒப்பந்த வேலைகளில் (federal government contracts), H-1B விசாதாரர்கள் வேலைக்கு எடுக்கக் கூடாது, அவுட் சோர்ஸ் செய்யக் கூடாது, காண்டிராக்ட் விடக் கூடாது என தடை செய்து இருக்கிறார். இதற்கு ஒரு செயல் ஆணையை (Executive Order) கடந்த திங்கட்கிழமை கையெழுத்திட்டாராம்.
அமெரிக்கர்களுக்கு வேலை
இந்த புதிய தடை உத்தரவால், அமெரிக்க மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க மத்திய அரசு அமைப்புகள், ஹெச் 1 பி விசா ஊழியர்களாக அமெரிக்காவில் இருப்பவர்களை விட, அமெரிக்கர்களுக்கு (அமெரிக்க ஊழியர்களுக்கு) முன்னுரிமை தருவதை உறுதி செய்யும் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ட்ரம்ப் தரப்பு
இன்னும் ஒரு சில மாதங்களில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தன் அதிபர் தேர்தலை சந்திக்க இருக்கிறார். இந்த தேர்தலில் தன் தரப்பை வலுப்படுத்தும் விதித்தில் இந்த தடை உத்தரவுகள் இருக்கின்றன. "வேலை வாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கும், அமெரிக்க ஊழியர்களுக்கு முதலில் கொடுக்கப் பட வேண்டும் என நம்புகிறோம்" எனச் சொல்லி இருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்.
Tennessee Valley Authority
சமீபத்தில் தான், அமெரிக்க மத்திய அரசின் அமைப்புகளில் ஒன்றான டென்னசி பள்ளத்தாக்கு ஆணையம் (Tennessee Valley Authority), தன் டெக்னாலஜி சார்ந்த 20 சதவிகித வேலைகளை, வெளிநாட்டு கம்பெனிகளுக்கு அவுட் சோர்ஸ் செய்ய இருப்பதாகச் சொன்னது. இதனால் அடுத்த 5 ஆண்டு காலத்தில் சுமாராக 200 அமெரிக்க ஊழியர்கள் தங்கள் வேலை வாய்ப்புகளை இழக்கலாம் என்றும் செய்திகள் வெளியாயின.
வேலை காலி
இந்த செய்திக்குப் பின், டென்னசி பள்ளத்தாக்கு ஆணையம் (Tennessee Valley Authority) நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் குழுவில் ஒருவரையும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறாராம். இதனைத் தொடர்ந்து தான் தற்போது ட்ரம்பின் ஹெச் 1 பி விசாதாரர்களுக்கான தடை உத்தரவு வெளியாகி இருக்கிறது.
2000 ஹெச் 1 பி விசாதாரர்கள்
2019-ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், அமெரிக்க மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் சுமாராக 2,000 ஹெச் 1 பி விசாதாரர்கள், ஊழியர்களாக வேலையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்களாம். இந்த விவரங்கள் தொழிலாளர் துறை தரவுகளில் இருப்பதாக ப்ளூம்பெர்க் சொல்லி இருக்கிறது.
நேஷனல் ரிஸ்க்
இந்த கொரோனா பிரச்சனைக்கு மத்தியில், வேலை வாய்ப்புகளை அவுட் சோர்ஸ் செய்வது நல்லதல்ல. ஏற்கனவே இந்த கொரோனா பிரசனையால் பல மில்லியன் அமெரிக்க வேலை வாய்ப்புகள் பறி போய்விட்டது என, அந்த தடை உத்தரவு சொல்கிறதாம். அதோடு, தற்போது இருக்கும் சூழலில், சென்சிடிவ் தரவுகளை கையாளும் ஐடி வேலைகளை அவுட் சோர்ஸ் செய்வது, தேசத்திற்கு ரிஸ்க் தான் என்றும் தடை உத்தரவு சொல்கிறதாம்.