பிரிட்டன் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் எதிர்கொண்டு வரும் இதேவேளையில் கொரோனா தொற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் வாயிலாகப் பைஃசர்- பயோன்டெக் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்தது, அடுத்த வாரமே பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் பிரிட்டன் நாட்டின் இரு முக்கிய ரீடைல் நிறுவனங்கள் வர்த்தகச் சரிவை தாக்குப்பிடிக்க முடியாமல் திவாலாகியுள்ளது. இதனால் சுமார் 25,000 பேர் தங்களது வேலைவாய்ப்புகளை இழக்க உள்ளனர்.
இந்தியப் பொருளாதாரத்தைப் போலவே பிரிட்டன் பொருளாதார வளர்ச்சி கடந்த 3 காலாண்டுகளாகத் தொடர் சரிவில் இருக்கும் காரணத்தால் பொருளாதார மந்தநிலைக்கு (ரெசிஷன்) தள்ளப்பட்டுள்ளது.
ரீடைல் ஆடை நிறுவனங்கள்
பிரிட்டன் நாட்டில் நீண்ட காலம் ரீடைல் சந்தையில் ஆடை விற்பனை செய்யும் Debenhams மற்றும் Arcadia ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகப் போட்டியை தாக்குப்பிடிக்க முடியாமலும், கொரோனாவால் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்புகளைச் சமாளிக்க முடியாத காரணத்திற்காகவும் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
இதனால் இவ்விரு பிராண்டுகளின் முடக்கத்தால் பிரிட்டன் நாட்டில் சுமார் 25,000 ஊழியர்கள் தங்களது வேலைவாய்ப்புகளை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
Debenhams நிலை
பிரிட்டன் நாட்டின் ரீடைல் ஆடை விற்பனை சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. மேலும் நிறுவனத்தைக் காப்பாற்ற போதுமான நிதியும் கிடைக்காத காரணத்தால் வர்த்தகம் மூடப்படுகிறது என Debenhams தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் மூடப்படுவதால் சுமார் 12,000 பேர் வேலைவாய்ப்புகளை இழக்க உள்ளனர்.
Arcadia நிறுவனம்
கொரோனா பாதிப்புக்கு முன்பே மோசமான வர்த்தக நிலையை எதிர்கொண்டு வந்த Arcadia நிறுவனம் கொரோனாவிற்குப் பின் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு நிறுவனம் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
இந்நிறுவனம் மூடப்படும் காரணத்தால் சுமார் 13,000 பேர் வேலைவாய்ப்புகளை இழக்க உள்ளனர்.
கொரோனா தடுப்பூசி
பிரிட்டன் நாட்டின் மிகப்பெரிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் நிறுவனங்கள் திவால் ஆவது பிரிட்டன் மக்களுக்கு வேதனை அளித்தாலும், பைஃசர்- பயோன்டெக் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால் பிரிட்டன் மக்களுக்கு அடுத்த வாரம் முதல் பயன்படுத்தப் பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.