உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் மூன்றாம் உலகப்போரே வரலாமோ என்ற அளவுக்கு பதற்றமானது நிலவி வருகின்றது. சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிட்டு வரும் வீடியோக்களை பார்க்கும்போது நம்மையும் அறியாமல் கண்ணீர் வருகின்றது.
இதற்கிடையில் பல நாடுகளும் உதவிகளை வாரி வழங்கி வருகின்றன. சில நாடுகள் ராணுவ உபகரணங்களை வழங்கி வருகின்றன. சில நாடுகள் நிதியினையும் வாரி வழங்கி வருகின்றனர்.
இதே கிரிப்டோ முதலீட்டாளர்கள் 11 மில்லியன் டாலர்காள் நன்கொடையாக கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மூன்று வழிகளில் தாக்குதல்
கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வருகின்றது. இது போர் தாக்குதல் அல்ல, இது ராணுவ நடவடிக்கை என கூறி வருகின்றது. குறிப்பாக உக்ரைனின் தலை நகரில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. குறிப்பாக வான் வழி தாக்குதல், ஏவுகணை தாக்குதல், தரைவழி தாக்குதல் நடத்தி வருகின்றது.
பிட்காயின்
பிட்காயின் மூலம் 11 மில்லியன் டாலர் வரை நன்கொடையாக பெற்றுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ குழுக்கள், ஆன்லைன் வாலட் மூலமாக பிட்காயினை நன்கொடையாக வாரி வழங்கியுள்ளன. பிபிசி அறிக்கையின் படி 4000 நன்கொடைகள் பெறப்பட்டுள்ளது. யாரென்றே தெரியாத நபர் ஒருவர் 3 மில்லியன் டாலர் மதிப்பிலான பிட்காயினை நன்கொடையாக அளித்துள்ளதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
கிரிப்டோக்கரன்சிகள் நன்கொடை
கடந்த சனிக்கிழமையன்று உக்ரைன் அரசு கிரிப்டோகரன்சிகளை நன்கொடையாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. இது பிட்காயின், எத்தேரியம் உள்ளிட்ட கரன்சிகளை நன்கொடையாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. இந்த நிலையில் தான் இந்தளவுக்கு நன்கொடையை பெற்றுள்ளது.
உடனடியாக நன்கொடை
உக்ரைனின் இந்த அறிவிப்பு வெளியான வெறும் 8 மணி நேரத்தில் 5.4 மில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சிகள், நன்கொடையாக கிடைத்துள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த நிதியானது உக்ரைன் ஆயுத படைகளுக்கு உதவியாக இருக்கும் என்று விளக்கமளித்திருந்தது. இருப்பினும் இந்த நிதி எதற்காக செலவிடப்பட்டது என்பது குறித்த எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.
உங்கள் கருத்து என்ன?
சில நிதி நிறுவனங்கள் மற்றும் கிரவுட் ஃபண்டிங் நிறுவனங்கள் உக்ரேனிய ராணுவத்திற்கு பணம் அனுப்ப அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் தான் கிரிப்டோகரன்சிகள் ஒரு வலுவான மாற்றாக உருவெடுத்துள்ளன. இது எதிர்காலத்தில் டிஜிட்டல் கரன்சிகள் வலுவான டிஜிட்டல் தளங்களாக உருவெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ உக்ரைனுக்கு நல்லது நடந்தால் சரி தான். நீங்க என்ன சொல்றீங்க? உங்கள் கருத்துகளை பதிவிடுங்க...