சீனாவின் வுகான் ஆய்வு கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சீனா நினைத்திருந்தால் இதனை மற்ற நாடுகளுக்கு பரவாமல் தடுத்திருக்கலாம் என தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் ட்ரம்ப், இதற்கு சீனா தக்க பதில் கொடுத்தே ஆக வேண்டும் என்றும் கூறி வருகிறார்.
அது மட்டும் அல்ல, அமெரிக்கா இதற்காக ஆய்வு குழுவினை அங்கு அனுப்பி ஆராய்ச்சியில் ஈடுபட போவதாகவும், கடந்த சில வாரங்களுக்கு முன்பே அறிவித்திருந்தார்.
கொரோனாவினால் பாதிப்பு
இன்று உலகம் முழுக்க 33,04,220 பேருக்கு கொரொணாவின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவினால் பலி எண்ணிக்கை 2,33,830 ஆகவும் அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் 10,95,023 பேர் கொரோனாவின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 63,856 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுக்க பரவி இருந்தாலும் பாதிப்பு என்னவோ அமெரிக்காவில் தான் அதிகம்.
பொருளாதாரம் வீழ்ச்சி
ஒரு புறம் இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வரும் நிலையில், பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதற்கிடையில் கொரோனாவினை ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வந்தாலும், அவற்றிற்கு இன்று வரை பலன் இல்லாமல் தான் உள்ளது.
கட்டணத்தினை அதிகரிக்கலாம்
ஆனால் சீனாவின் நினைத்திருந்தால் ஆரம்பத்திலேயே அதனை தடுத்திருக்கலாம் என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த வியாழக்கிழமையன்று அமெரிக்கா ஜனாதிபதி சீனாவுக்கு புதிய கட்டணங்களை விதிக்கலாம் என மிரட்டியுள்ளார். அதாவது கொரோனாவினை சீனா தான் பரப்பியதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
பொருளாதார தடை
எனினும் அது குறித்த விவரங்களை வெளியிட தனக்கு அனுமதியில்லை எனக் கூறிய அவர், சீனாவுக்கு மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். அது மட்டும் அல்ல சீனாவின் செய்தி தொடர்பாளராகவே உலக சுகாதார நிறுவனம் செயல்படுவதாக விமர்சித்த அவர், சீனா சொல்லிக் கொடுப்பதையே உலக சுகாதார நிறுவனம் உலகத்திற்கு தெரிவிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
வேலை இழப்பு
மேலும் ஆறு வாரங்களில். அமெரிக்காவில் 30 மில்லியனுக்கும் அதிகமான வேலைகளை இழந்துள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்திலேயே இப்படி ஒரு பிரச்சனை எனில், வளரும் நாடுகள் எந்த அளவுக்கு பிரச்சனையை எதிர்கொள்ள போகின்றனவோ தெரியவில்லை. அதோடு ஐரோப்பாவில் முன்னோடியில்லாத வகையில் நிதி பேரழிவு இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
வைரஸ் பரவல்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வுகான் மாநகரில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்து தோன்றியதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வுகான் மாநகரில் உள்ள வைரலாஜி ஆய்வகத்தில் இருந்து பரவியதாக கருதப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது அதனை உறுதி செய்யும் விதமாகவே ட்ரம்பும் கூறி வருகிறார்.
கட்டணம் அதிகரிப்பு இருக்கலாம்
எனினும் அது குறித்தான ஆவணங்களை காட்ட முடியாது என ட்ரம்ப் மறுத்துள்ளார். ஆக கொரோனாவினால் அமெரிக்கா மட்டும் அல்ல, ஜெர்மனி, ஐரோப்பா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரங்கள் கூட பெரும் வீழ்ச்சியினைக் கண்டு வருகின்றன. இப்படி உலகமே ஒரு வைரஸினால் பொருளாதார வீழ்ச்சியினைக் கண்டு வரும் நிலையில், ஏற்கனவே கடந்த ஆண்டில் வர்த்தக போரால் சிக்கித் தவித்து வந்த சீனாவுக்கு, விரைவில் மீண்டும் ஒரு பிரச்சனை காத்துக் கொண்டுள்ளது என்று கூறலாம்.