ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே ரஷ்யாவின் பொருளாதாரம் தடுமாறி வருகின்றது. இப்பிரச்சனைக்களுக்கு மத்தியில், ரஷ்யாவின் வர்த்தக கூட்டாளர்கள், ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில் ரஷ்யாவுடனான வணிகத்தினையே பலரும் தடை செய்துள்ளனர். இதனால் தற்போதைக்கு பெரும் தாக்கத்தினை எதிர்கொள்ளாவிட்டாலும், இதே நிலை தொடர்ந்தால் ரஷ்யா பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்டை நாடுகள் ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை உள்பட பல தடைகளால், ரஷ்யா மக்கள் ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இனி என்னவாகுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.
இப்போதைக்கு பிரச்சனை இல்லை
இதற்கிடையில் ப்ளூம்பெர்க் அறிக்கையொன்று, ரஷ்யா இந்தாண்டு எண்ணெய் மற்றும் கேஸ் வணிகம் இப்படியே தொடர்ந்தால் இதன் மூலம் 321 பில்லியன் டாலரை சம்பாதிக்கலாம் என தெரிவித்துள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டுடன் பார்க்கும்போது அதிகம். தொடர்ந்து ரஷ்யாவின் நடப்பு கணக்கு உபரியானது தொடர்ந்து வலுவாக இருந்து வரும் நிலையில், தொடர்ந்து தடைகள் இருந்தாலும் ரஷ்யாவில் பணப்புழக்கம் என்பது கணிசமாக தொடரும் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதனால் தடைகளே விதிக்கப்பட்டாலும் தற்போதைக்கு ரஷ்யாவுக்கு பெரிய பிரச்சனை எதுவும் இல்லை எனலாம்.
நிலைமை எப்போது வேண்டுமானாலும் மாறலாம்
எனினும் எனர்ஜி ஏற்றுமதிக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டால் நிலைமை தலைகீழாக மாறலாம். ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் ரஷ்யாவில் உற்பத்தி குறைந்து வருகின்றது. சர்வதேச எனர்ஜி நிறுவனம் இம்மாதம் அதன் கச்சா எண்ணெய் உற்பத்தியில் கால் பகுதியினை இழக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஒப்பந்தங்களுக்கு தயக்கம்
மேலும் அதிபர் புதினின் தாக்குதலுக்கு பரவலான கண்டனங்களை பல நாடுகளும் தெரிவித்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து பாரம்பரியமாக எண்ணெய் மற்றும் கேஸ் வாங்கும் வாடிக்கையாளர்கள் கூட மாற்று வழியினை தேட ஆரம்பித்துள்ளனர். சொல்லப்போனால் ரஷ்யாவுடன் புதிய ஒப்பந்தங்களை போட தயங்குகின்றனர்.
தள்ளுபடி விலையில் எண்ணெய்
இதற்கிடையில் தனது வணிக வளர்ச்சியினை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக, இந்தியா போன்ற நட்பு நாடுகளுக்கு ரஷ்யா தள்ளுபடி விலையில் எண்ணெய் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்பட்டாலும், இது கிரேட் ரிஸ்க் என சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா, இந்தியாவினை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவுக்கு நெருக்கடி தான்
இதற்கிடையில் ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவினை சார்ந்திருப்பதை குறைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் மீதான அழுத்தம் அதிகமாகவே உள்ளது. ஏனெனில் இன்றளவிலும் ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெய் மற்றும் கேஸ்- அதிகம் இறக்குமதி செய்து வருகின்றன. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகள் தடை செய்தால் ரஷ்யா பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளலாம் என அமெரிக்கா எண்ணுகிறது.
EU நாடுகளுக்கு அழுத்தம்
ஏற்கனவே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு தடைகளை வெளிப்படையாக விதித்துள்ளன. இந்த நிலையில் தான் ஐரோப்பிய நாடுகள் மீதும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்த நாடுகள் இந்தியாவுக்கும் அழுத்தம் கொடுத்தாலும், இந்தியா இதுவரையில் இப்பிரச்சனையில் நடுநிலையே வகித்து வருகின்றது.
வருவாய் அதிகரிக்கலாம்
ரஷ்யாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 40 சதவீதம் எண்ணெய் மற்றும் கேஸ் ஏற்றுமதியே முக்கிய பங்கு வகிக்கிறது. எப்படியிருப்பினும் ரூபிளின் வீழ்ச்சி, எண்ணெய் விலை ஏற்றம் என பல காரணிகளும் ரஷ்யாவின் வருவாய் அதிகரிக்க காரணமாக அமையலாம் என ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.
நடப்பு கணக்கு
எப்படியிருப்பினும் ரஷ்யா மீதான தடைகள் அதன் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தும். இது மேலும் எனர்ஜி வணிகத்தினை சார்ந்திருப்பதை அதிகப்படுத்தும். ஏற்றுமதியில் தாக்கம் இருக்கும். இந்த நிலையில் உள்நாட்டு தேவைகளிலும் தாக்கம் இருக்கலாம், இறக்குமதியிலும் தாக்கம் இருக்கலாம். இதன் காரணமாக நடப்பு கணக்கை அதிகரிக்க தூண்டும். கோல்டுமேன் சாக்ஸ், நடப்பு கணக்கு உபரி, இந்த ஆண்டு 205 பில்லியன் டாலராக அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளது.
இறக்குமதி சரிவு
இந்த ஆண்டில் ஏற்றுமதியில் ஏற்படும் சரிவினை விட, இறக்குமதியில் இரு மடங்கு அதிகரிக்கலாம் என கணித்துள்ளது. குறிப்பாக இறக்குமதியில் 20% சரிவு இருக்கலாம் என பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
ரஷ்யாவில் தற்போதைக்கு போதுமான இருப்பு இருந்தாலும், அது அதன் மந்த நிலையில் இருந்து காப்பாற்றுமா? என்பது சந்தேகமாகத் தான் பார்க்கப்படுகிறது.
இனி என்னவாகும்?
எப்படியிருப்பினும் ரஷ்யாவினை மிக மோசமான நிலையில் இருந்தும், நிதிச் சரிவில் இருந்து தற்போதைக்கு எரிவாயு ஏற்றுமதியே பாதிகாக்கிறது. ஆக தற்போது நடந்து கொண்டுள்ள பேச்சு வார்த்தையானது சுமூக நிலையை எட்டினால் பெரியளவில் ஏதும் பிரச்சனைகள் இருக்காது. எனினும் பிரச்சனை மீண்டும் தொடர்ந்தால் ரஷ்யாவின் முக்கிய பொருளாதார ஆதாரமாக இருக்கும் எரிபொருள் வணிகத்திலேயே கைவைக்கலாம்.