வால்ட் டிஸ்னி நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தனசு நிர்வாகக் குழுவின் சேர்மன் ஆகச் சூசன் அர்னால்ட் நியமிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்தது. வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் இந்த 98 வருட வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண்ணை நிர்வாகக் குழுவின் சேர்மன் ஆக அறிவித்துள்ளது.
சூசன் அர்னால்ட்
டிசம்பர் 31ஆம் தேதி வால்ட் டிஸ்னி நிர்வாகக் குழுவின் சேர்மனாக இருக்கும் பாப் இகர் வெளியேற உள்ள நிலையில் 14 வருடமாக நிர்வாகக் குழுவில் இருக்கும் சூசன் அர்னால்ட்-ஐ சேர்மன் ஆக அறிவித்துள்ளது வால்ட் டிஸ்னி.
வால்ட் டிஸ்னி நிறுவனம்
வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் சிஇஓ-வாக 15 வருடம் பணியாற்றி வந்த பாப் இகர் 2020ல் தனது பதவியை விடுத்து நிர்வாகக் குழுவின் சேர்மனாகச் சேர்ந்தார், தற்போது இந்தப் பதவியில் இருந்தும் விலகும் காரணத்தால், தற்போது பாப் இகர் மொத்தமாக வால்ட் டிஸ்னி விட்டு வெளியேறுகிறார்.
கார்பரேட் நிர்வாகம்
உலக நாடுகளில் பெரும் நிறுவனங்களில் சிஇஓ மற்றும் நிர்வாகக் குழுவின் சேர்மன் பதவி ஒருவருக்கே அளிக்கப்பட்டு வந்த நிலையை மாற்றி வருகிறது. இரு முக்கியப் பதவிகளும் தனித்தனி நபர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கார்பரேட் நிர்வாக வல்லுனர்கள் கூறிவரும் நிலையில் வால்ட் டிஸ்னியும் இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
பாப் சாபெக் - சூசன் அர்னால்ட்
இதன் மூலம் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் சிஇஓ-வாகத் தற்போது பாப் சாபெக்-ம், நிர்வாகக் குழுவின் சேர்மன் ஆகச் சூசன் அர்னால்ட்-ம் உள்ளனர். இந்தப் புதிய மாற்றத்தின் மூலம் இந்நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் நிர்வாகம் பெரிய அளவில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல உயர் அதிகாரிகள் வெளியேற்றம்
மேலும் வால்ட் டிஸ்னி நிறுவனத்தில் இருந்து பாப் இகர் மட்டும் அல்லாமல் ஸ்டூடியோ தலைவர் ஆலன் ஹார்ன், டிஸ்னி டெலிவிஷன் பிரிவின் தலைவர் மற்றும் தலைமை படைப்பு அதிகாரியான கேரி மார்ஷ், நிறுவனத்தின் ஜெனரல் கவுன்சில் ஆலன் பிரேவர்மேன் எனப் பல உயர் அதிகாரிகள் 2021க்குள் வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் வால்ட் டிஸ்னி நிறுவனத்தில் பல முக்கியப் பதவிகளில் இளம் தலைவர்கள் வரப்போகிறார்கள்.
சூசன் அர்னால்ட் அனுபவம்
இந்நிலையில் புதிதாக வால்ட் டிஸ்னி நிர்வாகக் குழுவின் சேர்மனாக நியமிக்கப்பட்டு இருக்கும் சூசன் அர்னால்ட் இதற்கு முன்பு தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான கார்லைல் குரூப், P&G குழுமம், மெக்டொனால்டு நிறுவனத்தில் முக்கிய மற்றும் உயர் பதவியில் பணியாற்றி உள்ளார்.