உலகம் முழுக்க கொரோனா வைரஸ் ஏற்படுத்தி இருக்கும், ஏற்படுத்த இருக்கும் சேதாரங்களை சரி செய்யும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள் அனைத்து நாட்டின் நிதி அமைச்சர்கள்.
Recommended Video
ஆனால் இந்த கொரோனா பாதிப்பு பணிகளிலாலேயே, இணைய உலகத்தின் கவனம் ஈர்த்து இருக்கிறார் பெரு நாட்டின் இளம் நிதி அமைச்சர் Maria Antonieta Alva. சுருக்கமாக மரியா அல்வா என வைத்துக் கொள்வோம்.
இந்த அறிவார்ந்த நிதி அமைச்சர் அப்படி என்ன செய்துவிட்டார்? ஏன் இவரை இணையம் உச்சி முகர்ந்து கொண்டு இருக்கிறது.
Maria Antonieta Alva
அப்பா ஜோர்ஜ் அல்வா (Jorge Alva) பொறியாளர். முன்னாள் ஆசிரியர் கூட. சின்ன வயதில் மரியா அல்வா (Maria Antonieta Alva) அப்பா உடன் பெரு நாட்டைச் சுற்றிப் பார்க்கும் போது மிகக் கொடிய வறுமை அவர் கண்ணில் பட்டு இருக்கிறது. நிலைமையை சரி செய்ய வேண்டும் என்கிற எண்ணமும் அதிகரித்துவிட்டது.
பெரு நாடு
பெரு நாட்டில் இன்னமும் "பொம்பலங்களுக்கு எதுக்கு இந்த வேலை.." என்கிற ஆனாதிக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் நாடு தான். அதற்காகவே மரியா அல்வா (Maria Antonieta Alva) பல சவால்களையும் எதிர் கொண்டார். ஆனால் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அவ்வளவு ஏன், மரியா அல்வா, நிதி அமைச்சர் ஆன போது கூட, இவள் அவரின் மகள் அதனால் தான்.. என சர்ச்சையானது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அனுபவம்
ஆனால் உண்மை அதுவல்ல. பெருவியன் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துவிட்டு, 2014-ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் வாங்கிவிட்டு, அரசின் திட்டம் மற்றும் செலவீனங்கள் துறையில் தான் அதிகம் வேலை பார்த்தார். இரண்டு வருடம் பெரு நாட்டில் 52 பில்லியன் டாலர் பட்ஜெட்டைக் கூட பார்த்துக் கொண்டார் என்பது அவரின் பணி அனுபவத்துக்கு சான்று.
நிதி அமைச்சர்
நிதி அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட சில மாதங்களில், பெரு மருத்துவர்கள் கொரோனா வைரஸ் பிரச்சனையைக் கொண்டு வந்தார்கள். அப்போது மரியா அல்வா (Maria Antonieta Alva) மனதில் இரண்டு கேள்வி தான்...
1. பெருவை லாக் டவுன் செய்வது சரியா..? அல்லது
2. பெருவின் மருத்துவ கட்டமைப்பை ரிஸ்கில் தள்ளுவதா..?
ஆலோசனை
உடனடியாக பிரச்சனையின் வீரியத்தை புரிந்து கொண்டு பெரு மற்றும் உலகில் இருக்கும் முன்னணி பொருளாதார வல்லுநர்களிடம் ஆலோசித்தார். கேபினெட் அமைச்சரவையில் விவாதித்தார். லாக் டவுன் அறிவிப்புடன் பிறந்தது பெருவின் நிதி அமைச்சரின் பெயரைச் சொல்லும் பிரமாதமான திட்டம். அதை செயல்படுத்தவும் தொடங்கினார்.
பெருவில் முதல் முறை
கொரோனா லாக் டவுனால் பாதிக்கப்பட இருக்கும் மக்களுக்கு நேரடியாக பணம் கொடுப்பது,
சம்பளம் கொடுப்பதற்கு மானியம் வழங்குவது,
அரசு உதவியுடன் வியாபார கடன்கள்... என பெரு நாடு பார்க்காத பல விஷயங்களை களத்தில் முதல் முறையாக இறக்கினார். எல்லாம் சிறு வியாபாரிகளுக்கும், சாதாரண மக்களுக்குமானதாக இருந்தது.
நம்பிக்கை மீட்பு
சில வாரங்களுக்கு முன்பு தான் பெரு வரலாறு காணாத அளவுக்கு குறைந்த விலையில் 3 பில்லியன் டாலருக்கு, சர்வதே சந்தையில் கடன் பத்திரங்களை விற்றார்கள். இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை பிறந்தது. இதுவும் நம் இளம் நிதி அமைச்சர் மரியா அல்வாவின் ஐடியா தான் என்கிறார்கள்.
பிரச்சனைகள்
மரியா அல்வா (Maria Antonieta Alva) கொண்டு வந்த திட்டங்களில் குறைகள் இருப்பதாகவும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள். பணம் சரியான நேரத்தில் வருவதில்லை என புகார்கள் எல்லாம் எழுந்து கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் அல்வா தன்னால் முடிந்ததை விரைவாகச் செய்து மக்கள் மனதை வென்று கொண்டு தான் இருக்கிறார்.
ஆதரவு
கடந்த பிப்ரவரி-ல் பெரு நாட்டின் அரசு எண்ணெய் சுத்திகரிப்பு கம்பெனியின் தலைவர், சில நிர்வாக பிரச்சனையால், நிதி அமைச்சர் மரியா அல்வாவை முட்டாள் என அழைத்த விவரம் வெளியானது. அதற்கு பதில் கொடுக்கும் விதத்தில் பெரு கல்லூரி மாணவர்கள் குழு 18 ஹைவே பாலங்களில் அல்வாவின் பேனரை பறக்கவிட்டு ஆதரவு காட்டினார்கள் என்றால் இளசுகளின் செல்வாக்கு இந்த இளைய தலைவருக்கு எப்படி இருக்கிறது என்று தெரியும்.
மக்கள் தலைவர்
மரியா அல்வா (Maria Antonieta Alva) என்கிற நிதி அமைச்சரை யாரும் அவர் பெயர் சொல்லிக் கூப்பிடுவதில்லை. டோனி என்று தான் செல்லமாக அழைக்கிறார்கள். பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் நின்று செல்ஃபி எடுக்கிறார்கள். அல்வாவும் தன் முகம் நிறைந்த சிரிப்பால் போஸ் கொடுக்கிறார்.
பரிசுகள்
தெரு வியாபாரிகள் எல்லாம் "வாம்மா... டோனி என்னா நல்லா இருக்கியா..." என பேச்சு வாக்கில், கையில் ஆசை பரிசாக ப்ரேஸ்லெட் போட்டு விடுகிறார்கள். அதற்கும் மரியா அல்வாவின் ரியாக்ஷன் அந்த தெத்துப் பள்ளு சிரிப்பு தான். உள்ளூர் டிவி தொடங்கி வெளிநாட்டு சேனல்கள் வரை "மேடம் ஒரு நேர்காணல் ப்ளீஸ்" என நச்சரித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மரியா தன் வேலையை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்.
வாழ்த்துக்கள்
சொல்ல மறந்துட்டேனே, மரியா அல்வா (Maria Antonieta Alva)-வின் வயது வெறும் 35 தான். பெருவின் அழகான நம்பிக்கை நட்சத்திரமாகவும், அறிவார்ந்த தலைவராகவும் வலம் வந்து கொண்டு இருக்கிறார். ஒரு நாள், இன்னும் பல சாதனைகள் செய்து ஒட்டு மொத்த உலகையும் வலுவாக திரும்பிப் பார்க்கச் செய்வும், வறுமையை ஒழிக்கவும் மரியாவுக்கு நம் சார்பாக வாழ்த்துக்கள்.