வரலாற்றில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடக்குமா? என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அதிபர் மாளிகைக்கு சுற்றுலா தலம் போல வருகை, தங்கள் வாழ் நாளில் நினைத்து கூட பார்த்திராத வசதிகளை அனுபவிக்க மக்கள் படையெடுக்கும் காட்சிகளை பார்க்க முடிகிறது.
இலங்கையில் மட்டும் அல்ல, வேறு எந்தவொரு நாட்டுக்கும் இப்படி ஒரு மோசமான நிலை வரக்கூடாது.
இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷே வசித்து வந்த மாளிகையை, போராட்டக்காரர்கள் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். பெரும்பாலானோர் அங்கு தங்களது பொழுதினை கழித்து வரும் நிலையில், அதனை சுற்றுலா தலம் போல சுற்றிப் பார்த்தும் வருகின்றனர்.
எங்கும் மக்கள் வெள்ளம்
அங்கேயே சுற்றி பார்த்தும், அதிபர் மாளிகையிலேயே சமைத்து சாப்பிட்டும் வருவதை சமூக வலைதளங்கள் வாயிலாக காண முடிகிறது . அங்குள்ள ஜிம், நீச்சல் குளம், கார்டர்ன் என எல்லா பகுதிகளிலும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகின்றது. சாதாரணமாக ஜனாதிபதி வீடு இருக்கும் வீதிகளிலேயே மக்கள் நடமாட்டம் என்பது அதிகம் இருக்காது. ஆனால் இங்கு நிலையே வேறு. மொத்தத்தில் இலங்கை மக்களின் போராட்டமானது. அவர்களின் வெறுப்பினை காட்டும் விதமாக உள்ளது எனலாம்.
பெரும் தலைவர்கள் ராஜினாமா?
இப்படி பலத்த பிரச்சனைகளுக்கு மத்தியில் இலங்கையின் ஜனாதிபதியும் பல மாதங்களாக ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறிவந்த நிலையில், போரட்டம் மேலும் சூடுபிடிக்கவே பதவி விலகுவதாகவும் அறிவித்துள்ளார். அதோடு இலங்கையின் புதிய பிரதமராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமாசிங்க- வும் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இனி என்னவாகுமோ?
இலங்கையில் தற்போது நிலவி வரும் இந்த சலசலப்புகள் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தற்போது ஏழு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதார நிலையை எட்டியுள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறி வந்த இலங்கை அரசு மொத்தமாக முடிந்து விட்டது. மொத்தத்தில் இந்த தீவு நாட்டின் நிலை இனி என்னவாகுமோ? என்ற பதற்றம் தொற்றியுள்ளது.
பின்னடைவு தான்
ஏற்கனவே இலங்கைக்கு கடன் கொடுக்கலாமா? வேண்டாமா? என்ற யோசனையில் இருந்து வந்த சர்வதேச நாணய நிதியம், தற்போது இன்னும் எதிர்மறையான நிலைக்கு செல்ல தூண்டியுள்ளது இந்த சம்பவங்கள். இது உலகளாவிய நாடுகளின் கடன் தொடர்பாகவும் இது ஒரு எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில் இலங்கையில் நிலவி வரும் இந்த சம்பவம் மேற்கோண்டு இன்னும் பின்னடைவையே கொடுக்கலாம்.
கடன் பிரச்சனை
இலங்கைக்கு 50 பில்லியன் டாலர்களுக்கு மேல் கடன் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கடனில் 2027-க்குள் மட்டும் 28 பில்லியன் டாலர் திரும்ப செலுத்தியாக வேண்டும்.
இதற்கிடையில் எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களையும் மக்களுக்கு வழங்குவதனை உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே அரசு இதற்கான முயற்சிகளைத் தான் எடுத்து வந்தது.
மக்கள் பிரமிப்பு
எனினும் மக்கள் பிரச்சனைகளை அரசால் முடித்து வைக்க முடியவில்லை, அடிப்படை ஆதாரங்களை கூட சரிவர கொடுக்க முடியவில்லை. இதற்கிடையில் தான் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுக் கையிட்டனர். ஜனாதிபதியின் சொகுசு வாழ்க்கையை கண்டு பிரமித்தனர். போலிசாரே மக்களின் இந்த போராட்டத்தினை தடுக்க முடியாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதை காண முடிந்தது.
அண்டை நாடுகளின் கவனம்
எனினும் இலங்கையில் நடந்து வரும் நிகழ்வினை பல அண்டை நாடுகளும் கவனித்து வருகின்றன. ஆக விரைவில் இதனை சமாளித்து பாராளுமன்றம் கூட வேண்டும். அபிவிருத்தி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
பல சவால்களுக்கும் மத்தியில் தொடர்ந்து இந்தியா இலங்கையினை ஆதரித்து வருகின்றது. தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறது.
ஐஎம்எஃப் உதவிக்கு வருமா?
எது எப்படியோ இலங்கையின் தற்போதைய நெருக்கடியான நிலைக்கு மத்தியில், ஐ எம் எஃப் உதவி புரியுமா? இலங்கையின் பிரச்சனை எப்போது தான் முடியும். மக்களின் போராட்டத்திற்கு வெற்றி கிடைக்குமா? அடுத்த என்ன நடக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக எழுந்துள்ளது.