இங்கிலாந்து: பல மதங்கள், சாதிகள், ஏற்றத் தாழ்வுகள், அடக்குமுறைகளைக் கொண்ட அதே இந்தியா தான், கிரிக்கெட் என்று வரும் போது ஒரு நீல ஆடைக்குள் புகுந்து கொள்கிறது.
கிரிக்கெட் என்கிற ஒற்றை வார்த்தைக்கு ஒரே கோட்டில் வந்து நிற்கிறது. 2011-ல் இந்திய கிரிக்கெட் அணிக்கு தனி பூஸ்ட் கொடுத்த தோனியால் இந்தியாவில் கிரிக்கெட் வெறி 90-ஸ் கிட்ஸ் ரத்தத்தில் இன்னும் அதிகமாக ஊறியது.
2011 போல 2015-ல் கோப்பையைத் தக்க வைத்துக் கொள்வோம் என எதிர்பார்த்தோம். நடக்கவில்லை. மீண்டும் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் கோப்பையைக் கைப்பற்றுவோம் என எதிர்பார்த்தோம் எதிர்பாராத தோனி ரன் அவுட்டால் நொறுங்கிப் போனோம். சரி World Cup Final Ticket பஞ்சாயத்துக்கு வருவோம்.
நம்பிக்கை
கோலி தலைமையிலான நீல ராணுவம், தோனி போன்ற அனுபவஸ்தர்களோடு, நம் ப்ளூ ஆர்மி இங்கிலாந்தில் கால் எடுத்து வைத்த போதே "கப்பு எங்களுக்குத் தான்டா" என குதூகலத்தில் மிதந்தோம். இந்திய அணி மீதான அபார நம்பிக்கையில் பல இந்திய ரசிகர்கள், ஜூலை 14 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு, கந்து வட்டிக்கு எல்லாம் கடன் வாங்கி World Cup Final Ticket-களில் பெரும்பகுதி இருக்கைகளைப் பிடித்துவிட்டார்கள் நம் இந்தியர்கள்.
ஒரு டிக்கெட் விலை
நம் இந்தியர்கள் முறையாக ஐசிசி வலைத் தளத்தில் World Cup Final Ticket-களை வாங்கும் போது ஒரு டிக்கெட் விலை சுமார் 25,000 ரூபாய் முதல் 35,000 ரூபாய் தான். ஆனால் இப்போது இந்தியா கலந்து கொள்ளாத, இந்தியா மைதானத்தில் இல்லாத இறுதிப் போட்டியை காண ஏகப்பட்ட இந்தியர்கள் தயாராக இல்லை. ஆகையால் அவர்கள் வைத்திருக்கும் டிக்கெட்டை என்ன செய்கிறார்கள் தெரியுமா..?
லாபம்
1. முறையாக ஐசிசி வலைதளத்தில் World Cup Final Ticket-களை வாங்கிய விலைக்கே மீண்டும் டிக்கெட்களை விற்று விடுகிறார்கள். இது எண்ணிக்கையில் மிகக் குறைவு.
2. அல்லது StubHub, Viagogo போன்ற இணைய டிக்கெட் பரிமாற்றம் செய்யும் வலைதளங்களில் World Cup Final Ticket-களை நாம் இஷ்டப்பட்ட விலைக்கு விற்பது. இது தான் பெரும்பகுதி ரசிகர்கள் செய்வது.
இதில் ஐசிசி-யிடம் விற்றால், கொடுத்த காசு அப்படியே கிடைக்கும். ஆனால் StubHub and Viagogo போன்ற வலைத் தளங்களில் விற்றால் டிக்கெட்டைவிட சுமார் 30 முதல் 40 மடங்கு வரை அதிக விலை வைத்து விற்கலாம். விற்கிறார்கள். 35,000 ரூபாய்க்கு வாங்கிய டிக்கெட்களை 13 லட்சம் ரூபாய்க்கு விற்க வாய்ப்பு கிடைத்தால் சும்மா இருப்பார்களா என்ன..? லாபம் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.
ரசிகர்கள் வேதனை
இப்போது இங்கிலாந்து ரசிகர்களும், நியூஸிலாந்து ரசிகர்களும் இறுதிப் போட்டியைக் காண பேராவலுடன் இருக்கிறார்கள். ஆனால் டிக்கெட் இல்லை. எப்படியாவது டிக்கெட் வாங்கிவிடலாம் என போராடினால் ஐசிசி யிடம் இருக்கைகளே இல்லை. ஆக StubHub and Viagogo போன்ற அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் டிக்கெட் பரிமாற்றம் வலை தளங்களில் தான் World Cup Final Ticket-களை 20 முதல் 40 மடங்கு கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது.
எவ்வளவு வித்தியாசம்
முறையாக 195 பவுண்டுக்கு விற்க வேண்டிய டிக்கெட்டுகள் இந்த StubHub போன்ற வலைத் தளங்களில் சுமார் 5,500 பவுண்டுக்கு விற்கிறார்கள். 295 பவுண்டுக்கு விற்க வேண்டிய டிக்கெட்டுகள் 7,850 பவுண்டுக்கு விற்கிறார்கள். 395 பவுண்டுக்கு விற்க வேண்டிய டிக்கெட்டுகள் 12,150 பவுண்டுகளுக்கு விற்கிறார்கள். இத்தனை விலை கொடுத்த வாங்க முடியாத வலியையும் வருத்தத்தையும் வெளிப்படையாக ட்விட்டரில் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள்.
வேண்டுகோள்
இதை கவனத்தில் கொண்டு நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜிம்மி நீஷம் இந்திய ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார். "அன்புள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு, நீங்கள் 2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வர விரும்பவில்லை என்றால் தயவு செய்து முறையான (ஐசிசி) வலைத் தளத்தில் முறையாகத் திருப்பி விற்றுவிடுங்கள். இந்த சந்தர்ப்பத்தில் நல்ல லாபம் பார்க்கத் தோன்றும் என எனக்குத் தெரியும். இருப்பினும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரு வாய்ப்பளியுங்கள்" என ஒரு உருக்கமான, எதார்த்தமான ட்விட்டைத் தட்டி வேண்டு கோள் வைத்திருக்கிறார். அவர் சொல்வதும் உண்மையான வேண்டுகோளாகத் தானே தெரிகிறது..? டியூட்ஸ் கொஞ்சம் பாத்து செய்ங்க..!


Click it and Unblock the Notifications