நடப்பு ஆண்டில் மறக்க முடியாத சம்பவங்களில் இலங்கை பிரச்சனையும் ஒன்று. இலங்கையினை ஆட்டிப்படைத்த பொருளாதார நெருக்கடி, மக்களை வாட்டி வதைத்த பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களுக்கே மணிக் கணக்கில் காத்திருக்கும் நிலையில், எரிபொருள் பற்றாக்குறையால் பள்ளி பொது போக்குவரத்துக்கள் கூட நிறுத்தல், கர்ப்பிணி பெண்களுக்கு சரியான உணவு கிடைக்காமை என பலவும் இலங்கையை பதம் பார்த்தன எனலாம்.
எனினும் இதுமட்டும் தான் பிரச்சனை என்பதில்லை. இன்னும் லிஸ்டில் ஏராளம் உண்டு. குறிப்பாக பொருளாதார நெருக்கடி என்பது அரசியல் நெருக்கடியாக மாறியது. அரசியல் மாற்றம் ஏற்பட்டது.
மோசமான நிலை
இதற்கிடையில் போதிய நிதி இல்லாமல் பல்வேறு தரப்பிடமும் உதவி கேட்டு வருகின்றது இலங்கை. இதற்கிடையில் கடன் பிரச்சனையும் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், இலங்கை இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தளராது சீனா, ஜப்பான், சர்வதேச நாணய நிதியம் என பலத் தரப்பினரிடமும் உதவி கேட்டு வருகின்றது.
வீழ்ச்சி என்ன காரணம்?
இது இலங்கையில் பல ஆண்டுகளாக நடந்த ஊழல் ஆட்சி, தவறான நிர்வாகம், தொலை நோக்கு பார்வை இல்லாமை என பலவும் இலங்கையின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என தி டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனாவின் வருகைக்கு பிறகு அன்னிய செலவாணி பெரியளவில் சரிவினைக் கண்டது. இலங்கையின் பிரதான வருவாயான, சுற்றுலா முற்றிலும் கொரோனா காலத்தில் முடங்கியது. இது சுற்றுலாவை சார்ந்த துறையினையும் பெரிதும் பாதித்தது. இதனால் மக்கள் ஏற்கனவே வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர்.
பற்றாக்குறையால் தவிப்பு
இலங்கையின் மத்திய வங்கியின் சரிவு, கடும் நிதி பற்றாக்குறை, இரசாயன உரம் தட்டுப்பாடு, இலங்கை நாணயத்தின் மோசமான சரிவு, வரி குறைப்பு நடவடிக்கை என பலவும் இலங்கையின் வீழ்ச்சிக்கு இன்னும் தூண்டுகோலாய் அமைந்தன.
அதோடு சீனாவின் கடன் வலையில் இலங்கையின் சரிவுக்கு முக்கிய காரணம் என மீடியாக்கள் விமர்சனம் செய்தன. இதுவும் இலங்கையின் பொருளாதார சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தன.
அரசியல் பிரச்சனை
இலங்கையின் சரிவுக்கு மற்றொரு முக்கிய காரணம் இலங்கை பொருளாதாரம் முழுக்க முழுக்க சுற்றுலாவினையே பெரிதும் நம்பியிருந்தது தான். ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடி என்பது அரசியல் நெருக்கடியாக உருவெடுத்தது. மக்கள் மோசமான நெருக்கடி நிலைக்கு மத்தியில் மக்கள் போராட்டத்தினை கையில் எடுத்தனர்.
அதிபர் மாளிகை சூறையாடல்
அரசுக்கு எதிராக போர் கொடியினை தூக்கினர். ராஜபக்சே அரசு உணவுக்கு தட்டுப்பாடு, நீடித்த மின் வெட்டு, விலை வாசி என வாட்டி வதைப்பதாகவும் குற்றம் சாட்டினர். ஒரு கட்டத்தில் அதிபர் மாளிகையையே சூறையாடினர். ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டே தப்பி ஓட்டம் பிடித்தார்.
மோசமான நிலை
இலங்கை 1948ல் சுதந்திரம் அடைந்த பிறகு மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. இது அன்னிய செலவாணி சரிவு, எரிபொருள் விலை, உணவு பொருட்கள் பற்றாக்குறை, மருந்துகள் என பல அத்தியாவசிய பொருட்கள் என பலவற்றின் இறக்குமதியும் குறைந்தது. கொரோனா பெருந்தொற்றால் சுற்றுலா துறை, முற்றிலும் முடங்கியது. வெளி நாட்டில் இருந்து வரும் பண வரத்தும் குறைந்தது. இதற்கிடையில் பணத்தினை அச்சடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. பணவீக்கமும் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டது. இதுமட்டும் அல்ல் இன்னும் ஏராளமான பிரச்சனைகளில் இருந்து வரும் நிலையில், இலங்கை எப்படி மீண்டு வரப்போகிறதோ?
மொத்தத்தில் இன்று வரையிலும் போதிய நிதி கிடைக்காமல் தள்ளாடி வருகின்றது. மக்கள் பணவீக்கத்தின் பிடியில் சிக்கித் போராடி வருகின்றனர். உண்மையில் 2022 இலங்கை மக்களுக்கு ஒரு போறாத காலமாக இருந்திருக்கும்.