சென்னை: பொதுவாக வீட்டுக்கு கடன் வாங்கும்போது நமது மாத சம்பளம், இதர வருமானம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே வங்கிள் நமக்கு கடன் அளிக்கிறது, இது சாதாரண வீட்டுக் கடன். ஆனால் ஸ்டெப்-அப் வீட்டுக் கடன் என்று ஒரு கடன் திட்டம் உள்ளது இதை பற்றி உங்களுக்கு தெரியுமா??
வீட்டுக் கடன் பெறப்போகும் நபரின் எதிர்கால வருமானம் அல்லது வருமானம் அதிகரிக்கும் நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வீட்டுக் கடனுக்கான அளவை அதிகரித்து தரப்படும் கடன் முறையே ஸ்டெப்-அப் வீட்டுக் கடன் என்று அழைக்கப்படுகிறது.
எனவே, தற்போதைய நிலையில் நீங்கள் பெறும் வருமானம் ஒரு பெரிய வீட்டை வாங்கத் துணையாக இல்லாத போதும் கூட, உங்களுக்கான வீட்டுக் கடனின் அளவை ஸ்டெப்-அப் வீட்டுக் கடன் திட்டத்தின் மூலம் அதிகரித்துக் கொள்ள முடியும்.
அளவீடு அதிகரிப்பு
இந்த திட்டத்தின் வாயிலாக உங்களுக்கான தகுதி அளவை 5 முதல் 30 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ள முடியும். அது நீங்கள் வேலை செய்யும் தொழில் மற்றும் துறையை அடிப்படையாகக் கொண்டும் மற்றும் உங்களுடைய எதிர்கால வேலையின் ஊதியத்தைக் கணக்கில் கொண்டும் இதைச் செய்ய முடியும்.
வட்டி விகிதம்
இந்த ஸ்டெப்-அப் வீட்டுக் கடன் திட்டத்தின் வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும்.
ஸ்டெப்-அப் வீட்டுக் கடனின் இ.எம்.ஐ முறை
ஸ்டெப்-அப் முறை வீட்டுக் கடன் திட்டத்தில் கடனை தவணைகளாக பிரித்து வைத்திருப்பார்கள். இதன் விளைவாக, வீட்டுக் கடனை செலுத்தும் ஆரம்ப காலங்களில். இ.எம்.ஐ அல்லது மாதாந்திர தவணைகள் செலுத்தும் பணத்தின் அளவு குறைவாக இருக்கும். காலம் செல்லச் செல்ல இ.எம்.ஐ பணத்தின் அளவு அதிகரிக்கத் துவங்கும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு தனிநபரின் ஊதியம் அல்லது வருமானம் உயரும், அதன் காரணமாக அவருடைய கடனைத் திரும்பச் செலுத்தும் திறன் அதிகரிக்கும். இறுதியாக, கடனை திரும்பக் கொடுத்து முடிக்கும் காலத்தில், வீட்டுக் கடன்களை விட அதிகமான பணத்தை இ.எம்.ஐ-ஆக செலுத்தி இருப்பீர்கள்.
ஸ்டெப்-அப் வீட்டுக் கடனுக்கான செலவுகள்
ஸ்டெப்-அப் வீட்டுக் கடனுக்கு ஆகும் செலவு சாதாரண வீட்டுக் கடன்களை விட அதிகமான அளவாகவே இருந்தாலும், அந்த நபரின் தற்போதைய வருமானத்தைக் கொண்டு பார்த்தால் அவருக்கு கொடுக்கப்பட்ட கடனும் அதிகமான அளவாகவே இருக்கும்.
ஸ்டெப்-அப் கடனுக்கான தகுதிகள்
தங்களுடைய வேலைக்கான பயணத்தை முதன்முதலாகத் தொடங்கியிருக்கும் இளைஞர்களின் தேவையைக் கருத்தில் கொண்டே, வீடுகளை வாங்குவதற்கான இந்த ஸ்டெப்-அப் கடன் வழங்கப்படுகிறது. அதே போல, எதிர்காலத்தில் மிகவும் சிறப்பாக வரும் என்று எதிர்பார்க்கப்படக் கூடிய ஒரு துறையில், நல்ல வேலைக்கான தகுதியுடன் நீங்கள் பணிப்புரிந்து வருகிறீர்கள் என்றால், உங்களுக்கு மிகவும் ஏற்ற கடன் வகையாக ஸ்டெப்-அப் வீட்டுக் கடன் இருக்கும்.
ஸ்டெப்-அப் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள்
கார்ப்பரேஷன் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்.டி.எப்.சி வங்கி ஆகிய வங்கிகள் தங்களிடம் உள்ள தகுதியான வாடிக்கையாளர்களுக்கு ஸ்டெப்-அப் வீட்டுக் கடன்களை வழங்குகின்றன.
பொது துறை வங்கிகள்
பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் முழுமையான ஸ்டெப்-அப் வீட்டுக் கடன்களை வழங்குவதில்லை. அவர்கள் எந்த நிலையிலும் கடன் பெறும் தகுதியை உயர்த்துவதில்லை மற்றும் ஆனால் ஸ்டெப்-அப் முறையில் கடனை திரும்ப செலுத்தும் (SURF-Step-Up Repayment Facility) முறையில் கடன்களை வழங்குகின்றனர். இந்த முறையில் இ.எம்.ஐ தொகையின் அளவு காலத்திற்கேற்ப அதிகரித்துக் கொண்டே செல்லும்.