பங்குச்சந்தையில் முதலீடு செய்து இலாபம் ஈட்டவேண்டும் என்பது பலருடைய ஆசை. பங்குச் சந்தையில் பரிவர்த்தனைகள் எவ்வாறு நடைபெறுகின்றன? அதில் முதலீடு செய்வது எப்படி? முதலீடு செய்தால் இலாபம் கிடைக்குமா? கஷ்டப்பட்டுச் சேர்த்து வைத்த பணமெல்லாம் மொத்தமாய் நஷ்டமாகிவிடுமா? என்று எழுகின்ற பல கேள்விகள் பங்குச்சந்தைப் பக்கம் போகாமல் அவர்களுடைய கால்களைக் கட்டிப்போட்டு விடுகின்றன.
தகவல் தொழில்நுட்பப் புரட்சி யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், இது போன்ற கேள்விகளுக்கான பதில்களை மிக எளிதாகப் பெற்றுவிடலாம். இணையத் தொடர்பின் மூலம் இருந்த இடத்திலிருந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் அறிந்து தெளியத் தெரிந்த நமக்குப் பங்குச்சந்தை முதலீடு தொடர்பான அறிவினைப் பெறுவது மிக எளிதான வேலைதான்.
ஸ்மார்ட்போண் போதும்...
ஆம், உங்கள் கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், பங்குச் சந்தையில் முதலீடு செய்து இலாபம் ஈட்டுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ளலாம்.
அதன்மூலம் நம்பிக்கையோடு நீங்கள் பங்குச்சந்தையில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டலாம். இதற்கென்றே மெய்நிகா் பங்குவர்த்தகப் பயன்பாட்டுச் செயலிகள் (virtual trading apps) இணையவெளியில் உலா வருகின்றன. இவற்றைப் பதிவிறக்கம் செய்து நம்முடைய மொபைல் போனில் நிறுவினால் நாளை நாமும் பங்குவர்த்தகத்தில் கிங்காக மாறலாம்.
மெய்நிகா் பங்குவர்த்தகப் பயன்பாட்டுச் செயலிகள் என்றால் என்ன?
விளைந்த பயிர்களையும் பழங்களையும் அறுவடைசெய்து பரிவர்த்தனை செய்வதன் மூலம் வணிகத்தில் ஈடுபடுவது போல் அமைந்துள்ள பண்ணை விளையாட்டு (Farmville) அப்ளிகேஷன்களைப் போன்றதுதான் இந்த வொ்ச்சுவல் டிரேடிங் அப்ளிகேஷன் (மெய்நிகா் பங்கு வர்த்தகப் பயன்பாட்டுச் செயலிகள்).
இந்த அப்ளிகேசனை உங்களுடைய மொபைல் போனில் நிறுவியபின் நீங்கள் ஒரு பயனாளராக உள்ளே நுழைந்து பங்கு வர்த்தகம் பற்றி விளையாட்டு மூலமாகவே அறிந்து கொள்ளலாம்.
5 லட்சம் அல்லது 10 லட்சம்
பயனாளரான உங்களுக்கு 5 லட்சம் அல்லது 10 லட்சம் என்கின்ற அளவில் மெய்நிகா் பணத்தொகை வழங்கப்படும் (virtual Note or Fake Note). அதனை வைத்துக் கொண்டு நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளின் ஏற்ற இறக்கங்களைச் சரியாகக் கணித்து முதலீடு செய்தால் நமக்கு இலாபம் கிடைக்கும். நம்முடைய கணிப்பு தவறாக அமைந்துவிட்டால் முதலீடு செய்த நாம் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
உண்மையில் நாம் எவ்வித நஷ்டமோ இலாபமோ அடையப் போவதில்லை. ஆனால் பங்குவர்த்தகத்தில் உண்மையில் என்ன நடக்கிறது, எவ்வாறு முதலீடு செய்யப்படுகிறது, நிறுவனப் பங்குகளின் விலை ஏற்ற இறக்கங்கள் எவ்வாறு கணிக்கப்படுகின்றன என அத்தனை வகையான நடைமுறைகளையும் இந்த அப்ளிகேசன் வழியாக நாம் கற்றுக்கொள்ள இயலும்.
முழுமையான கற்றல்...
சுருக்கமாகச் சொன்னால் பங்குவர்த்தக நடைமுறைகள் குறித்தும் அவற்றில் பாதுகாப்பாக எவ்வாறு முதலீடு செய்வது என்பது குறித்தும் பயனாளா்களுக்குக் (users) கற்றுக் கொடுப்பதுதான் இது போன்ற அப்ளிகேசன்களுடைய முதன்மையான நோக்கம் ஆகும்.
பல செயலிகள்
இது போன்ற பயன்பாட்டுச் செயலிகளைப் பல நிறுவனங்கள் வழங்குகின்றன. ஒவ்வொன்றும் ஏதோ ஒருவகையில் பயனாளர்களைக் கவரும் வகையில் சில சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன.
உதாரணமாகச் சில நிறுவனங்கள், தங்களுடைய அப்ளிகேசனைப் பயன்படுத்தும் பயனாளர்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்தி அவர்களுக்கிடையே குழுக்களை (gaming leagues) உருவாக்குகின்றன. குழுக்களில் இணைந்துள்ள நண்பர்கள் தங்களுக்குள் யார் அதிகம் இலாபம் சம்பாதிப்பது எனப் போட்டியிட்டு பங்குப் பரிவர்த்தனைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுகின்றனர்.
அவர்களின் வர்த்தகச் செயல்பாட்டுக்கு ஏற்ப மதிப்புப் புள்ளிகளையும் பரிசுகளையும் பெறுகின்றனர். இவ்வாறாக விளையாட்டாகவும் சுவாரஸ்யமாகவும் பங்குவர்த்தக நடைமுறைகளை இத்தகைய அப்ளிகேசன்கள் கற்றுக் கொடுக்கின்றன.
மெய்நிகா் பங்கு வர்த்தகப் பயன்பாட்டுச் செயலியினால் என்ன பயன்?
இத்தகைய அப்ளிகேசன்களை நிறுவிப் பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய அன்றாடப் பணிகளுக்கு எவ்விதப் பாதிப்பும் வரப்போவதில்லை. உணவு இடைவேளையின் பொழுது அல்லது ஓய்வாக இருக்கும் நேரத்தில் நாம் இந்த அப்ளிகேசனை இயக்கிப் பயன்பெறலாம். விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குக் காரணங்களுக்காக ஸ்மார்ட் மொபைல் போனை வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கில் நேரத்தை வீணடிக்கிறோம். அதனால் பயன் ஒன்றும் இல்லை.
ஆனால் இதுபோன்ற அப்ளிகேசன்களுக்காக நேரத்தைச் செலவிடுவதன் மூலம் பங்குப் பரிவர்த்தனை தொடர்பான அறிவினை நாம் பெறமுடியும். பங்குச்சந்தை என்னும் கடலுக்குள் காலை வைப்பதற்கு முன்னால் அதனுடைய ஆழத்தைப் பார்த்துவிடுவது நல்லதுதானே.
சிறந்த அனுபவம்
பங்குச் சந்தையில் உண்மையாகவே பணத்தை முதலீடு செய்து இலாபம் ஈட்ட நினைப்பவர்களுக்கு இங்கு விளையாட்டாகக் கிடைக்கின்ற கற்றல் அனுபவம் நிச்சயம் கை கொடுக்கும். இது போன்ற அப்ளிகேசன்களை எவ்விதக் கட்டணமுமின்றி இலவசமாகவே நிறுவிக்கொள்ளலாம்.
அனைத்தும் இலவசம்
பங்குப் பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை இலவசமாகவும் விளையாட்டாகவும் கற்றுக் கொள்ளும் பொழுதே நமக்குப் பரிசுத் தொகையும் கிடைக்கிறதென்றால் ஏன் விடவேண்டும்.
ஆம், சில நிறுவனங்கள் மெய்நிகா் பங்குப் பரிவர்த்தனைப் பயன்பாட்டுச் செயலியைச் சிறப்பாகப் பயன்படுத்திப் புள்ளிகளைக் குவிக்கும் பயனாளர்களுக்குப் பரிசுத்தொகையினையும் வழங்குகின்றன. உதாரணமாக, பங்குவர்த்தக முதலீடுகளின் மூலமாக மாதம் ஒன்றுக்கு ஒருலட்சம் ரூபாய் அளவுக்கு இலாபம் ஈட்டும் பயனாளருக்கு பரிசு கிடைக்கும் வகையில் சில அப்ளிகேசன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்திய பங்குச் சந்தைகளுக்கும் இது போன்ற அப்ளிகேசன்கள் பொருந்துமா?
உலகப் பங்குச் சந்தையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் இந்தியப் பங்குச் சந்தையையும் மையப்படுத்தி இத்தகைய அப்ளிகேசன்கள் உருவாக்கப்படுகின்றன. நிறுவனப் பங்குகள், பத்திரங்கள், நிலை வைப்புகள் (fixed Deposits), பரஸ்பரநிதித் திட்டங்கள் (Mutual Funds) ஆகியவற்றில் எவ்வாறு முதலீடு செய்வது என்பதையும் இந்த அப்ளிகேசன்கள் வழியாகப் பயனாளர்கள் கற்றுக்கொள்ளலாம்.
மெய்நிகா் பங்குவர்த்தகப் பயன்பாட்டுச் செயலி என்றால் என்ன?
அதனுடைய பயன் என்னவென்பதை அறிந்துகொண்டோம். இத்தகைய அப்ளிகேசன்களைப் பல நிறுவனங்கள் நமக்கு வழங்குகின்றன. கூகுள் பிளே ஸ்டோர் வழங்கிய மதிப்பீட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் அத்தகைய அப்ளிகேசன்களுள் மூன்றினைப் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.
1. ஸ்டாக் மார்க்கெட் சேலஞ்ச் – Stock Market Challenge
தலால் வீதி முதலீட்டு இதழ் மற்றும் மும்பை பங்குச் சந்தை (Dalal Street Investment Journal & BSE) ஆகியன இணைந்து இந்தப் பயன்பாட்டுச் செயலியை உருவாக்கியுள்ளன. இது இணையம் வழியாக உலா வரும் பங்குவர்த்தக விளையாட்டு அப்ளிகேசன். பங்குச் சந்தைக்குப் புதியவர்கள், மிகுந்த அனுபவத்தோடு பங்குச் சந்தையில் தீவிரமாகப் பரிவர்த்தனை செய்வோர், பங்குச் சந்தை முதலீட்டில் நம்பிக்கை இழந்தோர் எனப் பல நிலையில் உள்ளவர்களும் பயன்பெறும் வகையில் இந்த அப்ளிகேசன் உருவாக்கப்பட்டுள்ளது. பங்கு வர்த்தகம் தொடர்பான தகவல்கள் அடங்கிய வீடியோ மற்றும் கேள்விகளுக்கான பதில்கள் ஆகியவற்றை இந்த அப்ளிகேசன் உள்ளடக்கியுள்ளது.
சவாலின் தொடக்கத்தில் உங்களுக்குப் பத்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும். அதனை வைத்து நீங்கள் பங்குப் பரிவர்த்தனையில் ஈடுபடவேண்டும். உங்களுடைய செயல்பாடுகளைப் பொறுத்து உங்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும். ஆண்டு, மாதம்,வாரம், நாள் ஆகிய காலப்பகுப்புகளின் அடிப்படையில் பங்கு வர்த்தகத்துக்கான சவால்கள் நிர்ணயிக்கப்பட்டுப் பயனாளர்களின் வர்த்தகச் செயல்பாட்டுக்கு ஏற்ப பரிசு வழங்கப்படும்.
கூகுள் பிளே ஸ்டோர் இந்த அப்ளிகேசனுக்கு 4/5 என்கின்ற வகையில் தர மதிப்பீட்டுப் புள்ளிகளை வழங்கியுள்ளது.
2. Stock Trainer – Virtual Trading
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றினால் உருவாக்கப்பட்ட இந்த மெய்நிகா் பங்கு வர்த்தகப் பயன்பாட்டுச் செயலி உலகப் பங்குச் சந்தை குறித்துக் கற்றுக் கற்றுக்கொள்ள உதவுகிறது. உலகப் பங்குச் சந்தையில் நிகழும் நிகழ்காலப் பங்கு வர்த்தகத் தரவுகளை உள்ளது உள்ளபடியே அளிப்பதன் வாயிலாக உலகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் உள்ள சாதகம் மற்றும் பாதக அம்சங்களைப் பயனாளர்கள் அறிந்து கொள்வதற்கு இந்த அப்ளிகேசன் துணை செய்கிறது.
கூகுள் பிளே ஸ்டோர் இந்த அப்ளிகேசனுக்கு 4.4/5 என்கின்ற வகையில் தர மதிப்பீட்டுப் புள்ளிகளை வழங்கியுள்ளது.
3. Trade Hero
"வர்த்தக நாயகன்" என்னும் பொருள்படும்படியான பெயரில் அமைந்த இந்த அப்ளிகேசனை சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் தயாரித்துள்ளது. பயனாளர்களைக் கவர்ந்திழுக்கும் வகையிலான அம்சங்கள் இதில் உள்ளன. இந்த அப்ளிகேசனைப் பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களுடைய சிறப்பான வர்த்தகச் செயல்பாட்டின் மூலமாக அதிகமான பின்தொடா்பாளா்களைப் (followers) பெற்றால், அவர்களின் வாயிலாக ஒரு குறிப்பிட்ட சந்தாத்தொகையை வருமானமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
அதேபோன்று தங்களுடைய முதலீடுகளின் மூலமாக அதிக இலாபத்தோடு இயங்கும் பயனாளர்களை நாம் பின் தொடர்வதன் மூலமாகப் பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கங்களையும், முதலீட்டு நுட்பங்களையும் துல்லியமாக அறிந்து பயன்பெறலாம்.
கூகுள் பிளே ஸ்டோர் 4.1/5 தரப்புள்ளிகளை இந்த அப்ளிகேசனுக்கு வழங்கியுள்ளது.