இந்தியப் பொதுத்துறை வங்கிகளுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக விளங்கும் வாராக் கடன் சுமையைக் குறைக்கவும், அதேவேளையில் வாராக் கடன்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்ற கட்டாயத்தில் மத்திய நிதியமைச்சகம் இருக்கும் காரணத்தாலும் பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட்ட வாராக் கடன் வங்கி திட்டத்தை வேகமாக நடைமுறைப்படுத்தியுள்ளது மத்திய அரசு.
வாராக் கடன் வங்கி
National Asset Reconstruction Company Ltd (NARCL) என அழைக்கப்படும் இந்த வாராக் கடன் வங்கி ஜூலை மாதம் துவக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் 16ஆம் தேதி இந்த அமைப்பிற்கு 30,600 கோடி ரூபாய் அளவிலான உத்தரவாதம் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இந்த வாராக் கடன் வங்கி எப்படி இயங்கும்..? இதனால் என்ன பயன்..?
NARCL அமைப்பு
NARCL அமைப்புப் பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் வாராக் கடன் அதாவது வங்கிகள் கொடுக்கப்பட்ட கடனை இனி வசூலிக்க முடியாது என அறிவிக்கப்பட்ட கடன்களை வசூலிக்கத் தான் இந்த அமைப்பு.
வங்கிக் கடன்
பொதுவாக வங்கிகள் பெரிய தொகைக்கு அளிக்கப்படும் கடன்களுக்கு சொத்துக்களை அடமானமாகப் பெற்று தான் கடன் அளிக்கும். இந்நிலையில் கடனை வசூலிக்க முடியாத நிலையில் இருக்கும் கடனுக்கான சொத்துக்களை விற்பனை செய்து வங்கிகளின் சுமையைக் குறைப்பது தான் NARCL அமைப்பின் பணி.
ரூ.500 கோடிக்கும் அதிகமான கடன்
NARCL அமைப்பு 500 கோடி ரூபாய்க்கு அதிகமாக இருக்கும் கடன்களை மட்டுமே எடுக்க உள்ளது. அதற்குக் குறைவாக இருக்கும் கடன்களைக் கட்டாயம் எடுக்கப்போவது இல்லை என்ற கொள்கையை வைத்துள்ளது. இதுபோன்று வாராக் கடனுக்கான தீர்வு காணும் பணிகளை ஏற்கனவே வங்கிகள் செய்து வருகிறது.
வாராக் கடன்
ஆனால் இது வாராக் கடனுக்கான பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டு உள்ள அமைப்பு என்பதால் கடனுக்கான தீர்வு விரைவாக எடுக்கப்படுவது மட்டும் அல்லாமல் பெரும் முதலீட்டாளர்கள், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வாராக் கடனில் சிக்கியுள்ள சொத்துக்களைக் கைப்பற்ற ஒற்றை அமைப்பை அணுகுவது மிகவும் எளிதாக இருக்கும் என்பதே இதன் தனிச் சிறப்பு.
ரூ.2 லட்சம் கோடி வாராக் கடன்
NARCL அமைப்பு இந்திய பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை கைப்பற்ற முடிவு செய்திருந்தாலும், அதிகக் கடன் சுமை கொண்ட முக்கியமான கணக்குகளில் இருக்கும் 89,000 கோடி ரூபாய்க் கடனுக்கு தான் முதற்கட்டமாகத் தீர்வு காண முடிவு செய்துள்ளது.
எப்படி இயங்கும்..?
NARCL அமைப்பு வங்கிகளில் இருக்கும் வாராக் கடன் கணக்கிற்குச் சொந்தமான சொத்துக்களை ஆய்வு செய்து குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்யும். இந்தத் தொகையில் NARCL அமைப்பு 15 சதவீத தொகை முன்பணமாகக் கொடுத்துச் சொத்துக்களைக் கைப்பற்றும், மீதமுள்ள 85 சதவீத தொகையை அரசு உத்தரவாதம் கொடுத்த 30600 கோடி ரூபாய் தொகையை அடிப்படையாகக் கொண்டு செக்யூரிட்டி ரெசிப்ட்-ஆகக் கொடுக்கும்.
செக்யூரிட்டி ரெசிப்ட் ரிடீம்
சொத்துக்களை விற்பனை செய்து கிடைக்கும் தொகையில் வங்கிகளுக்குக் கொடுத்த 85 சதவீத தொகைக்கான செக்யூரிட்டி ரெசிப்ட் திரும்பப் பெற்று உரியத் தொகையை அளிக்கும். இந்த முறையில் வங்கிகளின் வாராக் கடன் சுமை விரைவாகக் குறைக்கப்படும் என்பது ஒருபக்கம் இருந்தாலும், சொத்துக்களை விற்பனை செய்ய முடியாத பட்சத்தில் NARCL அமைப்பு அதிகளவில் பாதிக்கும் என்பது முக்கியப் பிரச்சனையாக உள்ளது.
அரசு பூர்த்தி செய்யும்
மேலும் NARCL அமைப்பு வங்கிகளுக்கு அளித்த செக்யூரிட்டி ரெசிப்ட் மதிப்பிற்கு வாராக் கடன் மதிப்பில் குறைபாடு இருந்தால் அது அரசு பூர்த்தி செய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
5 வருடம் மட்டுமே..?!
ஒருபக்கம் வங்கி தரப்பு இதை வரவேற்று வந்தாலும், இது வெற்றி அடையாது என்று சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் அரசு 5 வருடத்திற்கு மட்டுமே இந்த 30,600 கோடி ரூபாய் உத்தரவாதம் கொடுக்கப்பட்டு உள்ளது. 5 வருடத்திற்குப் பின்பு NARCL அமைப்பு நிலை என்ன என்பது பெரிய கேள்வி குறியாக உள்ளது. இதேபோல் மொத்த வாராக் கடனை தீர்ப்பது மிகவும் கடினம்.
ரிசர்வ் வங்கி
NARCL அமைப்பு ஜூலை மாதமே துவக்கப்பட்டு இருந்தாலும், இந்த அமைப்பிற்கு இன்னமும் ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கவில்லை என்பதால், அடுத்தகட்ட பணிகளுக்குச் செல்ல முடியாமல் இந்த அமைப்பு உள்ளது. விரைவில் இந்த அமைப்பிற்கு உரிமம் வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.