ஏற்கனவே சென்செக்ஸில் ரத்தம் தெறிக்க தெறிக்க பங்குகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள். இந்தியாவின் தொழில் ஜாம்பவான்களின் பங்குகளே விலை ஏறாமல் தடுமாறுகிறது.
பதறும் பங்குகள்
ரிலையன்ஸ், ஹீரோ, டிசிஎஸ் போன்றவர்கள் இதற்கு உதாரணம். பேட்டா காலணி விலைகளைப் போல 36,000 புள்ளிகள் என்பது சென்செக்ஸுக்கு ஒரு சைக்கலாஜிக்கல் புள்ளி. அதையும் உடைத்துக் கொண்டு கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது.
உடைந்த பானை
சென்செக்ஸைப் போல நிஃப்டியும் தன் சைக்கலாஜிக்கல் பாயின்டான 10,650க்கு கீழ் வர்த்தகமாகி வருகிறது. ஐடி, எண்ணெய் மற்றும் கேஸ் செக்டார் பங்குகள் ஏற்கனவே ஓவர் சூட்டில் உருகிக் கொண்டிருக்கிறது. அய்யா ரசாங்கமே ஏதாவது செய்து எங்களை ரட்சிப்பீராக என்று அரசின் உதவிக்காகக் காத்திருக்கிறது, முதலீட்டாளர் சமூகம். இதை எல்லாம் தவிர வேறு என்ன வலுவான காரணங்கள் சந்தையை இறக்குகின்றன என்று பார்ப்போம்.
1. அமெரிக்க டாலர்
டாலர் ஒரு அச்சடித்த ஆயுதம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை தானே. அந்த டாலர் தற்போது உலக அளவில் நன்றாக வலுவடைந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை ஜப்பானின் யென்னுக்கு (ஜப்பான் பணத்துக்கு) நிகரான மதிப்பில், கடந்த 11 மாதம் இல்லாத உயர்வை எட்டி இருக்கிறது. அதோடு அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வலுவாக இருக்கின்றன. ஜப்பானுக்கு நிகராக அதிகரிக்கும் போது இந்தியாவை மட்டும் விட்டு வைக்குமா என்ன?
2. பாண்டுகளின் வட்டி விகித உயர்வு
டாலர் காரணங்களால் அமெரிக்க கருவூல பாண்டுகளின் வட்டி விகிதமும் அதிகரித்து இருக்கிறார்கள். அங்கே வட்டி விகிதம் அதிகரிக்கும் போது நம்மூரில் முதலீடு செய்ய இருப்பவர்கள் அல்லது செய்திருப்பவர்கள் கூட சற்று பாதுகாப்பாக இருக்கட்டுமே என்று அமெரிக்க பாண்டுகளிலேயே முதலீடு செய்வார்கள். இதனால் இந்திய சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு குறைந்து வருகிறது. செபி வலைத்தள தகவல் படி 2017 - 18 நிதி ஆண்டில் 25,635 கோடி ரூபாய் ஈக்விட்டிகளிலும், 1,19,036 கோடி ரூபாய் கடன் சார்ந்த முதலீடுகளிலும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors - FII) முதலீடு செய்திருக்கிறார்கள். ஆனால் 2018 - 19-ல் அக்டோபர் 04, 2018 வரையான தகவல்கள் படி ஈக்விட்டி சார்ந்த முதலீடுகளில் 30,536 கோடி ரூபாய் முதலீடுகளை விற்று இருக்கிறார்கள். 49,251 கோடி ரூபாயைக் கடன் சார்ந்த முதலீடுகளில் இருந்து விற்று இருக்கிறார்கள். இதனால் சந்தையில் பங்குகளை வாங்க ஆள் இல்லாமல் விலை இறங்கிக் கொண்டே இருக்கிறது.
3. வழக்கமான வில்லன்
கச்சா எண்ணெய். இதன் வீழ்ச்சி தான் இந்திய சந்தைகளின் வளர்ச்சி என்கிற ரீதியில் போய்க் கொண்டிருக்கிறது கதை. கச்சா எண்ணெய் கடந்த நான்கு வருடங்களில் இல்லாத அளவுக்குப் பேரல் ஒன்றுக்கு 86 டாலருக்கு விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. இதில் அமெரிக்காவின் ஈரான் பொருளாதாரத் தடையும் ஒரு காரணம். டிசம்பர் 2019க்குள் ஒரு பேரல் பிரன்ட் கச்சா எண்ணெய் 100 டாலரைத் தொடும் என்று ஆரூடம் சொல்கிறார்கள்.
4. ஆர்பிஐ வட்டி விகித முடிவுகள்
ஆர்பிஐ முன்பு இரண்டு ஆங்கில C-கள் குத்த வைத்துக் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. Currency and Crude. இந்த இரண்டையும் கட்டுப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ஆர்பிஐ. கடந்த ஆர்பிஐ கூட்டத் தொடரில் இருந்து இப்போது வரை கரன்ஸி சுமார் ஏழு சதவிகிதம் தன் மதிப்பை இழந்திருக்கிறது. கச்சா எண்ணெய் 17 சதவிகிதம் விலை அதிகரித்திருக்கிறது. இந்த பிரச்சினைகள் இல்லாமல் வட்டி விகிதம் உயர்வு வேறு. இவை அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களில் நடந்திருக்கின்றன.
5. 200 டி.எம்.ஏ
என்னமோ கர்நாடக தண்ணீர்ப் பிரச்சனை கணக்கு என்று நினைக்காதீர்கள். 200 நாட்கள் வர்த்தகம் நிறைவடையும் புள்ளிகளை கூட்டி 200-ல் வகுத்தால் கிடைப்பது 200 Day Daily moving Average. இந்த சராசரிப் புள்ளியையே உடைத்துக் கொண்டு சந்தைக் கீழ் நோக்கி வர்த்தகமாகி வருகிறது. எனவே சந்தை மேலும் சரிந்து 10,555 வரை கூட போகலாம் என்று டெக்னிக்கல் அனலிஸ்டுகள் கணித்திருக்கிறார்கள்.