நடப்பு ஆண்டில் இந்தியாவில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பது நடுத்தர மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகளை தூண்டியுள்ளது. சொல்லப்போனால் வழக்கமான ஆண்டுகளை விட, இந்த ஆண்டு பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடப்பு பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு நேர பட்ஜெட் இதுவாகும். ஆக பட்ஜெட்டின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடிக்க மத்திய அரசு திட்டமிடலாம். ஆக இந்த பட்ஜெட் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சவாலான காரணிகள்
குறிப்பாக சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றம், பணவீக்கம், சப்ளை சங்கிலியில் ஏற்பட்டுள்ள தாக்கம், கொரோனாவினால் ஏற்பட்ட தாக்கம், வேலையிழப்பு, ரெசசன் அச்சம் என பல காரணிகளுக்கு மத்தியில் இந்த பட்ஜெட்டானது தாக்கல் செய்யப்படவிருக்கின்றது. இதற்கிடையில் பட்ஜெட்டின் மத்தியில் பங்கு சந்தையில் தாக்கம் எப்படி இருக்கும் வாருங்கள் பார்க்கலாம்.
கடந்த 10 பட்ஜெட்டுகளின் நிலவரம் என்ன?
கடந்த 10 பட்ஜெட் நாட்களின் போது பெரும்பாலும் பங்கு சந்தைகளில் சரிவிலேயே காணப்பட்டுள்ளது. இது நடுத்தர மக்களுக்கு ஏதும் மிகப்பெரிய ஆறுதல் தரும் விதமாக வரி சலுகைகள் இருக்கலாம். பணவீக்கத்தின் மத்தியில் மக்களுக்கு பலனலளிக்கும் வகையில் எந்த மாதிரியான அறிவிப்புகள் வரப்போகின்றவோ என்ற எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில், இன்றே இந்திய பங்கு சந்தையில் சரிவில் காணப்படுகின்றது.
10ல் 6 ஆண்டுகள் சரிவு
இந்த பட்ஜெட்டானது அரசின் 5 டிரில்லியன் டாலர் இலக்கினை நோக்கி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 10 முழு நேர பட்ஜெட்களில் 6 பட்ஜெட் அமர்வு நாளில் சந்தைகள் சரிவிலேயே காணப்பட்டது. இதில் இரண்டு இடைக்கால பட்ஜெட்டும் அடங்கும். குறிப்பாக 6 அமர்வுகளில் நிஃப்டியும் தனது மதிப்பினை இழந்துள்ளது.
பட்ஜெட்டிற்கு பிறகு எப்படி?
எப்படியிருப்பினும் கடந்த 10 ஆண்டுகளாக பட்ஜெட் நாளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படவில்லை. இது 2% மேலாக ஏற்றமோ சரிவோ காணவில்லை. அதேபோல பட்ஜெட்டிக்கு பிறகும் அடுத்த ஒரு மாதத்தில் லாபமோ நஷ்டமோ 6% தாண்டவில்லை என்றும் நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
பட்ஜெட் 2013
அப்போதைய நிதியமைச்சராக இருந்த ப சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட் 2013, பிப்ரவரி 28 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தினத்தில் சந்தையானது சுமார் 2% சரிவினையே கண்டது. பட்ஜெட்டுக்கு பிறகு 1 மாதத்திலும் சரிவிலேயே காணப்பட்டது.
பட்ஜெட் 2014
ப சிதம்பரம் தாக்கல் செய்த இரண்டாவது இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 17, 2014 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் சந்தையானது ஏற்றத்திலேயே காணப்பட்டது.
அதன் பிறகு பிஜேபி அரசு பதவியேற்ற நிலையில், மீண்டும் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஜூலை 17, 2014 அன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அன்றும் பங்கு சந்தையானது சரிவில் தான் காணப்பட்டது. எனினும் பட்ஜெட்டுக்கு பிறகு சந்தையானது மீண்டும் ஏற்ற பாதைக்கு திரும்பியது.
பட்ஜெட் 2015
நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2015 அன்று சந்தையானது ஏற்றத்தில் காணப்பட்டது. எனினும் ஒரு மாதத்திற்கு பிறகு பார்க்கும்போது சற்று சரிவில் காணப்பட்டது.
பட்ஜெட் 2016ம் அருண் ஜெட்லியே தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் நாளில் சந்தையானது சரிவினைக் கண்டிருந்தாலும் , ஒரு மாதத்திற்கு பிறகு பார்க்கும்போது ஏற்றத்தில் தான் காணப்பட்டது. இது கடந்த 2011க்கு பிறகு நல்ல ஏற்றத்தில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அருண் ஜெட்லியின் கடைசி பட்ஜெட்
அதன் பிறகு பாசிட்டிவான 2017 பட்ஜெட் தினத்திலும், 2018 பட்ஜெட் தினத்தில் ஏற்றத்திலேயே காணப்பட்டது. இந்த ஏற்றமானது 2011 - 2020ல் மிக அதிகம் எனலாம்.
பட்ஜெட் 2018- இது நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த கடைசி பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட் ஜிஎஸ்டி-க்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் ஆகும். எனினும் இந்த ஆண்டில் சந்தையில் சற்று தாக்கம் இருந்தது.
நிர்மலா சீதாராமன் முதல் பட்ஜெட்
பட்ஜெட் 2019 -ஐ பியூஸ் கோயல் 2019 பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்தார். அன்று சந்தையானது ஏற்றத்தில் காணப்பட்டது. அதன் பிறகு பாஜக அரசு இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற நிலையில், நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். ஆனாலும் இந்த பட்ஜெட் பெரியளவில் முதலீட்டாளர்களை ஈர்க்கவில்லை. இதன் காரணமாக சந்தையானது சரிவில் காணப்பட்டது. இது கடந்த 2011 - 2021 இடையேயான காலகட்டத்தில் மோசமான சரிவினைக் கண்டது.
அடுத்தடுத்த bjp பட்ஜெட்கள்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இரண்டாவது பட்ஜெட் 2020 அன்றும் பலத்த சரிவினையே கண்டது.
அதன் பிறகு 2021ல் வலுவான ஏற்றத்தினை கண்டது. இந்த பட்ஜெட்டில் மேட் இன் இந்தியா திட்டம் பற்றியும் அறிவிக்கப்பட்டது. அதோடு முதல் முறையாக டிஜிட்டல் முறையாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் 2022
பட்ஜெட் 2022 தினத்தன்றும் இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் காணப்பட்டன. எனினும் பட்ஜெட்டுக்கு பிறகு ஒரு மாதம் கழித்து சரிவில் தான் காணப்பட்டது. இதற்கிடையில் நாளை பட்ஜெட் 2023 தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இதன் தாக்கமும் சந்தையில் இருக்கலாம்.