சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய சேவைத்துறையில் ஏற்பட்டுள்ள தொய்வு, முன்னணி நிறுவனங்களின் மந்தமான காலாண்டு முடிவுகள், ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் எனப் பல்வேறு காரணங்களுக்காகக் கடந்த ஒரு வாரத்தில் மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் பெரிய அளவிலான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது.
இந்நிலையில் இந்த வாரத்தின் வர்த்தகத்தை முடிவு செய்யும் 10 முக்கியமான விஷயங்களையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம். பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் முழுமையாகப் படித்து முதலீட்டைச் சரியான இடத்தில் செய்யுங்கள்.
குஜராத் தேர்தல்
பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தின் தேர்தல் இந்திய வர்த்தகச் சந்தையைப் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும். சனிக்கிழமை முதல் கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்து, வர்த்தகச் சந்தை விடுமுறையின் காரணமாகச் சந்தையின் தாக்கம் தெரியாத நிலையில், நாளை பெரிய அளவிலான மாற்றத்தை முதலீட்டாளர்கள் சந்திக்க வாய்ப்புகள் உள்ளது.
மேலும் 2வது கட்ட வாக்குப்பதிவுகள் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறுகிறது, இதன் முடிவுகள் டிசம்பர் 18ஆம் தேதி அறிவிக்கப்படும்.
அமெரிக்கப் பெடரல் கூட்டம்..
டிசம்பர் 12-13ஆம் தேதிகளில் அமெரிக்காவின் பெடரல் வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தை நடத்த உள்ளது, இக்கூட்டத்தில் அமெரிக்காவின் மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் வரையில் உயர்த்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இது உறுதியாகும் பட்சத்தில் இந்திய சந்தையில் இருக்கும் அதிகப்படியான முதலீடு வெளியேறும்.
முக்கியத் தகவல்கள்
இந்த வாரம் நவம்பர் மாதத்திற்கான சிபிஐ பணவீக்கம் மற்றும் தொழிற்துறை அவுட்புட் தகவல்களால் டிசம்பர் 12ஆம் தேதியும், மொத்த விலை பணவீக்கம் குறித்த தகவல்கள் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது.
இதன் வாயிலாகவும் மும்பை பங்குச்சந்தை கணிசமான தாக்கத்தை எதிர்கொள்ள உள்ளது.
ஐபிஓ
இந்த வாரம் மருத்துவமனை இயக்கும் நிறுவனமான ஷால்பை டிசம்பர் 7ஆம் தேதியும், அஸ்டிரான் பேப்பர் மற்றும் போர்டு மில் டிசம்பர் 19ஆம் தேதி மும்பை பங்குச்சந்தையில் ஐபிஓவிற்காகப் பட்டியலிட உள்ளது.
காலாண்டு முடிவுகள்
இந்த வாரம் சுமார் 150க்கும் அதிகமான நிறுவனங்கள் தங்களது ஜூலை - செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது. இதனால் சந்தையில் பெரிய அளவிலான மாற்றத்தை எதிர்கொள்ள நேரிடம்.
எப்ஐஐ மற்றும் டிஐஐ
ஆர்பிஐ நாணய கொள்கை முடிவுகளுக்குப் பின் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் அதிகளவிலான முதலீடு செய்தனர். இப்போது அமெரிக்கப் பெடரல் வங்கியின் முடிவுகளை நம்பியே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீடுகள் உள்ளது.
கார்பரேட் செயல்கள்
பல முன்னணி நிறுவனங்கள் இந்த வாரத்தில் தனது ஈவுத்தொகை மற்றும் பங்கு விநியோகத்தைச் செய்ய உள்ளதால் முதலீட்டாளர்கள் கூடுதலான முதலீட்டுச் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய நிறுவனங்கள்
இந்த வாரம் யுனிடெக், ஹெச்சாவேர், ஆக்சிஸ் வங்கி, ஐஎல் அண்ட் எப்எஸ் இன்ஜினியரிங் சர்வீசஸ், சிறு ஸ்டீல் நிறுவனங்கள், மேக்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்களின் வாயிலாகக் கணிசமான தாக்கத்தை மும்பை பங்குச்சந்தை எதிர்கொள்ளும்.
கச்சா எண்ணெய்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தற்போது 61-65 டாலர் அளவில் இருக்கும் நிவையில் இதன் விலை தொடர்ந்து உயரும் வாய்ப்புகளைக் கொண்டுள்ள நிலையில், தொடர்ந்து பங்கு சந்தை முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்து வருகின்றனர்.
உலகச் சந்தை
இந்திய பங்குச்சந்தையில் அதிகளவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டால் இயங்கி வரும் நிலையில் சீனா, ஐரோப்பிய, அமெரிக்கச் சந்தைகளைப் பொறுத்தே மும்பை பங்குச்சந்தை இயங்கும்.