பங்கு சந்தையில் ஆரம்ப காலத்தில் அதிக ஆர்வம் காட்டியது குஜராத் மற்றும் ராஜஸ்தான் முதலீட்டாளர்கள் தான். இவர்கள் பயன்படுத்திய ஒரு நிதியாண்டு தான் சம்வாட். இது இன்றும் நேபாளில் மற்றும் இந்தியாவிலும் சில பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றது.
இவர்கள் தொடங்கிய ஒரு விஷயம் தான் சம்வாட். அதாவது இந்த விக்ரம் சம்வாட்டில் உள்ள தீபாவளி சமயத்தில் கொண்டாடப்படும், ஒரு சிறப்பு வர்த்தக தினமாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில் வணிகம் செய்து லாபம் பார்த்தால், அந்த வருடம் முழுவதும் லாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
12 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு லாபம்
சம்வாட் 2077ம் ஆண்டில் பங்கு சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தினை கண்டனர். குறிப்பாக நிஃப்டி 50 ஆனது 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இது சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை குறைத்த நிலையில், அது சந்தைகளுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக அமைந்தது. இந்த நிலையில் சில்லறை முதலீட்டாளர்களின் முதலீடும் அதிகரித்தது.
அன்னிய முதலீடுகள் வரத்து
இந்த ஆண்டில் அன்னிய முதலீடுகளில் வரத்து என்பது மிகப்பெரிய அளவில் இருந்தது. இந்த ஆண்டில் 18.73 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.. இது கடைசியாக கடந்த சம்வாட் 2069ல் அதிகபட்சமாக 22 பில்லியன் டாலராக இருந்தது. அதன் பிறகு இந்த உச்சத்தினை எட்டவில்லை எனலாம். இந்த நிலையில் தான் நடப்பு ஆண்டில் இந்திய சந்தையானது தொடர்ந்து நல்ல வளர்ச்சி கண்டு வந்தது.
நிஃப்டி குறியீடு
இப்படியொரு ஏற்றத்திற்கு மத்தியில் தான் நிஃப்டி குறியீடானது 12 ஆண்டுகளில் (சம்வாட் 2066 - சம்வாட் 2077) இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.
சம்வாட் 2077ல் இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் 40% வருமானத்தினை கொடுத்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் அன்னிய போர்ட்போலியோ முதலீடுகள் ஆகும்.
சரிவில் இருந்து ஏற்றம்
கொரோனா காலத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்ட நிலையில், இது 60,000 புள்ளிகளை தொட்டது. இதே நிஃப்டி 50 ஆனது 7,600 புள்ளிகளை தொட்ட நிலையில், 18,000 புள்ளிகளையும் தொட்டது.
தற்போது வங்கிகளில் வட்டி விகிதம் குறைந்துள்ள நிலையில் வங்கி டெபாசிட், நிரந்தர வருமானம் கொடுக்கும் முதலீடுகள், பத்திர லாபம் கொடுக்கும் வருமானம் என பலவற்றிற்கும் மாற்றாக இந்திய சந்தைகள் மாற்றாக அமைந்தது.
இன்டெக்ஸ் நல்ல ஏற்றம்
குறிப்பாக பிஎஸ்இ மிட் கேப் மற்றும் பிஎஸ்இ ஸ்மால் கேப் குறியீடுகள் முறையே இந்த காலகட்டத்தில், சுமார் 75% மற்றும் 95% ஏற்றம் கண்டுள்ளது.
எனினும் கடந்த 2019 மற்றும் 2018ம் ஆண்டுகளில் பெரும் மாற்றம் இல்லை என்படு குறிப்பிடத்தக்கது.
பல துறைகள் ஏற்றம்
சம்வாட் 2077ல் தொழிற்சாலைகள் மற்றும் மற்ற சுழற்சிகள் மீண்டு சிறப்பாக செயல்பட்டாலும், கொரோனாவுக்கு பின்பு சில துறைகள் மெதுவான வேகத்திலேயே காணப்படுகின்றது. எனினும் குறிப்பாக மெட்டல், ரியல் எஸ்டேட் மற்றும் பொதுத்துறை வங்கிகள் முறையே 156%, 125% மற்றும் 115% ஏற்றம் கண்டுள்ளது. இதே பார்மா மற்றும் எஃப்.எம்.சி.ஜி மற்றும் தனியார் வங்கிகள் 20 - 30% ஏற்றம் கண்டுள்ளது.
எதிர்மறையான வளர்ச்சி
இந்த நிலையில் சம்வாட் 2078ல் சில துறைகளில் வளர்ச்சிகள் மந்தமாகலாம். இது வட்டி விகிதம் அதிகரிப்பு, பணவீக்கம் உள்ளிட்ட பல குறியீடுகள் எதிர்மறையான வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம் என நிபுணர்கள் சுட்டிக் காட்டுக்கின்றனர். மேலும் இந்த சமயத்தில் அதிகரித்து வரும் உலகளாவிய கமாடிட்டி பொருட்களின் விலையேற்றமும் கவனிக்க வேண்டிய முக்கிய காரணியாக அமையலாம்.
சந்தைக்கு சாதகமான காரணிகள்
இதற்கிடையில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையின் காரணமாக பணவீக்கம் உச்சம் தொடலாம். இதுவும் சந்தையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். எனினும் தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், அது விரைவில் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம். மேலும் 2078ல் தடுப்பூசி போடப்படும் விகிதமும் அதிகரித்து வரும் நிலையில் இதுவும் சந்தைக்கு சாதகமாக அமையலாம்.
நுகர்வு அதிகரிக்கும்
அதோடு சம்வாட் 2078ல் அதிகளவில் நுகர்வானது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நுகர்வு சார்ந்த துறைகள் மீட்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பயணம் மற்றும் சுற்றுலா, வங்கிகள் மற்றும் ஆட்டோ ஆகியவை சம்வாட் 2078ல் நல்ல ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிஃப்டி ஏற்றம்
மேலும் வங்கிகள், ஆட்டோமொபைல் துறை, மல்டிபிளெக்ஸ், சில்லறை துறை, சிஜிடி, கேப்பிட்டல் குட்ஸ், உள்கட்டமைப்பு துறைகள் வரவிருக்கும் காலத்தில் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சம்வாட் 2078ன் போது நிஃப்டி 12 - 15% வரை ஏற்றம் காணலாம் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.