டெல்லி: இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பயத்தினால் இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன.
மேலும் ஏஜிஆர் நிலுவைத் தொகை குறித்தான உச்ச நீதிமன்றத்தின் நிலைபாடுகளினால் பங்குகளை விற்று முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பாதுக்காக்க நினைத்தனர். இதுவும் கூட ஒரு வகையில் இன்றைய வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.
இதில் வேடிக்கை என்னவெனில் நிறைய வங்கிகள், தொலைத் தொடர்பு துறைக்கு கொடுத்த கடனினால், மிகுந்த அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளன. ஆக மொத்தத்தில் மிச்சமிருக்கும் துறைகளில் ஐடி பங்குகள் மட்டுமே சற்று ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகின்றன.
சந்தை வீழ்ச்சி
தொடந்து வீழ்ச்சி கண்டு வரும் இந்திய பங்கு சந்தையானது தற்போதும் வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1,441 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 29,137 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 423 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 8543 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 74.32 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் இன்று மட்டும் 4.12 லட்சம் கோடி ரூபாயினை சொத்து மதிப்பினை இழந்துள்ளனர்.
பெருகி வரும் கொரோனா தாக்கம்
இந்தியாவில் நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்று கொரோனாவினால் கிட்டதட்ட 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் இந்த கொடிய தாக்கத்திற்கு பலியாகியுள்ளனர். இதே 14 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். பெருகி வரும் இந்த வைரஸினால் பெரும்பாலான மாநிலங்களில் உணவகங்கள், திரையரங்குகள், மால்கள், ஜிம்கள், கோவில்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் ஏற்கனவே சரிவினை சந்தித்துள்ள நிலையில், தொற்று அதிகரித்து வரும் இந்த நிலையில் இதன் தாக்கம் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
உலகளவில் அதிகரித்து வரும் தாக்கம்
இந்தியாவில் மட்டுமே இந்த அளவுக்கு தாக்கம் உள்ளது எனில், சர்வதேச அளவில் இதன் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என கணிக்க முடிகிறதா? உலகில் சுமார் 1,98,000 பேருக்கும் இதன் தாக்கம் உள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 8,000 பேரை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் பொருளாதார ரீதியிலான தாக்கம் எந்தளவுக்கு இருக்கும் என்பது கணிக்க முடியாத நிலையில் உள்ளது.
ஏஜிஆர் நிலுவை
உச்ச நீதிமன்றம் தனது விசாரணையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களை சுயமதிப்பீடு செய்யக் கூறியது. குறிப்பிட்ட தேதிக்குள் தவனையை கட்ட தவறியதை அடுத்து உச்ச நீதிமன்றம் எச்சரித்து கூட அனுப்பியது. மேலும் குறிப்பிட்ட தொகையை கட்டாயம் செலுத்தியாக வேண்டும் எனவும் எச்சரித்து அனுப்பியது.
நீதிமன்றம் எச்சரிக்கை
ஆனால் தொலைத் தொடர்பு துறைகள் தங்களது கணக்கீட்டின் படி குறைந்த தொகையை செலுத்த வேண்டியுள்ளது என கூறின. இதனால் உச்ச நீதிமன்றம் நிலுவை தொகையினை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் கோரின. ஆனால் உச்சநீதிமன்றம் நிலுவையில் எந்த மாற்றமும் இல்லை. நிலுவையைத் தொகையை கட்டத் தவறினால், நிர்வாக இயக்குனர்கள் சிறைசெல்ல நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.
பங்கு விலை சரிவு
இதனையடுத்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடன் வாங்கிய வங்கி பங்குகளும் படு வீழ்ச்சி கண்டு வருகினறன. ஏனெனில் கணிசமான வாராக்கடன் தொகையினை இந்த நிறுவனங்கள் கொண்டுள்ளன. குறிப்பாக இந்தஸிந்த் பேங்கிற்கு 3,995 கோடி ரூபாயினை வோடபோன் நிறுவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் இப்பங்கின் விலையானது 32% வீழ்ச்சி கண்டு 416 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
அன்னிய முதலீடு வெளியேறல்
மேலும் நீடித்து வரும் கொரோனா பயத்தின் காரணமாக தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றன. குறிப்பாக மார்ச் மாதத்தில் மட்டும் இதுவரையில் 38,188 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்றுள்ளதாக அக்கார்ட் பின்டெக் தரவுகளின் படி தெரிய வந்துள்ளது. இதனாலும் சந்தை வீழ்ச்சி கண்டுள்ளது.
முதலீடும் குறைந்து வருகிறது
சொல்லப்போனால் மார்ச் மாதத்தில் ஒவ்வொரு அமர்விலும் பங்கு விற்பனையில் அன்னிய முதலீடுகள் கணிசமான அளவு இருந்தன. இதன் காரணமாக சந்தை மீண்டும் பலத்த அடியினை வாங்கி வருகிறது. மேலும் தலால் தெருவில் முதலீடு செய்வதையும் இது குறைத்து விட்டது. ஆக சந்தையில் இது மேலும் அழுத்ததினை உருவாக்கியுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம்
சர்வதேச சந்தையில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் பாதுகாப்பினை காரணம் காட்டி, பாதுகாப்பான அம்சங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இது சந்தை சரிவிற்கு வழி வகுத்துள்ளது. இதனால் சர்வதேச பங்கு சந்தைகளும் அழுத்தத்தில் தான் உள்ளன. குறிப்பாக ஆஸ்திரேலியா 6.4% வீழ்ச்சியிலும், ஜப்பானின் நிக்கி 0.2%, அமெரிக்க ஸ்டாக் ப்யூச்சர் 3.7%, எஸ் அன்ட் பி 6%, டவ் ஜோன்ஸ் 5.2% வீழ்ச்சியும் கண்டுள்ளது.
ஆக இப்படியாக பல காரணங்களினால் சந்தை பலமான வீழ்ச்சியைக் கண்டு வருகிறது.