கொரோனா வைரஸ் தான் உலக பங்குச் சந்தைகளின் கொடூர சரிவுக்கு முக்கிய காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இப்போது வரை சுமாராக 2.19 லட்சம் நோயாளிகள் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 8,950 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள்.
இந்தியாவின் சென்செக்ஸ் இண்டெக்ஸ் சுமாராக 2,150 புள்ளிகள் சரிவை சந்தித்து இருக்கிறது. இப்படி இந்திய சந்தைகள் சரிவுக்கு வேறு என்ன காரணங்கள் இருக்கின்றன என்பதைத் தான் இங்கு பார்க்க இருக்கிறோம்.
சென்செக்ஸ்
சென்செக்ஸ் கடந்த 09-01-2017 அன்று 26,701 புள்ளிகளைத் தொட்டது. அதன் பின் ஒரு முறை கூட சென்செக்ஸ் 26,701 புள்ளிகளைத் தொடவில்லை. ஆனால் இன்று சென்செக்ஸ் தன் குறைந்தபட்ச புள்ளியாக 26,714 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது. இப்படி தினமும் சென்செக்ஸ் பின்னோக்கியே சென்று கொண்டு இருக்கிறது.
நிஃப்டி
சென்செக்ஸாவது பரவாயில்லை, 2017-ம் ஆண்டில் நிற்கிறது. ஆனால் நிஃப்டி 2016-ம் ஆண்டுக்கே சென்றுவிட்டது. நிஃப்டி கடந்த 25-05-2016 அன்று 7,809 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. ஆனால் இன்று கிட்டத்தட்ட இந்த புள்ளிகளைத் தொடும் விதத்தில் 7,832 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இதற்கு எல்லாம் கொரோனா தவிர என்ன காரணம்..? வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
டாலர் ரூபாய்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சுமாராக 75 ரூபாயைத் தாண்டிச் சென்று கொண்டு இருக்கிறது. இது உலக பொருளாதாரம் பலவீனமாக இருப்பதையும், குறிப்பாக இந்திய ரூபாய் மதிப்பு குறைவதையும் அப்பட்டமாகக் காட்டுகிறது. எனவே இந்திய பங்குச் சந்தைகள் சரிந்து கொண்டு இருக்கிறது.
நிதிப் புழக்கம்
பொதுவாக ஒரு பொருளாதாரம் வளர வேண்டும் என்றால், அந்த நாட்டில் நிதிப் புழக்கம் இருக்க வேண்டும். ஏற்கனவே இந்தியாவில் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கொடுத்த கடன்கள் திரும்ப வராமல் திவால் ஆகிவிட்டன. இதனால் பல கோடி ரூபாய் நஷ்டமானது. எனவே வங்கிகள் புதிதாக கடன் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த பிரச்சனைகளை ஒருவழியாக சரி செய்வதற்குள் கொரோனா வைரஸ் வந்துவிட்டது.
வர்த்தகம் பாதிப்பு
இப்போது ஒரு வியாபாரி தன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்யவோ அல்லது புதிய வியாபாரத்தை தொடங்கவோ தயாராக இருந்தால் கூட, வேலைக்கு ஆட்கள் எடுப்பது தொடங்கி, வங்கிக் கடன் வாங்குவது வரை கொரோனாவால் சிரமமாகி இருக்கிறது. எனவே நிதி புழக்கம் இருக்காது. நிதி புழக்கம் இல்லை என்றால் பொருளாதாரமும், பங்குச் சந்தைகளும் அடி வாங்கத் தானே செய்யும்.
உலக சந்தைகள்
நேற்று மார்ச் 18, 2020 அன்று அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ், அதிபர் ட்ரம்ப் காலத்தில் கண்ட ஏற்றத்தை எல்லாம் இழந்துவிட்டதாம். அமெரிக்க பங்குச் சந்தைகளைப் போலவே ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் சுமார் 4.00 - 5.94 சதவிகிதம் சரிந்து இருக்கிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் இறக்கம் காண்கிறது என்றால், இந்திய சந்தைகளும் சரியத் தானே செய்யும்.
வெளியேறும் முதலீடுகள்
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் வந்து முதலீடுச் செய்த பணம் எல்லாம் மீண்டும் வெளிநாடுகளுக்கே பறந்து கொண்டு இருக்கின்றன. இயற்கையாகவே வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறினால் சென்செக்ஸ் சரியத் தானே செய்யும். அது தான் தற்போது சர்வதேச சந்தைகளில் நடந்து கொண்டு இருக்கிறது.