குருகிராம், ஹரியானா: வழக்கமாக, நடுத்தர மக்கள், ஏழைகள், அதிகம் படிக்கத் தெரியாதவர்கள் போன்றவர்களைத் தான் ஆன்லைன் திருடர்கள் குறி வைத்து பணத்தைத் திருடுவார்கள். ஆனால் இப்போது டிரெண்ட் மாறிவிட்டது போல. சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் ஒரு ஐஏஎஸ் அதிகாரியிடமே, நைஸாக பேசி, அவர் வங்கிக் கணக்கு விவரங்கள், க்ரெடிட் கார்ட் விவரங்களைக் கேட்டு வாங்கி சுமார் 95,000 ரூபாயை திருடி விட்டார்கள்.
அதே போல இப்போது இந்தியாவின் பெரிய முன்னணி மால்களில் ஒன்றான ஆம்பியன்ஸ் மாலின் பொது மேலாளர் (General Manager) அர்விந்த் கபூரைக் குறி வைத்து சுமார் 1.85 லட்சம் ரூபாயை திருடி இருக்கிறார்கள் ஆன்லைன் திருடர்கள்.

சில தினங்களுக்கு முன், பேடிஎம் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகச் சொல்லி, ஒருவர் அர்விந்த் கபூரிடம் பேசி இருக்கிறார். அர்விந்த் கபூரின் பேடிஎம் கணக்கில் கே வொய் சி முழுமையாக நிரப்பப்படவில்லை. அப்படி முழுமை செய்யவில்லை என்றால், விரைவில் பேடிஎம் கணக்கு முடக்கப்படும் எனப் பேசி இருக்கிறார்.
அரவிந்த் கபூருக்கு எந்த ஒரு சந்தேகமும் வரவில்லை. போனில் பேசியவர் கேட்ட படி எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்து விடுகிறார். அதன் பின் தன் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கிக் கணக்கு, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பேங்கின் க்ரெடிட் கார்ட், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கியின் க்ரெடிட் கார்ட் போன்றவைகள் மூலம் முறையே ரூ. 01, ரூ. 10, ரூ. 01 பணப் பரிமாற்றம் செய்து இருக்கிறார்.
திடீரென 3 ஓடிபிக்கள் வந்திருக்கிறது. அதன் பின் பார்த்தால் சுமார் 1.85 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக எஸ் எம் எஸ் வந்திருக்கிறது. அப்போது தான் பேடிஎம் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகச் சொல்லி தன் விவரங்களை, தன்னிடம் இருந்தே திருடி, 1.85 லட்சம் ரூபாயைத் திருடி இருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொண்டார்.
அதன் பின் வழக்கம் போல காவல் துறை புகார். விசாரித்துப் பார்த்ததில் ஆள் அகப்படவில்லை. ஐபி அட்ரஸை கண்டு பிடிக்க அனைத்து வேலைகளும் நடந்து வருவதாகச் சொல்லி இருக்கிறது குருகிராம் காவல் துறை.


Click it and Unblock the Notifications