சென்னை: தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை சரியாகப் பெய்யாததால் இந்த ஆண்டு நீர் மின் உற்பத்தி பெருமளவு குறைந்துவிட்டது. இதனால் மின் தடை மேலும் கடுமையாகியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு சரிவர பெய்யாததால் நீர் தேக்கங்களில் நீர்வரத்து குறைந்துள்ளது. குறிப்பாக சென்ற ஆண்டு ஜுன் மற்றும் ஜுலை மாதத்தில் உற்பத்தி செய்த மின் உற்பத்தியை விட இந்த ஆண்டு ஜுன் மற்றும் ஜுலை மாதத்தில் மின் உற்பத்தி குறைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக ஜுன் மாதத்தில் சராசரியாக பெறப்பட்டு வந்த மின் உற்பத்தியை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு ஜுன் மாதத்தில் மின் உற்பத்தி குறைவாக பெறப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கான காவிரி நீர் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் தற்போது மேட்டுர் அணையின் நீர் மட்டம் 76.03 அடியாக உள்ளது.
இருந்தாலும் குறுவைப் பயிர்களை காக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சரின் ஆணைப்படி கடந்த மாதம் 17ம் தேதியிலிருந்து காவிரி டெல்டா பகுதிகளுக்கு தினசரி 12 மணி நேர மும்முனை மின்சாரம் முழு அளவில் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர மற்ற விவசாயப் பகுதிகளுக்கும் இயன்ற அளவு அதிகபட்ச மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த மே மாதம் அமலில் இருந்த மின்கட்டுப்பாட்டு முறைகளில் சில தளர்த்தப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டின் மின்தேவை அதிகரித்துள்ளது. தென்மேற்குப் பருவ மழை பொய்த்ததின் காரணமாக புனல் மின் உற்பத்தி குறைந்துள்ளது.
இருந்தாலும் அனல் மின் நிலையம் மற்றும் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி அளவு அதிகரித்து இருந்ததால் மின் தேவையை இயன்ற அளவு பூர்த்தி செய்யப்படுகிறது. இருப்பினும் கடந்த வாரத்தில் காற்றாலையின் நிலையற்ற தன்மையின் காரணமாக அதன்மூலம் கிடைக்கும் மின் உற்பத்தியின் அளவு 3200 மெகாவாட்டிலிருந்து 1200 மெகாவாட்டாக குறைந்துள்ளது.
பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக மின் தேவையின் அளவு சற்று குறைந்தது. இருந்தாலும் இன்று காற்றாலை மின் உற்பத்தியின் அளவு 350 மெகாவாட்டாக மிகவும் குறைந்ததால் நகரப்பகுதி மற்றும் கிராமப்பு பகுதிகளில் கூடுதல் மின்தடை செய்யப்பட்டது.
காற்றாலை மின் உற்பத்தி அளவில் ஏற்படும் அதிகபட்ச வித்தியாசத்தை சமாளிப்பதுடன், மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் அடிக்கடி ஏற்படும் பழுதுகளால் தமிழகத்தின் மின் உற்பத்தி இழப்பு 500 மெகாவாட் ஆக உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கூடவே கடைசி வரியாக ''வேகமாக நடைபெற்று வரும் மத்திய, மாநில அரசுகளின் புதிய மின் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்ததும் தமிழகத்தின் மின் நிலைமை சீரடையும்'' என்ற வழக்கமான சப்பை கட்டும் செய்துள்ளது தமிழக அரசு.