டெல்லி: நாட்டில் பருவ மழை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பம்பு செட்களை இயக்கி விவசாய பணிகளில் ஈடுபட, மானிய விலையில் டீசல் வழங்கப்படும் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல மாநிலங்களில் பருவ மழை குறைவு காரணமாக, கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாகுபடி நிலப்பரப்பு குறைந்துள்ளது. இதையடுத்து மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம், விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார் தலைமையில் டெல்லியில் கூடி ஆலோசித்தது.
இந்த கூட்டத்தில் நாட்டில் நிலவி வரும் வறட்சி மற்றும் அதை நீக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார் கூறியதாவது,
இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் 50 சதவீதம் பருவ மழை குறைவாக பெய்துள்ளது. எனவே விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு நீர்ப்பாசனம் அளிக்கும் பம்பு செட்களுக்கான டீசல் மானிய விலைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான செலவை மாநில மற்றும் மத்திய அரசுகள் சமமாக பகிர்ந்து கொள்ளும். மானிய விலை டீசல் வழங்கும் திட்டம் இந்த பருவம் முழுவதும் தொடரும் என்றார்.
மேலும் அந்த கூட்டத்தில், ஒருங்கிணைந்த தண்ணீர் மேட்டுப்பரப்பு நிர்வாக திட்டத்தின் கீழ் கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,440 கோடி நிதி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கிராமப்புற குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் மராட்டியம், கர்நாடகம், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு ரூ.453 கோடி நிதியுதவி வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கர்நாடகம், ராஜஸ்தான், மாநிலங்களுக்கு ரூ.38 கோடி விடுவிக்கப்படுகிறது.
நாட்டில் உள்ள 320 மாவட்டங்களில் மழை பொழிவு குறைவாக உள்ளது. இதனால் கடந்த 2009ம் ஆண்டை விட போல சர்க்கரை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என்று தெரிகிறது. மழை குறைவில் பருப்பு வகைகள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே நாட்டில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் சரத் பவார் பார்வையிட உள்ளார். அதன்பிறகு சரத்பவார் தலைமையில் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.


Click it and Unblock the Notifications