மதுரை: கிரானைட் குவாரிகளில் விதிமுறைகளை மீறியவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்ககப்படும் என்று கலெக்டர் அன்சுல் மிஸ்ரா கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர், மதுரை மாவட்டத்தில் 175 கிரானைட் மற்றும் கனிம வள குவாரிகள் உள்ளன. இவற்றில் கடந்த ஒரு வாரமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு ஆய்வு செய்யப்பட்டதில் 40 கிரானைட் குவாரிகள் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவைகளில் 12 குவாரிகள் அதிகபட்ச விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலூரில் 400 ஏக்கர் பரப்பளவுக்கு கண்மாய்கள், கால்வாய்களில் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது.
கிரானைட் குவாரிகள் அரசு புறம்போக்கு நிலங்கள், கண்மாய்கள், வண்டிப்பாதை ஆகியவற்றை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது தெரிய வந்தது.
நானும் கிரானைட் குவாரிகளில் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறேன். விதிமுறைகளை மீறிய கிரானைட் குவாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று நானும், எஸ்.பி பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் மேலூர் தெற்குதெருவில் உள்ள பி.ஆர்.பி. கிரானைட் தொழிற்சாலையில் ஆய்வு நடத்தினோம். அப்போது அங்கு பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள அலுவலகத்தை பூட்டி சீல் வைத்துள்ளோம்.
அங்குள்ள ஆவணங்களை, பல்வேறு துறைசார்ந்த அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். உதாரணமாக சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு வாரியத்தை சேர்ந்த அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வுக்கு பின்னரே விதிமுறை மீறல்கள் குறித்து தெரியவரும்.
மேலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள ஒவ்வொரு கிரானைட் குவாரிகளிலும் தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அங்கு விதிமுறைகள் மீறப்பட்டு எந்த அளவிற்கு கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது, இதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு குறித்தும் முழுமையாக ஆய்வு செய்து வருகிறோம்.
இந்த ஆய்வுகள் இன்னும் ஒருவார காலத்துக்கு நடைபெறும். இதையடுத்து அரசுக்கு இது குறித்து அறிக்கை அனுப்பப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில், இந்த நிறுவனங்களின் மீதான நடவடிக்கை குறித்து அரசு முடிவு செய்யும்.
கிரானைட் குவாரிகளில் அரசு அனுமதி கொடுத்தது குறித்தும், அதையும் மீறி முறைகேடுகளில் ஈடுபட்டு எந்த எந்த குவாரிகள் அதிக அளவில் கிரானைட் வெட்டி எடுத்துள்ளன என்பது குறித்து ஆய்வு நடத்த கனிம வளத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பிஆர்பி உள்பட முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் குறித்து உறுதி செய்யப்பட்டவுடன், அவற்றுக்கான லைசன்ஸ்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அன்சுல் மிஸ்ரா.