டெல்லி: யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தி வரும் Vedic broadcasting தொலைக்காட்சி நிறுவனம் பல்வேறு அன்னிய செலாவணி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் வரவு-செலவுகள் குறித்து அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளது.
பதஞ்சலி ஆசிரமம் நடத்தி வரும் ராம்தேவ் யோகா பயிற்சி தவிர ஆயுர்வேத மூலிகை மருந்து தயாரிப்பு கூடங்களையும் விற்பனை மையங்களையும் நடத்தி வருகிறார். உலகம் முழுவதும் உள்ள இந்த யோகா மையங்கள், மருந்து விற்பனை மையங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடந்து வருகிறது.
கையில் ஏகப்பட்ட பணம் புரண்டு வருவதால் தனி விமானங்களை சொந்தமாக வாங்கி வைத்துக் கொண்டு தடபுடலாக சுற்றி வருகிறார் ராம்தேவ்.
கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்ற திடீர் கோஷத்தோடு களத்தில் குதித்த ராம்தேவ், முதலில் அன்னா ஹசாரே அண்ட் கோவுடன் கைகோர்த்தார். அவர்கள் குழுவையே கலைத்துவிட்டு இடத்தைக் காலி செய்ததையடுத்து தனியே போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார் ராம்தேவ்.
இந் நிலையில் ராம்தேவின் ஆசிரம விதி மீறல்கள் குறித்து சிபிஐயும் அமலாக்க பிரிவும் விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளன.
ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணா பாஸ்போர்ட் பெற போலி ஆவணம் கொடுத்த விவகாரத்தில் அவரை சிபிஐ கைது செய்தது. அடுத்து ராம்தேவின் பதஞ்சலி ஆசிரமத்துக்கு வெளிநாட்டில் இருந்து ரூ.80 லட்சம் பணம் வந்தது பற்றி அமலாக்க பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
ரூ.80 லட்சம் பணம் பெற்றதில் அன்னிய செலவாணி விதிமீறல் நடந்திருப்பதாக ராம்தேவுக்கு அமலாக்க பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கிடையே பாபா ராம்தேவ் நடத்தும் டெலிவிஷனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆயுர்வேதிக் மருத்துவம் மற்றும் மருந்துகள் பற்றி விளம்பரப்படுத்த ராம்தேவ் தனியாக ஒரு டெலிவிஷன் சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனல் தொடங்கவும் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறப்பட்டுள்ளது. அதிலும் அன்னிய செலவாணி விதிமீறல் நடந்திருப்பதாக அமலாக்கப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து இது தொடர்பான விசாரணையும் ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் அமலாக்க பிரிவு விவர அறிக்கை கேட்டுள்ளது. அறிக்கை கிடைத்ததும் அதன் அடிப்படையில் ராம்தேவ் டெலிவிஷனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications