ஈரோடு: ஈரோட்டியில் கோழிப்பண்ணையில் முதலீடு செய்தால் 10 சதவீதம் ஊக்கத்தொகை வழங்குவதாக தெரிவித்து மோசடி செய்ததாக பெண் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார்கள், மோட்டர் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த திருவேங்கிடம்பாளையத்தை சேர்ந்தவர் முருகவேல். இவர் ஈரோடு பேருந்து நிலையத்தின் அருகே ஸ்ரீநித்யா என்ற பெயரில் அலுவலகம் அமைத்து வில்லரசம்பட்டி, காலிங்கராயன்பாளையம் போன்ற பகுதிகளில் கோழிப்பண்ணைகள் நடத்தி வந்தார்.
இவரது நாட்டுக்கோழி பண்ணையில் முதலீடு செய்பவர்களுக்கு 10 சதவீதம் ஊக்கத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார். இதை நம்பிய ஏராளமான முதலீட்டாளர்கள், ஸ்ரீநித்யா நாட்டுக்கோழி பண்ணையில் முதலீடு செய்துள்ளனர்.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முதலீட்டாளர்களுக்கு குறிப்பிட்ட ஊக்கத்தொகை வழங்காமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. மேலும் கோழிக்குஞ்சுகள் வழங்காமலும் இருந்துள்ளார். இது குறித்து பவானி கேசரிமங்கலத்தை சேர்ந்த குமார் என்பவர் போலீசாரிடம் புகார் அளித்தார்.
மேலும் ஸ்ரீநித்யா ஈமு மற்றும் நாட்டுக்கோழி பண்ணை மீது 200க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட பண்ணை உரிமையாளர் முருகேவல், இவரது மனைவி லதா, மகன் குணா மற்றும் நிர்வாகிகள் ராசு, சுரேஷ், கணேசன், மணிவண்ணன், பாலாஜி, பிரபாகர், ரமேஷ் உட்பட 10 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 7 கார்கள், 4 மோட்டார் சைக்கிள்கள், ரூ.1 லட்சம் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள கார்த்தி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications