2008-11ம் ஆண்டு காலத்தில் சஹாரா தனது Sahara India Real Estate Corporation, Sahara Housing Investment Corporation ஆகிய துணை நிறுவனங்கள் மூலம் ரூ. 17,400 கோடியை 2.3 கோடி முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டியது.
ஆனால், இந்த இரு துணை நிறுவனங்களும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாதவை ஆகும். இதையடுத்து இந்த மொத்த பணத் திரட்டலும் சட்ட விரோதமானது என்று அறிவித்த செபி அமைப்பு (Securities and Exchange Board of India) பணம் வசூலிப்பதை நிறுத்துமாறு உத்தரவிட்டது.
ஆனால், இதை ஏற்க மறுத்த சஹாரா நிறுவனம் பங்குகள் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை நாடியது. இதை விசாரித்த தீர்ப்பாயம் வசூலித்த முழுப் பணத்தையும் 6 வாரங்களுக்குள் முதலீட்டாளர்களிடமே திருப்பித் தருமாறு உத்தரவிட்டது.
ஆனால், இதையும் ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றத்தை சஹாரா அணுகியது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பாயத்தின் உத்தரவு சரியே என்று தீர்ப்பளித்ததோடு பணத்தை உடனே 15 சதவீத வட்டியோடு திருப்பித் தரவும் இன்று உத்தரவிட்டது. பணம் திருப்பித் தரப்படுவதை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பிஎன் அகர்வால் கண்காணிப்பார் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இதில் 2.3 கோடி முதலீட்டாளர்களும் உண்மையானவர்களா அல்லது சஹாராவே போலியாக முதலீட்டாளர்கள் என்ற பெயரில் தனது கருப்புப் பணத்தையே வெள்ளையாக்க முதலீடு செய்ததா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதனால் சரியான முகவரி, விவரம் இல்லாத முதலீட்டாளர்கள் பெயரில் இந்த இரு நிறுவனங்களுக்கும் வந்த தொகை அரசின் கஜானாவில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
இதனால் முதலீட்டாளர்கள் குறித்த முழு விவரத்தையும் செபி அமைப்பிடம் சஹாரா நிறுவனம் தர வேண்டும் என்றும், அதைத் தராவிட்டால் சஹாராவின் சொத்துக்களை செபி நிறுவனம் கைப்பற்றி, ஏலம் விடலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தத் தீர்ப்பு சஹாரா நிறுவனத்துக்கு பேரிடியாக அமைந்துள்ளது.