மதுரை: மேலூர் கிரானைட் முறைகேடு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தயாரிக்கும் பணி முடிந்துள்ளது. இதையடுத்து அவற்றை விரைவில் மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம் மேலூரில் 94 கிரானைட் குவாரிகளில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதில் அரசுக்கு ரூ.16,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அங்குள்ள கிரானைட் குவாரிகளில் கடந்த 3 மாதங்களாக சோதனை நடந்தது. சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு கண்மாய்கள், புறம்போக்கு நிலங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிரானைட் கற்களை அதிகாரிகள் கைப்பற்றி மதிப்பீடு செய்தனர்.
பல்வேறு இடங்களில் நடத்திய சோதனைகளில் ரூ.8,000 கோடி மதிப்புள்ள 1.70 லட்சம் கிரானைட்கள் யூனிட்கள் கண்டெடுக்கப்பட்டது. மேலும் அரசு புறம்போக்கு நிலங்கள், கண்மாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து மேலூர், ஒத்தக்கடை, கீழவளவு காவல் நிலையங்களில் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பி.ஆர். பழனிச்சாமி மீது மட்டும் 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர் பாளையங்கோட்டை சிறையில் உள்ளார். ஆனால் கிரானைட் முறைகேடு வழக்குகளில் தொடர்புடைய பி.ஆர்.பியின் மகன்கள் சுரேஷ் குமார், செந்தில்குமார், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி உள்பட 35 கிரானைட் அதிபர்கள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.
இதற்கிடையே முறைகேடுகளில் ஈடுபட்ட கிரானைட் அதிபர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அவர்களின் சொத்துகளும் கணக்கிடப்பட்டுள்ளது. இது குறித்த இறுதி அறிக்கையை அரசுக்கு விரைவில் அனுப்ப மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா திட்டமிட்டுள்ளார். அதன் பிறகு அரசிடம் அனுமதி பெற்று முறைகேட்டில் ஈடுபட்ட கிரானைட் நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி வரை அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கிரானைட் அதிபர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அதிலும் 5 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தயார் செய்யும் பணி முடிந்துவிட்டது. அவற்றை விரைவில் மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தலைமறைவாக உள்ள துரை தயாநிதி பங்குதாரராக இருந்த ஒலிம்பஸ் குவாரி மற்றும் சிந்து குவாரி ஆகியவற்றில் நேற்று திடீர் என்று நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒலிம்பஸ் குவாரியை அளந்தபோது அதிக அளவில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.