2012 மார்ச் நிலவரப்படி, பொது துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.68,262 கோடிக்கும் அதிகமான அளவில் உள்ளதாக மத்திய அரசு நிதித்துறை அறிவித்துள்ளது.
நிறுவனங்களுக்கும், தனிநபர்களுக்குமாக மொத்தம் 7,295 பேருக்கு 27 பொது துறை வங்கிகள் வழங்கியிருந்த மொத்த கடனில் ரூ.68,262 கோடி வசூலாகாத கடனாக மாறியுள்ளது. இவர்கள் ஒவ்வொருவரும் ரூ.1 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் பெற்றவர்கள் என்பதுதான் வேதனை.
அதிகரிக்கும் வாராக் கடன்
பொது துறை வங்கிகளின் வாராக்கடன் 2010 மார்ச் நிலவரப்படி ரூ.26,629 கோடியாக இருந்தது. இதுவே 2011 மார்ச் நிலவரப்படி ரூ.34,633 கோடியாக உயர்ந்தது. அதுவே 2012ம் ஆண்டு 68 ஆயிரம் கோடியாக அதாவது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
பணக்காரர்கள் கடன் வாங்கினால்...
சாதாரணமாக கல்விக்கடனோ, விவசாய கடனோ, தொழில் தொடங்க கடனோ கேட்டு வங்கிகளுக்குப் போனால் ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டு கடைசியில் கடைசியில் லோன் இல்லை என்று கையை விரித்து விடுவார்கள். ஆனால் எந்த கேள்வியும் கேட்காமல் கோடிக்கணக்கில் கோடீஸ்வரர்களுக்கு கடன் மேல் கடன் கொடுக்க ரெடியாக இருக்கின்றன பொதுத்துறை வங்கிகள்.
பாரத ஸ்டேட் வங்கி
இப்படி கடனை வாரி வழங்கி வள்ளலாக உயர்ந்த பாரத் ஸ்டேட் வங்கி இதுவரை 2,419 பணக்காரர்களுக்கு கடன் வழங்கியுள்ளது. இதில் அவர்கள் ஆட்டையைப் போட்ட தொகை அதிகமில்லை ஜென்டில்மேன் ரூ.23,320 கோடி.
2 வதாக பஞ்சாப் நேஷனல் வங்கி
இரண்டாவது மிகப் பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்க் 709 கடனாளிகளுக்கு ரூ.5,295 கோடி பணத்தை கடனாக கொடுத்துவிட்டு வராக்கடன் என கணக்கெழுதிவிட்டு விழித்துக்கொண்டு நிற்கிறது.
222 கடனாளிகள் ரூ. 4,349 கோடி
இந்த வங்கிகளைத் தவிர சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 222 கடனாளிகளுக்குக் கொடுத்த ரூ.4,349 கோடி வராக்கடன் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது.
ஐ.டீ.பி.ஐ வங்கிக்கும் நாமம்
இதேபோல் பேங்க் ஆஃப் இந்தியா 507 கடனாளிகளுக்கு ரூ.4,268 கோடி கடனாக கொடுத்து வசூலிக்க முடியவில்லை. ஐ.டீ.பீ.ஐ.யில் ரூ.3,682 கோடி கடன் பெற்ற 579 பேர் பட்டை நாமத்தை சாத்திவிட்டனர் என்பதுதான் வேதனை.
சரியாக கட்டுபவர்கள் ஏழைகள்
வங்கிகளில் கடனை வாங்கிவிட்டு அதை சரியாக கட்டுபவர்கள் ஏழைகளும், தொழிலாளர்களும்தான் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஒருமுறை கூறியுள்ளார். அவர் சொன்னது சரிதான். கடனை கட்டாத ஏழைகள், நடுத்தர மக்களின் சொத்துக்களைத்தானே கந்து வட்டிக்காரர்களைப் போல பிடுங்க முடியும்... மல்லையாக்கள், அம்பானிகள் பெற்ற கடன்கள் எல்லாம் வாராக் கடன் வரிசையில் சேர்க்கவேண்டியதுதான்.