சென்னை: கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.85 என்ற அளவுக்குக் குறைந்து ஒரு மோசமான நிலையை அடைந்தது நினைவிருக்கலாம். தற்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 60.1 ரூபாய் என்ப அளவில் உள்ளது.
மேலும் ரூபாயின் மதிப்பு 57ஐத் தொட்டால் அது ஒரு நல்ல அறிகுறியாகவே இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பை அளவிடுவதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. பல்வேறு சந்தைப் பொருட்களின் மார்க்கெட் நிலவரம், அவை எந்த அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகின்றன மற்றும் அவற்றுக்கு ஏற்படும் தட்டுப்பாடு ஆகியவற்றைப் பொருத்து டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.
இதுபோல பல்வேறு சில மார்க்கெட் காரணிகளும் டாலர்-ரூபாய் மதிப்புகளை நிர்ணயிக்க உதவுகின்றன. இவை பற்றி முழுமையாக பார்போம்.
உலகப் பொருளாதாரம்
உலகச் சந்தையில் தடுமாற்றம் ஏற்படும் போதெல்லாம், முதலீட்டாளர்கள் தங்கள் சேமிப்புகள் அனைத்தையும் அமெரிக்க கருவூலங்கள், தங்கம் உள்ளிட்ட சில பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி விடுகிறார்கள். இதையடுத்து, அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிக்கும் போது, இந்திய ரூபாயின் மதிப்பு தானாகவே குறைந்து விடுகிறது.
வரி, கடன்...
அரசுக்குக் கடுமையான வரிச் சுமையும்ஸ நிதித் தட்டுப்பாடும் ஏற்படும் போது, வெளியிலிருந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை அரசுக்கு ஏற்படுகிறது. இதன் காரணமாகவும் டாலருக்கும் ரூபாய்க்கும் இடையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன.
ஏற்றுமதி-இறக்குமதி
நம் நாட்டில் ஏற்றுமதியின் அளவு குறையும் போதும், அளவுக்கு அதிகமாக இறக்குமதி செய்யப்படும் போதும் டாலரின் மதிப்பு கிடுகிடுவென அதிகரிக்கும். இதனால் ரூபாயின் மதிப்பு இறங்கும்.
அந்நிய செலவாணி
Foreign exchange (ForEx) எனப்படும் அந்நிய செலவாணி வர்த்தகங்களும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அரசுப் பத்திரங்கள், வட்டி...
ஒருவேளை, அரசுப் பத்திரங்களுக்கு அதிக வட்டிகளை அளிக்க நம்மூர் நிதி நிறுவனங்கள் முன் வந்தால், டாலர்கள் வடிவில் ஏராளமான அந்நிய முதலீடுகள் இந்தியாவில் வந்து கொட்டுவதற்கு வாய்ப்புள்ளது. இது மட்டும் நடந்தால், இந்திய ரூபாயின் மதிப்பு கிண்ணென்று ஏறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
ரிசர்வ் வங்கியின் பங்கு
ரூபாயின் மதிப்பு சறுக்கி விடாமல் பாதுகாப்பதில் இந்திய ரிசர்வ் வங்கியின் பங்கு மிகவும் முக்கியமானது. டாலர்களை வாங்கும் போதும் சரி, விற்கும் போதும் சரி, ரூபாயின் மதிப்பைத் தள்ளாட விடாமல் ரிசர்வ் வங்கி பார்த்துக் கொள்ள வேண்டும். முடிந்தால், ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
வர்த்தகம்
கடந்த வார இறுதியில் வர்த்தகம் முடியும் தருவாயில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சுமார் 59.31ஆகச் சரிந்தது. வங்கிகளிலும் இறக்குமதியாளர்களிடத்திலும் டாலரின் இருப்பு குறைவாக இருந்ததுதான் இந்தச் சரிவுக்குக் காரணமாகக் கூறப்பட்டது.
கச்சா எண்ணெய்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து, அதனால் டாலரின் மதிப்பு உயரும் போதும் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ஏற்படும். உலகச் சந்தையில் டாலருக்கான கிராக்கி அதிகரிக்கும் போது, ரூபாயின் மதிப்பு சரசரவென்று குறையும். இதனால் ரூபாயைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கும் சக்தியும் குறையும்.