திருப்பூர்: பருத்தி விலை சீராகியுள்ளதால் தமிழகத்தில் நுாலிழை விற்பனை அதிகரித்துள்ளதோடு அதன் விலையும் நிலையான தன்மைக்கு வந்துள்ளது.
தமிழக பஞ்சாலைகளுக்கு குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் இருந்து அதிகளவில் பருத்தி வர துவங்கி உள்ளது. பருத்தி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய முடிவு செய்துள்ளது.

இந்திய பருத்தி கழகம் மூலம் பருத்தி வாங்குவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வரத்து அதிகரிப்பால் உள்நாட்டில் ஒரு கேண்டி பருத்தி விலை 33 ஆயிரத்து 500 ரூபாய் என்ற அளவில் சீராகியுள்ளது.
இந்நிலையில் ஆடைகள் ஏற்றுமதி வர்த்தகம் சிறப்பாக உள்ளதால் உள்நாட்டில் நுாலிழைக்கான தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து மூன்று மாதங்களாக நுாற்பாலைகளில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நுாலிழை முழுவதும் விற்று தீர்ந்துள்ளது.
இதுகுறித்து கோவை டெக்ஸ்பிரனர்ஸ் அமைப்பு செயலர் பிரபு தாமோதரன், "பெரும்பாலான நுாற்பாலைகள் தங்களது உற்பத்தியில் 50 சதவீதத்தை வரும் ஜனவரி வரை ஏற்றுமதிக்கு முன்பதிவு செய்துள்ளன.
இதனால் நுாலிழை விற்பனை சீராகியுள்ளது.பருத்தி விலை குறைவு நுாலிழைக்கான தேவை உயர்வு மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பு போன்றவற்றால் வரும் மாதங்களில் நுாற்பாலைகள் சீரான வர்த்தக சூழலை எதிர்கொள்ளும்" என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications