டெல்லி: இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் இண்டர்நெட் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 30.2 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எண்ணிக்கையைத் தொடும்போது, இந்தியா அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருக்கும் என ஒரு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய இணையதள மற்றும் மொபைல் கூட்டமைப்பு மற்றும் ஐ.எம்.ஆர்.பி. இண்டர்நேஷனல் ஆகிய அமைப்புகள் கூட்டாக நடத்தி வரும் கணக்கெடுப்புகள் இதைத் தெரிவித்துள்ளன.
தமிழ் குட்ரிட்டன்ஸ் பேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்!!
அமெரிக்காவில் 27.9 கோடி
தற்போதைய நிலவரப்படி, வல்லரசு நாடான அமெரிக்காவில் 27.9 கோடி பேர் இணையதளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இது உலக அளவில் இரண்டாவது இடமாகும்.
சீனாவுக்கு முதலிடம்
இணையதளத்தை உபயோகிப்பதில் சீனாதான் முதலிடத்தில் உள்ளது. அங்கு தற்போது சுமார் 60 கோடி பேர் இண்டர்நெட்டில் உலாவுகின்றனர்.
21.3 டூ 30.2 கோடி
கடந்த 2013 இறுதிக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 21.3 கோடி பேர் இணையதளத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். இது 32% அதிகரித்து, இவ்வாண்டு இறுதியில் 30.2 கோடியாகும் எனத் தெரிகிறது.
2015ல் 35.4 கோடி
இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 35.4 கோடியைத் தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா
இதையடுத்து, அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, இந்தியா இரண்டாவது இடத்துக்கு முன்னேறி விடும்.
பிரம்மாண்ட வளர்ச்சி
இந்தியாவில் இணையத் தளத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஒரு கோடியிலிருந்து 10 கோடியைத் தொட 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆனது. ஆனால் அடுத்த மூன்றாண்டுகளுக்குள்ளாகவே அது 20 கோடியைத் தொட்டுவிட்டது.
ஒரே ஆண்டில் 10 கோடி
இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்து அடுத்த ஓராண்டிலேயே சுமார் 30 கோடியைத் தொடவுள்ளது.
நகர்ப்புற வளர்ச்சி
தற்போது 17.7 கோடி நகர்ப்புற இந்தியர்கள் இணையதளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இது, இவ்வாண்டு இறுதிக்குள் 19 கோடியை எட்டவுள்ளது. ஜூன் 2015க்குள் இவ்வெண்ணிக்கை 21.6 கோடியாக அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
கிராமப்புற அசுர வளர்ச்சி
இந்தியாவில், கிராமப்புறங்களில் வசிப்பவர்களும் மிக அதிகமாக இணையதளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த அக்டோபரில் 10.1 கோடியாக இருந்த இந்த எண்ணிக்கை, மூன்றே மாதங்களில் 11.2 கோடியாக அதிகரிக்கவுள்ளது. ஜூன் 2015க்குள் இது 13.8 கோடியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் பேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்!!