பெங்களூரு: 2015ஆம் ஆண்டின் துவக்கத்தில், இந்தியாவில் புதிய சக்தியாக உருவெடுத்தது உணவு டெலிவரி ஸ்டார்ட்-அப் (Food Startup) நிறுவனங்கள். இந்தியாவில் உருவாகியுள்ள ஸ்டார்ட்-அப் கலாச்சாரத்தின் மீதான நம்பிக்கையில் முதலீட்டாளர்களும் கண்மூடித்தனமான நிறுவனங்களில் பணத்தை வாரி இறைத்தனர்.
ஆனால் தற்போது இதன் நிலை முழுமையாக மாறி வருகிறது. குறிப்பாகச் சோமேட்டோ மற்றும் டைனிஅவூல் ஆகியவற்றில் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.
சமீபத்தில் ஐஐடி கல்லூரி கேம்பஸ் இண்டர்வியூவில் பங்கேற்ற சோமேட்டோ நிறுவனத்திற்குத் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டைனிஅவூல் தான் ஆரம்பப் புள்ளி..
கடந்த 2014ஆம் ஆண்டு 5 ஐஐடி கல்லூரி மாணவர்களால் துவங்கப்பட்டது டைனிஅவூல் நிறுவனம். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், மொபைல் ஆப் மூலம் அருகில் உள்ள உணவு விடுதிகளில் இருந்து உணவுப் பொருட்களை டோர் டெலிவரி செய்யும் சேவையை அளித்து வந்தது.
இந்நிறுவன சேவையை இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் துவங்கியது. சமீபத்தில் பெங்களூரில் தனது 2வது சேவையான அருகில் உள்ள சமையல் நிபுணர்களைக் கொண்டு உணவு சமைக்கும் சேவை அறிமுகம் செய்தது. இந்நிறுவனம் துவங்கி சில மாதங்களில், இதே போன்று பல நிறுவனங்கள் இந்தியாவில் உருவானது.
என்ன ஆச்சு..?
கடந்த செப்டம்பர் மாதத்தில் டைனிஅவூல் நிறுவனத்தின் நிதிநிலையைச் சரிசெய்யவும், மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் விதமாக இந்நிறுவனத்தில் இருந்து 200 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதனால் கோபம் அடைந்த ஊழியர்கள் இந்நிறுவனத்தின் துணை நிறுவனரான கவ்ரவ் சவுத்ரி மற்றும் 4 நிறுவனர்களைச் சென்னை, புனே, டெல்லி, ஹைதராபாத் அலுவல்களில் பிணையாக வைத்திருந்தனர்.
சோமேட்டோ..
டைனிஅவூல் நிறுவனத்தைத் தொடர்ந்து இதேபோன்ற உணவு டெலிவிரி செய்யும் மற்றொரு ஸ்டார்ட்-அப் நிறுவனமான சோமேட்டோ 10 சதவீத ஊழியர்களை நிறுவனத்தை விட்டு வெளியேற்றுவதாக அறிவித்து, சுமார் 300 பணியாளர்களைப் பணி நீக்கம் செய்தனர்.
அதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் தலைவர் தீபின்தர் கோயல் விற்பனை பிரிவு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய காரசாரமான மின்னஞ்சல் பத்திரிக்கைகளில் வெளியானது.
இதனால் சந்தையில் சோமேட்டோ நிறுவனத்தின் பெயரும் (மானம்) காற்றில் பறக்க துவங்கியது.
முதலீடுகள்
இத்தகைய புதிய ஸ்டாப் அப் நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் முதலீடு செய்து வருகின்றனர். டைனி அவூல் நிறுவனத்தில் சீகோயா கேபிடல் மற்றும் மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனங்கள் இதுவரை 27 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளனர்.
திறமை குறைவு...
சந்தையில் இத்தகைய ஸ்டாப்அப் நிறுவனங்கள் குறித்துச் சந்தை வல்லுநர்கள் கூறுகையில், புதுமைகளுக்கு எப்போதும் இந்தியாவிலும் உலக நாடுகளிலும் வரவேற்பு உண்டு ஆனால் அதன் வீரியத்தைக் கணக்கிட்டால் சில நிறுவனங்கள் மட்டுமே நிலையான உயர்வை எட்டுகிறது.
குறிப்பாக டைனிஅவூல் நிறுவன தலைவர்களுக்கு, முதலீடு அதிகளவில் கிடைத்தாலும், ஊழியர்கள் மற்றும் நிறுவன பிரச்சனைகளைக் கையாளுவதில் போதிய திறன் இல்லை. இதன் காரணமாகத் தான் நிறுவன தலைவர்கள் ஊழியர்கள் மூலமாகவே சுமார் 36 மணிநேரம் பிணையாக வைக்கப்பட்டனர்.
உணவு ஸ்டார்ட்-அப்
இந்த இரண்டு நிறுவனங்களின் மூலம் இத்துறையில் இருக்கும் பிற நிறுவனங்களும் பாதிப்பு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்றால்..? இனி இத்துறையில் இருக்கும் நிறுவனங்களுக்குப் புதிய முதலீடு கிடைக்காது, புதிய நிறுவனங்கள் துவங்குவதில் ஊக்குவிப்பு கிடைக்காது. மேலும் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைக் குறைத்தும் கொள்ள வாய்ப்புகள் உண்டு.
மக்கள் மனநிலை
மேலும் இன்றளவில் மக்கள் புதிய முயற்சிகளை அதிகளவில் ஆதரித்தாலும், அதனைத் தொடர்ந்து செய்வதில்லை. இதன் காரணமாகவே தான் சோமேட்டோ மற்றும் டைனிஅவூல் நிறுவனங்களின் வர்த்தகம் குறைந்து மறுசீரமைப்பு நடவடிக்கையை அமல்படுத்தும் முடிவிற்கு வந்தது.
ஊழியர்கள்
அதுமட்டும் அல்லாமல் இத்தகையை நிறுவனங்களில் ஆரம்பக் கட்டத்தில் அதிகளவில் சம்பளங்கள் கொடுக்கப்பட்டாலும், நிலையான வேலைவாய்ப்பாக இல்லை என்பதே ஸ்டாப்அப் கலாச்சாரத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை என இத்துறை ஊழியர்கள் மற்றும் வர்த்தக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நிர்வாகம் எப்போது வேண்டுமானாலும் பணியில் இருந்து ஊழியர்களை நீக்கும் வகையில் இத்தகைய ஸ்டார்ட்-அப் நிறுவனக்கள் செயல்படுகிறது.