மும்பை: திங்கட்கிழமை வர்த்தகம் துவக்கத்தின் முதலே, ஆசிய சந்தை சரிவைச் சந்தித்த நிலையில் மும்பை பங்குச்சந்தை 300 புள்ளிகள் சரிவுடன் துவங்கி 19 மாத சரிவை எட்டி முதலீட்டாளர்களைப் பீதியில் ஆழ்த்தியது.
அதேபோல் பல மாதங்களுக்குப் பின் நிஃப்டி குறியீடு 7,500 புள்ளிகள் என்ற மிகக் குறைவான வர்த்தகத்தை எட்டியுள்ளது.
வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்திலேயே பங்குச்சந்தை அதிகளவிலான சரிவை சந்தித்து வரும் நிலையில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதுகாத்துக்கொள்ளத் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.
சீனா சந்தையின் வீழ்ச்சியில் சிக்கிக் கொண்டு ஆசிய சந்தை அதிகளவிலான வர்த்தக இழப்பைச் சந்தித்து வருகிறது. சீன தனது வர்த்தக நிலையை மேம்படுத்தவும், குறைந்தபட்சம் லாபகரமான வர்த்தகத்தை அடையவும், 239 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டத்தை வடிவமைக்கும் பணியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 335 புள்ளிகள் சரிவை சந்தித்த மும்பை பங்குச்சந்தை, 11.30 மணியளவில் 128.52 புள்ளிகள் சரிவுடன் 24,805.81 புள்ளிகளில் வர்த்தகம் செய்து வருகிறது. அதேபோல், நிஃப்டி குறியீடு 56.80 புள்ளிகள் சரிவுடன் 7,551.65 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இன்றைய வர்த்தக முடிவில் சுமார் 100 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் குறியீடு முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா மற்றும் ஆசிய சந்தையின் வீழ்ச்சி மட்டும் அல்லாமல் அமெரிக்கச் சந்தையின் குறைவான ஜாப்ஸ் டேட்டாவும் இந்திய சந்தையைக் கணிசமாகப் பாதித்துள்ளது.