பிளிப்கார்ட் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமான ஆம்பூர் ஐயப்பா, அந்த நிறுவனத்தில் இணைந்தது, அந்த நிறுவனத்தை வெற்றிப் பாதைக்குக் கொண்டு சென்றது ஆகியவற்றை முதல் பாகத்தில் பார்த்தோம்.
தற்போது அவர் தன்னை எப்படி இயந்திர மனிதனாக மாற்றிக் கொண்டார், எப்படிப் பட்ட உழைப்பை பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு இவர் அளித்தார் என்பதை இங்குப் பார்ப்போம்.
(பிளிப்கார்ட்-இன் ஜாதகத்தை கரைத்து குடித்த தமிழன்..! யார்யா இவரு..!) - பாகம் 1
கடின உழைப்பே தாரக மந்திரம்
கடின உழைப்பு. இதைத் தான் பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்களிடம் இருந்து தான் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார் ஆம்பூர் ஐயப்பன். பல சமயங்களில் காலை 8 மணிக்கே அலுவலகம் சென்றால், தனக்கு முன்பாக அங்கு நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான பின்னி அங்கு இருப்பார் என்றும் அவருடைய கடுமையான உழைப்பை வியந்து அவரைப் பின்பற்றியதாகவும் ஐயப்பன் கூறுகிறார்.
பிளிப்கார்ட் நிறுவனத்தின் வளர்ச்சிக்கான காரணம்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் வளர்ச்சியே அதன் நேரம் தவறாத டெலிவரியில் தான் ஆரம்பித்தது என்று கூறலாம். இதற்காக ஐயப்பன் கொஞ்சம் வித்தியாசமாகச் சிந்தித்தார். பொதுவாக டெலிவரி பாய்ஸ் 9 மணியில் இருந்து 10 மணிக்குள் அலுவலகம் வந்து டெலிவரி பொருட்களை எடுத்துக் கொண்டு மதியம் 1 மணிக்குள் டெலிவரி செய்து வந்தனர். இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என்று ஐயப்பன் விரும்பினார்.
டெலிவரிக்கு மாற்று வழியைக் கண்டு பிடித்த ஐயப்பன்
இந்த நடைமுறைக்கு ஒரு எளிய மாற்று வழியைக் கண்டுபிடித்தார் ஐயப்பன். வழக்கமாக டெலிவரி பையன்கள் வீட்டில் இருந்து அலுவலகத்திற்குக் காலையில் வந்து பின்னர் அன்றைய தினம் டெலிவரி செய்ய வேண்டிய டெலிவரி ஷீட் மற்றும் பொருளை எடுத்துக் கொண்டு டெலிவரி செய்ய வேண்டிய இடத்தை அணுகி டெலிவரி செய்து வந்தார்கள்.
இதனால் ஒருசில மணி நேரம் வீணாவதை ஐயப்பன் உணர்ந்தார்.
இதனால் காலையில் டெலிவரி பையன்கள் தங்கள் வீட்டு அருகில் உள்ள ஒரு பிரெளசிங் செண்டரில் டெலிவரி செய்ய வேண்டிய விபரங்களைப் பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் மதியம் ஒரு மணிக்கு டெலிவரி செய்தவுடன் அதன் பக்கத்தில் இருக்கும் இன்னொரு பிரெளசிங் செண்டரில் டெலிவரி குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்ற நடைமுறையைக் கொண்டு வந்தார்.
டெலிவரி பாய்களுக்குப் பயிற்சி
இவை அனைத்துமே மனித உழைப்பில்தான் நடந்தது. அன்றைய தினத்தில் முழுவதுமாகக் கணினி பயன்படுத்தும் காலம் இல்லை என்பதால் இந்த நடைமுறை பிசினஸை வளர்க்க உதவியது. இதற்காக ஐயப்பன் டெலிவரி பையன்களுக்கு மின்னஞ்சலில் டெலிவரி விபரங்களை அனுப்பி, அந்த மின்னஞ்சலை எப்படி ஓப்பன் செய்ய வேண்டும் என்ற விபரங்களையும் சொல்லி கொடுத்தார். இவை அனைத்துமே ஐயப்பாவின் நேரடி பார்வையில் நடந்ததால் டெலிவரி செய்ய வேண்டிய பொருள் வாடிக்கையாளர்களைத் தவறாமல் சென்றடைந்தது. இதனால் விரைவாக டெலிவரி செய்யும் நிறுவனம் என்ற நல்ல பெயரை வாடிக்கையாளர்களிடம் பிளிப்கார்ட் பெற்றது.
ஐயப்பாவிற்குத் தொழில் மேல் இருந்த ஆர்வம்
மேலும் ஐயப்பா தொழில் மேல் வைத்திருந்த ஆர்வம் குறித்துச் சச்சின் நினைவு கூறும்போது, ஐயப்பா ஆங்கிலத்தை அரைகுறையாகப் பேசினாலும் அதனால் எந்தவித குழப்பமும் தடையும் ஏற்பட்டால் பார்த்துக் கொண்டார். உதாரணமாகப் பிளிப்கார்ட் காமிக் புத்தக வரிசையில் 'The Adventures of Tintin in America' என்ற பெயரை வைத்திருந்தால், அவர் வாடிக்கையாளர்களிடம் அந்தப் புத்தகம் குறித்துக் கூறும்போது, 'Advantages of Tintin in America' என்று கூறுவார். ஆனாலும் வாடிக்கையாளருக்கு சரியான பொருள் சென்று அடையும் என்பதில்தான் அவரது தொழில் பக்தி இருந்தது. இதேபோல் பல புத்தகத்தின் பெயர்களை அவர் மாற்றி மாற்றிப் புரிந்து கொண்டும், தவறாக உச்சரித்தும் இருந்தாலும், வாடிக்கையாளர்கள் சரியாகப் புரிந்து கொள்வதும் சரியான பொருளை பெறுவதுமாக இருந்ததால் எந்தவித குழப்பமும் இடம் பெறவில்லை
ஐயப்பா ஒரு மனித ERP
தற்போது ஐடி நிறுவனங்களில் ERP என்றால் என்ன? அதன் பயன் என்ன? என்பது அனைவருக்கும் அறிந்ததே. ஒரு நிறுவனத்தின் பணியைத் திட்டமிடல், செயல்படுத்துதல் என்பவற்றில் முக்கியமானது இந்த ERP சாப்ட்வேர்.
ஆனால் ஐயப்பா ஒரு மனித ERP சாப்ட்வேர் ஆகத் திகழ்ந்தார். அவருக்கு மிகச்சரியாகத் தெரியும், எந்தெந்த புத்தகங்கள் வாங்க வேண்டும், எந்த வாடிக்கையாளர் எந்தப் புத்தகத்திற்காகக் காத்திருக்கின்றார் என்பது.
மனித கம்ப்யூட்டர்
ஐயப்ப்பா ஒரு மனித கம்ப்யூட்டர் என்பதால் இது சாத்தியமாயிற்று. ஒரு வாடிக்கையாளர் போனில் அழைத்தால், உடனே அவர் என்ன பொருள் ஆர்டர் செய்தார், அந்தப் பொருளின் தற்போதைய நிலை என்ன என்பதை அவர் உடனே கணினியை பார்க்காமலேயே தெரிந்து கொள்வார்.
அதிகம் விற்பனை ஆகும் புத்தகத்தை வாங்கி வைக்கும் ஐடியா
அவர் அனைத்து ஆர்டர்களையும் தனது ஜிமெயிலில் பதிவு செய்து கொண்டு அவ்வப்போது அதை மூளைக்குக் கடத்தி மிகத்திறமையாகச் சரியான நேரத்தில் டெலிவரி செய்வதில் மிகத் திறமையாளராக இருந்தார். இந்தத் திறமை இருந்ததால் எங்களால் எந்தப் புத்தகம் அதிகம் விற்பனை ஆகும், அந்தப் புத்தகத்தை அதிகம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஐடியா எங்களுக்கு வந்தது.
வேலை அழுத்தத்தைக் கையாளுதல்
தொழிலில் அளவை மதிப்பிடுவதில் மிகத் திறமையாளராக ஐயப்பா இருந்தார் என்று நினைவு கூறுகிறார் சச்சின். வேலை அழுத்தத்தை அவர் சரியான முறையில் கையாண்டதால் எந்த வித பிரச்சனையும் தொழிலில் வரவில்லை. அப்படியே பிரச்சனை வந்தாலும் அதைச் சந்திக்கும், சமாளிக்கும் திறமையும் அவரிடம் இருந்தது.
கணினி முறையிலான ஆர்டர்/டெலிவரிக்கு மூலகாரணம் ஐயப்பா
தற்போது நாங்கள் பயன்படுத்தும் கணினி முறையிலான ஆர்டர் மற்றும் டெலிவரிக்கு மூலகாரணமாக இருந்தது ஐயப்பாவின் ஆரம்பக்கால நடைமுறையை ஒட்டியே இருந்தது. நாங்கள் இருவரும் ஐயப்பாவின் ஒவ்வொரு நாளின் நடைமுறையைக் கண்டறிந்து பின்பற்றி வந்ததால் இன்றைய நடைமுறை மிக எளிதாக இருந்தது.
மனித உழைப்பினால் சமாளிக்க முடியாத நிலை
ஒரு கட்டத்தில் ஆர்டர்கள் அதிக அளவில் வந்தபோது மனித உழைப்பினால் சமாளிக்க முடியாத நிலை வந்தது. அந்தச் சமயத்தில்தான் நாங்கள் கணினியை பயன்படுத்தினோம். மனித மூளையின்போது செய்த புதுமைகளை ஐயப்பா கணினி முறையிலும் பின்பற்றினார். அவர் கணினியின் சூப்பர் யூசர் என்று கூறலாம். அவர் மிகச்சரியாகக் கணினியில் எப்படி ஆர்டர்களைப் பதிவு செய்ய வேண்டும், குழப்பம் வந்தால் அதை எப்படிச் சரிசெய்ய வேண்டும் என்பதை மிக எளிதில் புரிந்து கொண்டார்
மனிதனும் இயந்திரமும்
கணினியை நாங்கள் உபயோகப்படுத்தினாலும், எங்களுடைய ஆர்டர் மென்பொருள், டெலிவரி மென்பொருள் என அனைத்துமே ஐயப்பா ஆரம்பத்தில் மனித உழைப்பினால் பின்பற்றிய முறைகளைக் கொண்டே வடிவமைக்கப்பட்டது. எங்களது முதல் மென்பொருளான PRD என்று கூறப்படும் Product Requirements Document என்பது ஐயப்பாவின் ஒவ்வொரு நாளின் நடைமுறையைக் கொண்டே வடிவமைக்கப்பட்டது. இதுதான் எங்களுக்குப் புரிந்து கொள்வதற்கு மிக எளிதாகவும் இருந்தது.
ஐயப்பா வழிமுறைகள் தான் கணினியில் வடிவமைக்கப்பட்டது
ஐயப்பா டெலிவரி பையன்களிடம் நடந்து கொண்ட விதம், அவர்களுக்குக் கற்று கொடுத்த வழிமுறைகள், வாடிக்கையாளர்களிடம் பொருள் கொண்டு போய்ச் சேர வேண்டிய வழிமுறைகள் இவை தான் கணினியில் வடிவமைக்கப்பட்டது. எனவே ஊழியர்களுக்குப் புரிந்து கொள்வதில் கஷ்டமில்லை.
ஆர்டர்கள் கணினி மூலம் பதிவு செய்யப்பட்டாலும், வாடிக்கையாளர்களை இன்னும் திருப்தி செய்து கொண்டிருப்பது ஐயப்பாவின் மேஜிக் பேச்சுத்திறமைதான்.
வாடிக்கையாளரின் குறையும் பிரச்சனையும்
வாடிக்கையாளர்களின் குறைகளையும் பிரச்சனைகளையும் உண்மையில் மனதார கேட்டு அவற்றின் உண்மைகளைப் புரிந்து கொள்வார். இந்த அளவுக்கு ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உளமார பணி செய்யும் ஒரு நபர் யாருக்கும் கிடைக்க மாட்டார் என்பதே உண்மை என்று கூறுகிறார் சச்சின்.
ஐயப்பா யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை
நாங்கள் ஐயப்பாவுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்திருந்தோம். நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அவர் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் தடை போடுவதே இல்லை. யாரிடமும் அவர் அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை என்ற முழுச் சுதந்திரத்தை அவர் கையில் கொடுத்தோம். அதை அவர் சரியாகப் பயன்படுத்தியதால் இன்றைக்கு இந்த நிறுவனம் வளர்ச்சி அடைந்துள்ளது.
சுய மதிப்பாளர்
ஐயப்பா ஒரு சுய மதிப்பாளர். என்ன தேவை என்பதை உணர்ந்து அதைச் சரியாகக் கண்டுபிடித்து அதற்கொரு சரியான தீர்வைச் செய்வதில் அவருக்கு நிகர அவர்தான் என்று கூறுகிறார் பின்னி.
படிப்பு
ஓய்வு இல்லாத உழைப்பு இருந்தாலும் அவர் தனிப்பட்ட தகுதியை வளர்த்துக் கொள்வதிலும் சரியானவராக இருந்தார். முதலில் பிபிஏ பட்டப்படிப்பை அஞ்சல் மூலம் பயின்ற அவர் அதை முடித்த பின்னர்ப் பட்டமேற்படிப்பிலும் கவனம் செலுத்தினார். எம்.எஸ்.சி ஐடி படிப்புக்கு விண்ணப்பித்துவிட்டு சிறிது காலம் படித்துப் பின்னர் அதைப் பாதியில் விட்டுவிட்டதாக ஐயப்பா தனது கல்வி காலத்தை நினைவு கூறுகிறார்.
பட்ட மேற்படிப்பு
ஐயப்பாவுக்குப் பட்டமேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆவல் நிறைய இருந்தது. நாங்களும் அதை அனுமதித்தோம். ஆனால் அவரால் நிறுவனத்தை விட்டுச் செல்ல மனம் இடம் கொடுக்கவில்லை, ஆனாலும் அவரால் வெற்றி பெற முடிந்தது.
பார்த்ததிலேயே கடின உழைப்பாளி ஐயப்பா
நாங்கள் பார்த்ததிலேயே இவர் போன்று கடின உழைப்பாளி மற்றும் கூர்மையான அறிவாளி என இரண்டும் ஒருங்கே பார்த்த ஒரே நபர் ஐயப்பாதான் என்று கூறுகிறார் பின்னி
உண்மையிலேயே அவர் ஒரு கடின உழைப்பாளி, நம்பகமானவர், உண்மையானவர் என்று அவரைப் பற்றிப் புகழ்கிறார் சச்சின்
ஆம்பூர் ஐயப்பாவின் வளர்ச்சிகள்
பிளிப்கார்ட் நிறுவனம் வளர்ச்சி அடைய அடைய அதனால் பயன் அடைந்ததோடு, மதிப்பிற்குரிய நபராகவும் புகழப்பட்டார் ஐயப்பா. எங்களது நிறுவனம் ஒவ்வொரு காலாண்டிலும் அதிகரிக்க அதிகரிக்க , ஐயப்பாவின் சம்பளத்தையும் நாங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் உயர்த்திக் கொண்டே வந்தோம். ஒரு ஆண்டில் அவருடைய சம்பளம் பத்து மடங்கு உயர்ந்த வரலாறும் இங்கு உண்டு.
நிறுவனத்தின் பங்குகள்
இன்றைய தினம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகள் மில்லியன் டாலர் கணக்கில் ஐயப்பாவின் பெயரில் உள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனத்தின் வரலாற்றில் பின்னாளில் பலர் பங்கு கொண்டு தங்களுடைய உழைப்பை மூலதனமாக்கி எங்களுடைய நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவினர். ஆனால் அவர்களில் முதன்மையானவர் ஐயப்பா என்கிறார் பின்னி.
இணை இயக்குனராக மாறினார் ஐயப்பா
ஒரு சுமாரான துவக்கத்தை ஆரம்பித்த ஐயப்பா, அதன் பின்னர் இணை இயக்குனராக மாறி இன்று அனைவர் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.
ஐயப்பாவின் தாரக மந்திரம்
இன்றும் அவர் கூறும் ஒரே ஒரு தாரக மந்திரம் இதுதான். என்னதான் ஒரு நிறுவனம் வளர்ச்சி அடைந்தாலும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்வதில் எந்தவித கவனக்குறைவும் இருக்கக்கூடாது என்பதுதான். வாடிக்கையாளர்களின் முழுத் திருப்தியே ஒரு நிறுவனத்தை வளர்ச்சி அடையச் செய்வதும், அந்த வளர்ச்சியைத் தக்க வைத்து கொள்வதிலும் இருக்கின்றது என்று ஐயப்பா கூறிக்கொண்டே இருப்பார். என்கிறார் பின்னி.
வாடிக்கையாளர் திருப்தி செய்யும் திறன்
ஆம்பூர் ஐயப்பாவின் பெர்சனாலிட்டி அவரது வாடிக்கையாளர் திருப்தி செய்யும் திறனில்தான் உள்ளது. ஒரு வாடிக்கையாளரின் குறைகளைக் காது கொடுத்துக் கவனமாகக் கேட்டாலே அவரது குறை பாதி முடிந்துவிடும்.
நேர்மறையான எண்ணம், கோபப்படும் வாடிக்கையாளர்களிடமும் அன்பான பதில், பிரச்சனைகளைத் தள்ளிப்போடாமல் உண்மையாக அதைச் சரிசெய்ய வேண்டும் என்ற அக்கறை, வாடிக்கையாளர் திருப்தி அடையும் வரை தனது ஈடுபாட்டைக் காட்டுவது என்பதில் ஐயப்பா தான் எங்களது வழிகாட்டி என்பதே பிளிப்கார்ட் நிறுவனர்களின் எண்ணமாக உள்ளது.
ஐயப்பாவிடம் இருந்து பின்னி கற்றுக்கொண்டதில் முக்கியமானவை
வாடிக்கையாளர்களின் திருப்தியே நம்பர் ஒன் என்று கொள்கையை எங்களுக்கு ஐயப்பா கற்று கொடுத்துள்ளதால் எங்களால் எந்தவிதமான பிரச்சனைகளையும் சந்திக்க முடியும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பின்னி.
அவரது நம்பிக்கைக்கு ஒரு சல்யூட்.