ஜிஎஸ்டி.. சமீபத்தில் ஒட்டுமொத்த இந்திய வர்த்தகச் சந்தையையும் புரட்டிபோட்ட மத்திய அரசின் முக்கிய நடவடிக்கை. உலகில் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத வகையில் அதிகப்படியாக 28% வரியை ஜிஎஸ்டி மூலம் வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் மீது விதித்து மக்கள் பணத்தைக் காலி செய்து வருகிறது இந்த ஜிஎஸ்டி.
ஜிஎஸ்டியை சரியாக வடிவமைக்காமல் அமலாக்கம் செய்ததால் மத்திய வருவாய் துறையும், நிதியமைச்சகமும் ஒவ்வொரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் தொடர்ந்து மாற்றங்களை அறிவித்து வருகிறது.
இந்நிலையில்,தற்போது மீண்டும் ஒவ்வொரு பகுதி மற்றும் பிரிவாக ஆய்வு செய்து வரி அளவை மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சிறு வர்த்தகங்கள்
இந்தியாவில் சிறு வர்த்தகங்களுக்கு உதவும் வகையில், தற்போது வரி விதிப்பில் இருக்கும் பொருட்களை மாற்றியமைக்கவும், எளிமைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளைக் கொள்கை வடிவமைப்பாளர்கள் செய்து வருகின்றனர் என்று வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.
28 சதவீத வரி
ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பின் இந்த எளிமைப்படுத்தும் பணி பொருட்கள் மீதான வரி விதிப்பில் சில முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்படும். முக்கியமாக 28 சதவீத வரி விதிப்பில் இருக்கும் பொருட்களின் வரியைக் குறைக்கப்படும்.
எதற்காக இந்தத் தீடிர் மாற்றம்..?
HSN முறை
தற்போது பொருட்கள் பல்வேறு துணை பிரிவுகளின் கீழ் உள்ளது. இதில் சில துணை பிரிவுகள் பல விதமான வரிகளின் கீழ் உள்ளது. இதை ஜிஎஸ்டி கவுன்சில் harmonized system of nomenclature (HSN) என்ற முறையில் பிரித்து ஜூலை 1ஆம் தேதி அமலாக்கம் செய்தது.
பிரச்சனை
இந்த மாறுபட்ட பிரிவுகள் மற்றும் அதன் மீதான வரி விதிப்புகள் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்குப் பின்பற்ற கடினமாக உள்ளது. இதனைச் சரி செய்யவே இப்புதிய நடவடிக்கையை எடுத்துள்ளார் ஆதியா.
அடேய் கலையலங்காரா..
சிறு மற்றும் குறு நிறுவனங்கள் மற்றும் சாமானியர்களுக்கு ஏதுவாக வரி விதிப்புகளை விதிக்க ஒவ்வொரு பிரிவையும் மீண்டும் ஆய்வு செய்து சரியான மற்றும் புதிய வரி விதிப்புகளின் கீழ் கொண்டு வரப்படும். இது வர்த்தகச் சந்தைக்கும் SME பிரிவினருக்கும் சாதகமாக அமையும் எனப் பிடிஐ செய்தியாளர்களுக்கு ஆதியா தெரிவித்தார்.
இப்புதிய நடவடிக்கையின் மூலம் பல பொருட்கள் மீதான வரி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் மாற்றங்கள்
ஜிஎஸ்டி மூலம் அதிக வருவாய் கிடைக்கும் என நம்பிய மத்திய அரசுக்கு வழக்கத்தை விடவும் குறைவான வருமானமே கிடைத்து வருகிறது. இது மட்டும் அல்லாலமல் ஜிஎஸ்டிக்குப் பின் இந்திய வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்து உற்பத்தி முதல் சேவை வரை அனைத்துத் துறைகளுமே முடங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்தக் காரணங்களுக்காகவே தொடர்ந்து மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது.
பணமதிப்பிழப்பு முதல் ஜிஎஸ்டி வரை
பணமதிப்பிழப்புக்கு அறிவிக்கப்பட்ட 50 நாட்களில் நாட்டின் பொருளாதாரம் மிக வலிமையான நிலைக்கு மாறும் என அறிவித்ததைப் போல் ஜிஎஸ்டியின் அமல்படுத்தும் போதும் நாட்டின் அனைத்து வர்த்தகமும் கணக்கில் கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தது.
குறைந்த வருமானம்
கருப்பு சந்தை மற்றும் கருப்புப் பணம் முழுமையாக அழிக்கப்படும் எனத் தெரிவித்து ஜிஎஸ்டியை 4 வரி விதிப்புகளாகக் கொண்டு அமலாக்கம் செய்தது மத்திய அரசு.
ஆனால் கடந்த 3 மாதத்தில் வர்த்தகச் சந்தையும் வளர்ச்சி அடையவில்லை, வருமானத்தின் அளவு உயரவில்லை.
வரி தாக்கல்
ஜிஎஸ்டிக்குப் பின் கருப்புச் சந்தையில் வர்த்தகம் செய்யும் அனைவரும் வரி அமைப்பிற்குள் வருவார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் செப்டம்பர் வெறும் 39.4 லட்சம் பேர் மட்டுமே ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் மாதம் 37.6 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியக் கணிப்பு
நிதியமைச்சகம் ஆகஸ்ட் மாதம் மட்டும் 68 லட்சம் பேர் வரி தாக்கல் செய்வார்கள் எனக் கணிப்பை வெளியிட்ட நிலையில் செப்டம்பர் மாதத்தில் கூட இதனை அடையவில்லை.
அடுத்தக் கூட்டம்
இந்நிலையில் ஜிஎஸ்டியின் அடுத்தக் கூட்டம் வருகிற நவம்பர் 9ஆம் தேதி குவஹாத்தியில் நடைபெறுகிறது.
சிறு மற்றும் குறு நிறுவனங்கள் (SME)
இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு எஸ்எம்ஈ மிகப்பெரிய பங்கு வகிக்கிறது, இந்திய தொழிற்துறையில் சுமார் 95 சதவீதம் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் தான்.
அதுமட்டும் அல்லாமல் உற்பத்தித் துறையில் 40 சதவீதம், வேலைவாய்ப்புச் சந்தையில் சுமார் 8 கோடி வேலைவாய்ப்புகளை அளிக்கிறது சிறு மற்றும் குறு நிறுவனங்கள்.
இப்போ சொல்லுங்கள் இந்தியாவிற்கு வலிமை சேர்ப்பது கார்பரேட் நிறுவனங்களா அல்லது சிறு மற்றும் குறு நிறுவனங்களா..?