நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியாகத் திகழும் பஞ்சாப் நேஷன்ல் வங்கியில் நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி ஆகியோர் செய்த மோசடி குறித்து ஆய்வு அறிவிப்புகள் தினமும் அதிர்ச்சி அளித்தும் வருகிறது.
துவக்கத்தில் மோசடி தொகை ரூ.11,300 கோடி என அறிவிக்கப்பட்டது, ஆனால் ஆய்வுக்குப் பின் இதன் தொகை 20,000 கோடி ரூபாயை தாண்டுகிறது என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
அடுத்த மோசடி
நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி கூட்டணி மோசடியின் அதிர்ச்சிகள் கூட இன்னமும் தணியாத நிலையில் ரோட்டோமேக் நிறுவனத்தின் 3,700 கோடி ரூபாய் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாங்க் ஆ பரோடா
ஞாயற்றுகிழமை இரவு பாங்க் ஆ பரோடா ரோட்டோமே குளோபல் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் உரிமையாளர்களான விக்ரம் கோத்தாரி, சந்தனா கோதாரி மற்றும் ராகுல் கோத்தாரி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தது.
சிபிஐ சோதனை
இந்த விசாரணையின் பெயரில் சிபிஐ அதிகாரிகள் திங்கட்கிழமை, இந்நிறுவனத்திற்கும், அதன் உரிமையாளர்களுக்கும் சொந்தமான கான்பூரில் இருக்கும் 3 இடங்களில் சோதனை நடத்தினர்.
3,695 கோடி ரூபாய் மோசடி..
ரோட்டோமேக் நிறுவனத்தின் தலைவரான விக்ரம் கோத்தாரி 2008 முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், வெளிநாட்டில் இருக்கும் வர்த்தகர்களுக்கு (Buyers and sellers) பணம் செலுத்த வேண்டும் என்பதற்காக Foreign letters of credit (FLCs) அடிப்படையாகக் கொண்டு பல நூறு கோடி ரூபாய் பணத்தைப் பல முறை கடனாகப் பெற்றுள்ளார்.
இருக்கு ஆனா இல்லை
ஆனால் இவர் கூறிய வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்தும் விர்ச்சுவல் நிறுவனங்கள் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. (இருக்கு ஆனா இல்லை என்பது போன்ற நிறுவனங்கள் இது.)
மேலும் ரோட்டோமேக் நிறுவனம் கொடுத்த முகவரி அனைத்தும் துபாய், சார்ஜா மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளில் இருக்கும் நிறுவன முகவரியாக உள்ளது.
ரோட்டோமேக் நிறுவனம்
இந்தியாவின் புகழ்பெற்ற பேனா நிறுவனமான ரோட்டோமேக் நிறுவனம் பேனா உற்பத்தி மட்டும் அல்லாமல் இடைதரகு வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளது.
இந்த இடைதரகு வர்த்தகத்திற்குத் தான் அதிகப்படியான கடனை வாங்கியுள்ளார் விக்ரம் கோத்தாரி.
7 வங்கிகள்
ரோட்டோமேக் நிறுவனம் சுமார் 7 வங்கிகளில் கடன் வாங்கியுள்ளது. ஒவ்வொரு கடனும் 15 முதல் 200 கோடி ரூபாய் அளவில் உள்ளது. இந்தக் கடன் அனைத்தும் 2008 முதல் 2013 வரையிலான காலத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக வங்கி தரவுகள் கூறுகிறது.
இந்நிறுவனத்திற்குப் பாங்க் ஆ பரோடா மட்டும் சுமார் 456 கோடி ரூபாய் கடனை அளித்துள்ளது.
மோசடி
Foreign letters of credit (FLCs) வைத்து வாங்கப்பட்ட பணம் வெளிநாட்டில் இருக்கும் விற்பனையாளர்களுக்குச் செல்லாமல் தனது சொத்து நிறுவன கணக்குகளுக்கும், தனது துணை நிறுவன கணக்குகளுக்கும் மாற்றப்பட்டுள்ளது.
இது மிகப்பெரிய மோசடி.
உதாரணமாக
4.2 மில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதி ஆர்டருக்கு 15.50 கோடி ரூபாய் அளவிலான தொகை ரோட்டோமேக் நிறுவன கணக்கில் வங்கி வைப்பு வைக்கிறது. ஆனால் ரோட்டோமேக் நிறுவனமே அதனை RTGS பணப் பரிமாற்ற முறை வாயிலாகத் தனது நிறுவனத்தின் பிற கணக்குகளுக்கு மாற்றிக்கொள்கிறது.
மற்றொரு மோசடி.
சிங்கப்பூர் ஸ்டார்காம் ரிசோர்ஸ் நிறுவனத்திற்கு 15,700 டன் கோதுமை ஏற்றுமதி ஆர்டருக்கு பாங்க் ஆஃ பரோடா FLC அடிப்படையாகக் கொண்டு 34 கோடி ரூபாய் ரோட்டோமேக் நிறுவன கணக்கில் வங்கி டெப்பாசிட் செய்கிறது.
16 கோடி ரூபாய் லாபம்
இந்தப் பணம் Bagadiya Brothers Pvt Ltd நிறுவனத்திற்குச் சென்றுள்ளது. இதன் வாயிலாக ரோட்டோமேக் விக்ரம் கோத்தாரி சுமார் 16 கோடி ரூபாய் பாகதியா நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளார்.
ஆனால் எவ்விதமான ஏற்றுமதியும் செய்யப்படவில்லை என்பது சிபிஐ ஆய்வில் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்கள்
இந்நிலையில் பண மோசடி குறித்த சந்தேகம் எழுந்த உடன், பாங்க் ஆ பரோடா வங்கி அதிகாரிகள் ரோட்டோமேக் நிறுவனம் கொடுத்த நிறுவன விபரங்களையும், நிறுவனங்களையும் ஆய்வு செய்த போது அவை வெறும் ஷெல் நிறுவனங்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதன் பின்பே வங்கித்தரப்பு வழக்குப் பதிவு செய்துள்ளது.
அதிரடி மோசடிகள்
ரோட்டோமேக் நிறுவனம் கொடுத்த விபரங்கள் படி வெளிநாட்டு நிறுவனங்களை ஆய்வு செய்தபோது அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது.
இதில் ஹாங்காங் நிறுவன முகவரியில் அலுவலகமே இல்லை, அது ஒரு விர்ச்சுவல் அலுவலகம்.
அதேபோல் துபாயில் இருக்கும் அலுவலகத்தில் ஆபிஸ் பாய் மட்டுமே இருப்பதும் தெரியவந்துள்ளது.
சார்ஜாவில் இருக்கும் அலுவலகத்தில் இருக்கும் அலுவலகம் மூடப்பட்டுவிட்டதும் தற்போது பாங்க் ஆ பரோடா நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடன் விபரம்
ரோட்டோமேக் நிறுவனத்தின் பெயரில் விக்ரம் கோத்தாரி வாங்கிய கடனில் இன்னும் 2,919 கோடி ரூபாய் கடனை திருப்பி அளிக்க வேண்டும். இதற்கு வட்டியாக 776 கோடி ரூபாய் என மொத்தம் 3,695 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.
யார் யார் எவ்வளவு கடன்..?
ரோட்டோமேக் நிறுவனத்திற்குச் சுமார் 7 வங்கிகள் கடன் கொடுத்துள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 771 கோடி ரூபாய்
பாங்க் ஆப் இந்தியா - 754 கோடி ரூபாய்
யூனியன் பாங்க் ஆப் இந்தியா - 459 கோடி ரூபாய்
பாங்க் ஆ பரோடா - 457 கோடி ரூபாய்
அலகாபாத் வங்கி - 330 கோடி ரூபாய்
ஓரியென்டல் பாங்க் ஆப் காமர்ஸ் - 97 கோடி ரூபாய்
பாங்க் ஆப் மகாராஷ்டிரா - 50 கோடி ரூபாய்
விக்ரம் கோத்தாரி
ரோட்டோமேக் நிறுவன தலைவர் விக்ரம் கோதாரி, தான் எங்கேயும் ஓடவில்லை, இந்தியாவில்தான் இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் வங்கிகளுடன் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோசடியில் இது ஒன்னுதான் நல்ல விஷயம்.
ஏப்பா சாமி முடியலடா..
கடந்த 2 வாரத்தில் வெளிச்சத்திற்கு வந்த இரு மோசடிகளும் பொதுத்துறை வங்கிகள், அதாவது அரசு வங்கிகளை மையமாகக் கொண்டது.
பொத்துறை வங்கிகளில் இருக்கும் பணம் அனைத்தும் மக்களுடைய வரிப் பணம் என்பது நாம் மறந்துவிடக்கூடாது.
அரசின் நிதியுதவி
ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளுக்குத் தான் வர்த்தக வளர்ச்சி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக நிதியுதவி செய்கிறது.
மோசடி
பல கோடி மக்களின் வரிப்பணம் தான் தற்போது சில கருப்பு முதலைகளால் மோசடி செய்யப்பட்டு வருகிறது. இது நாட்டின் வளர்ச்சிக்கும் வங்கிகளில் இருக்கும் மக்களின் பணத்திற்கும் நல்ல இல்லை என்பதை நாம் முதலில் உணரவேண்டும்.
அதிகளவிலான பண மோசடி.
அரசு வங்கிகள் நிகழ்ந்து வரும் தொடர் மோசடிகள் மற்றும் வாராக் கடன் பிரச்சனைகளால் வங்கி திவாலாகும் பட்சத்தில் வங்கியில் மக்கள் வைத்திருக்கும் பணத்தின் பாதுகாப்பும் கேள்விக்குறி தான்.
ஆனால் மத்திய அரசு வங்கியில் இருக்கும் மக்கள் பணத்திற்கு உத்தரவாதம் அளிக்கப் பல நடவடிக்கைகள் எடுத்தாலும் தற்போது நிலவும் மோசடிகள் சாமானியர்களுக்கு அச்சம் அதிகரித்து வருகிறது.
யாருடைய தவறு..?
இத்தகைய மோசடிகளுக்கு வங்கி அதிகாரிகள் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. கடன் வாங்க வரும் ஒரு நபரின் ஆவணங்களை முழுமையாகவும், சரியாகவும் ஆய்வு செய்யாமலும், கடன் தொகை திரும்பக் கிடைக்கும் என்ற உத்தரவாதம் போன்றவற்றைச் சரியாகக் கவனிக்கப்படாமல் கடன் கொடுப்பதே இந்த நிலைக்கு முக்கியக் காரணம்.
கமிஷன்
இப்படிப் போதிய ஆவணங்கள் இல்லாமல் கடனுக்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம் கடன் பெறும் நபர் வங்கி அதிகாரிகளுக்குக் கமிஷன் (லஞ்சம்) பெறப்படுவதாக நீரவ் மோடி மோசடி விசாரணையில் தெரிய வந்துள்ளது.