இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களை 28 சதவீத ஜிஎஸ்டி கீழ் கொண்டு வந்தாலும் அது முழுமையான ஜிஎஸ்டி ஆக இருக்காது என்றும் அதனுடன் மாநிலங்களின் உள்ளூர் விற்பானை வரி அல்லது வாட்டிற்கு இணையான வேறு வரி ஏதேனும் விதிக்கப்படும் என்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விலையில் மாற்றம் இருக்காது
ஜிஎஸ்டி மற்றும் மாநிலங்கள் விதிக்கும் இரண்டு வரிகளும் சேர்ந்த தற்போது என்ன விலைக்குப் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறதோ அதே போன்று தான் இருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
ஜிஎஸ்டி உள்ள உலக நாடுகள்
ஜிஎஸ்டி உள்ள உலக நாடுகளில் எங்கும் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவற்றிற்குச் சுத்தமான ஜிஎஸ்டி வரி விகிதம் கிடையாது. பிற வரி விகிதங்களுடன் தான் உள்ளது. அரசியல் காரணங்களுக்காக வேண்டும் என்றால் பெட்ரோல் மற்றும் டீசல் ஜிஎஸ்டி கீழ் கொண்டு வரப்படும் என்றும் அதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இருக்காது என்றும் அவர் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டார்
வரி வருவாய்
தற்போது மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19.48 ரூபாயும், டீசல் ஒரு லிட்டருக்கு 15.33 ரூபாய் கலால் வரியாகவும் பெற்றுவருகிறது. தமிழ் நாடு அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீது 34 சதவீதம் வாட் வரி விதித்துள்ளது.
ஜிஎஸ்டி
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி கீழ் 5, 12, 18 மற்றும் 28 என 4 வகையான வரி விகிதங்கள் உள்ளன. பெட்ரோல் மற்றும் டீசலினை 28 சதவீத வரி விகிதத்தின் கீழ் கொண்டு வந்து அதன் மீது மாநிலத்தின் வரியையும் விதித்தால் தற்போது இருக்கும் விலையில் எந்த மாற்றமும் வராது.
மத்திய அரசு
மத்திய அரசிடம் பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டையும் ஏன் ஜிஎஸ்டி கீழ் கொண்டு வரவில்லை என்று கேட்டால் அது மாநிலங்களின் கைகளில் தான் உள்ளது என்றும் அதே நேரம் மத்திய அரசு குறைவான அளவில் தான் வரியினைப் பெற்றுவருகிறது என்றும் கூறுகிறது. மறுபுறம் மாநில அரசுகள் இதன் மூலம் தான் தங்களுக்கு அதிக வருவாய்க் கிடைக்கிறது இல்லை என்றால் அரசாங்கம் திவால் ஆகிவிடும் என்று கூறுகின்றனர்.
உள்ளீட்டு வரி
மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டையும் ஜிஎஸ்டி கீழ் கொண்டு வரும் போது 20,000 கோடி ரூபாய் உள்ளீட்டு வரி முறைக்குக் கீழ் கொண்டு வருவதா என்பதையும் முடிவு செய்ய வேண்டும். ஒருவேலை இரண்டையும் ஜிஎஸ்டி கீழ் கொண்டு வந்து உள்ளீட்டு வரி செலுத்த நேர்ந்தாலும் பெட்ரோல் விலை திடீர் என்று ஏறுவது மற்றும் குறைவது என்ற நிலை இருக்கும்.