ஹைதராபாத்தில் உள்ள லாலில் ஒரே அறையில் 114 போலி நிறுவனங்கள் கண்டு பிடிக்கப்பட்ட விவகாரத்தில், சத்யம் மோசடியில் தண்டிக்கப்பட்ட ராமலிங்க ராஜூவின் குடும்பத்திற்குத் தொடர்பிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு முகவரி- பல நிறுவனங்கள்
ஐதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் பர்ச்சூன் மொனார்க் மால் என்ற வணிக வளாகத்தில் கம்பெனி விவகாரங்கள் துறையின் ஆணையின் பேரில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். எஸ்.ஆர்.எஸ்.ஆர் அட்வைசரி சர்விஸ் என்று முகவரியிடப்பட்ட ஒரு அறையில் சோதனை செய்தபோது, 114 நிறுவனங்கள் செயல்பட்ட அதே அறையில் இயங்கி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதில் 25 ஊழியர்கள் பணியாற்றியுள்ளனர். இது சத்யம முறைகேடு வழக்கில் சிக்கிய ராமலிங்க ராஜூவின் உறவினர்களுக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.
சட்ட விரோதச் செயல்
இது தொடர்பாகப் பேசிய அதிகாரி ஒருவர், ஒரே முகவரியில் இயல்புக்கு மாறான வகையில் பல கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார். ஆந்திரா தெலுங்கானாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த மோசடி நடைபெற்றுள்ளது. எந்தவொரு நபரும் 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்களைப் பதிவு செய்யக்கூடாது என்ற சட்டம் மீறப்பட்டுள்ளது., இது தவிர ஒருவர் பல நிறுவனங்களுக்கு இயக்குநராகச் செயல்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
விசாரணை தொடக்கம்
இந்தப் போலி நிறுவனங்களுக்கு எஸ்.ஆர்.எஸ்.ஆர் அட்வைசரி பிரைவேட் லிமிடெட் கணக்கு வழக்குகளைப் பராமரித்துள்ளது. ஒரே முகவரியில் பல நிறுவனங்கள் செயல்படுவது சட்டத்துக்குப் புறம்பானது. இது தொடர்பாகத் தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும். எஸ்.ஆர்.எஸ்.ஆர் நிறுவனம் ராமலிங்க ராஜூவுக்குச் சொந்தமானது என்று அதிகாரிகள் கூறினர்
யார் அந்த ராமலிங்கராஜூ
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்கராஜூ, முதலீட்டாளர்களைக் கவரும் நோக்கில் கம்பெனி லாபத்தை மிகைப்படுத்திக் காட்டியதாக 2009 இல் பிடிபட்டார். பங்குதாரர்களுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் அவருக்கு 7 ஆண்டுச் சிறைத்தண்டனையும், 5 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த மோசடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.