பிரபல தென்னிந்திய நடிகை மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ரோஜா அன்மையில் தனது தொகுதியில் அம்மா உணவகத்தினை விடக் குறைந்த விலையில் சாப்பாடு அளிக்கும் ஹோட்டல் ஒன்றைத் திறந்துள்ளார்.
நடிகை ரோஜா தமிழ், தெலுங்கு, மலையாளம் எனத் தென்ந்திய மொழி திரை உலகில் முன்னணி நாயகியாக வலம் வந்துகொண்டு இருந்தார். தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் வரும் ரோஜா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து நகரி தொகுதியில் 2014-ம் ஆண்டு வெற்றிபெற்று எம்எல்ஏவானார்.
மலிவு விலை உணவகம்
தனது நகரி தொகுதியில் நவம்பர் 17-ம் தேதி பிறந்த நாளை கொண்டாடிய ரோஜா அங்கு அம்மா உணவகத்தினை விட மலிவு விலை உணவகத்தைத் தொடங்கியுள்ளார். இந்த உணவகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ஒரு சாப்பாட்டின் விலை வெறும் 4 ரூபாய் மட்டுமே ஆகும்.
அம்மா உணவகம்
2013-ம் ஆண்டுத் தமிழ் நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தில் இட்டிலி 1 ரூபாய் என்றும், 2 சப்பாத்தி 3 ரூபாய் என்றும், தயிற் சாதம் 3 ரூபாய் என்றும், சாம்பார் சாதம் - புதினா சாதம் போன்றவை 5 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆந்திர பிரதேசம்
இதே போன்று ஆந்திராவில் சந்திரா பாபு தலைமையில் அண்ணா கேண்டின் தொடங்கப்பட்டுக் குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அண்ணா கேண்டீனில் ஒரு வேலைச் சாப்பாடு 5 ரூபாய் ஆகும். கர்நாடகாவிலும் இந்திரா கேண்டீன் என்ற பெயரில் குறைந்த விலை உணவகங்கள் காங்கிரஸ் அரசு தொடங்கியது.
ஜெகன்மோகன் ரெட்டி
ரோஜாவின் இந்த முயற்சியைப் பாராட்டிய ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பிற தொகுதி எம்.எல்.ஏ-களையும் இது போன்ற ஒரு உணவகத்தை ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறாராம்.
தேர்தல்
ஆந்திர பிரதேசத்தில் 2019-ம் ஆண்டுச் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரோஜாவின் இந்த மலிவு உணவகம் திட்டம் அண்ணா கேண்டீன் போட்டியாகவே ஓட்டுக்களைக் கவரவே என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications