தமிழ் நாட்டில் கஜா புயல் புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் கடுமையாகப் பாதித்துள்ள நிலையில் நடிகர், இயக்குநர் மற்றும் நடன இயக்குனருமான ராகவா லாலரன்ஸ் கஜா புயலால் வீடுகளை இழந்த 50 விவசாயிகளுக்குப் புதிய வீடுகளைக் கட்டிக் கொடுக்க முடிவு செய்துள்ளார்.
புயல் பாதிப்பு
கஜா புயல் லட்சக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து அரசுக்குப் பெறும் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது மட்டும் இல்லாமல் ஆயிரக்கணக்கான ஏழைகளின் குடிசைகள், வீடுகள் போன்றவற்றையும் சேதம் செய்துவிட்டு சென்றுள்ளது. விவசாய நிலம், வீடு, ஆடு மாடு, கோழி என அனைத்தையும் இழந்துவிட்டு விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு
அரசு, அரசியல் கட்சிகள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி மறு சீரமைப்பு பணிகளுக்காகப் பல்வேறு வகையில் உதவி வருகின்றனர்.
அறிக்கை
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தனது முக நூல் பக்கத்தில் "Hai friends and Fan's கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடு இழந்த நமது விவசாயிகளுக்கு ஐம்பது வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்துள்ளேன். உங்கள் எல்லோருடைய ஆசர்வாதம் தேவை....!
கஜா புயல் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும் துயரத்தையும் பார்க்கும் போது வேதனை அடைந்தேன்..
எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும் அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
அவர்களுக்கும் அவர்களது நல்ல உள்ளத்துக்கும் தலை வணங்குகிறேன்...
ஒரு தனியார் தொலைக் காட்சியில் ஒரு வீடு முற்றிலும் இடிந்து விழுந்து நிர்க்கதியாய் ஒரு குடும்பம் பற்றிப் பார்த்தேன். வேதனை அடைந்து விட்டேன்...
அந்தக் குடிசை வீடு அழகாகக் கட்டித்தர எவ்வளவு ஆகும்..மிஞ்சிப் போனால் ஒரு லட்சம் ஆகும்...
அந்த வீடு மட்டுமில்லை ..இது மாதிரி இடிந்து முற்றிலும் பாதிக்கப் பட்ட 50 வீடுகளைக் கட்டித் தர உள்ளேன்...அப்படி பாதிக்கப் பட்டவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டால் நானே நேரிடையாகப் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று வீடு கட்டித் தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த உள்ளேன்...
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள் ...
நான் அவர்கள் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன்.. ஒரு தனியார் தொலைக்காட்சியும் இந்த விஷயத்தில் எங்களுடன் இணைந்து சில ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்..
அன்பு பத்திரிக்கை நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள்...உங்கள் பார்வைக்கு இது மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஏதாவது தகவல் வந்தாலும் எங்களிடம் தெரிவிக்கவும்.." எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமிதாப் பச்சன்
அன்மையில் இதே போன்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் தான் பிறந்த உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 1398 விவசாயிகளின் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் கடனை அடைக்க உதவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.