டெல்லி: கட்டுமானம் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. மலிவு விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி, 8 சதவிகிதத்தில் இருந்து ஒரு சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். நடுத்தர மக்களுக்கு சலுகை கிடைக்கும் வகையில் லோக்சபா தேர்தல் நேரத்தில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.
ரியல் எஸ்டேட் துறையில் கட்டுமான பணியில் உள்ள, அதாவது நிறைவுச்சான்று பெறப்படாத வீடுகளை விற்பனை செய்ய ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது. ஆடம்பர வீடுகளுக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது. இதில் நில மதிப்பாக 6 சதவிகிதம் போக 12 சதவிகிதம் வரி செலுத்தினால் போதும். குறைந்த விலை பிரிவில் உள்ள வீடுகளுக்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இதில், நில மதிப்பு 4 சதவிகிதம் போக 8 சதவிகிதம் வரி செலுத்தினால் போதும்.
கட்டுமான பணி நிறைவு சான்று இருந்தால் ஜிஎஸ்டி தேவையில்லை. ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகள் பல, கட்டுமான பணியில் உள்ளபோதே புக்கிங் செய்யப்படுகிறது. அப்போது மேற்கண்ட ஜிஎஸ்டி தொகையை சில பில்டர்கள் வசூல் செய்து விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், கட்டி முடிக்கப்பட்டு நிறைவு சான்று பெற்ற பிறகே வீடுகள் ஒப்படைக்கப்படுகின்றன. இந்த சலுகை வீடு வாங்குவோரை சென்றடைவதில்லை.
ஜிஎஸ்டி கவுன்சில்
மலிவு விலை வீடுகள் திட்டத்தின்கீழ் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு தடையாக உள்ளது. எனவே, வீடு வாங்குவோர் மீது விழும் வரிச்சுமையை போக்கவும், முறைகேடுகளை தடுக்கவும் ஜிஎஸ்டி விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இதுபற்றி ஜிஎஸ்டி கவுன்சில் கூடி ஆலோசனை நடத்தியும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் நேற்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், கட்டுமான பணியில் உள்ள வீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.
அருண் ஜெட்லி அறிவிப்பு
செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மலிவு விலை வீடுகள் பிரிவில் கட்டப்படும் கட்டுமான பணியில் உள்ள வீடுகளுக்கு ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிமாக குறைக்கப்பட்டுள்ளதாக அருண் ஜெட்லி தெரிவித்தார். இது மட்டுமின்றி, மலிவு விலை வீடு கட்டுமான திட்டங்களுக்கு விதிக்கப்படும் 8 சதவிகித வரியை ஒரு சதவிகிதமாக குறைக்கவும் கவுன்சில் முடிவு செய்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பு வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.
ரூ.45 லட்சம்
மலிவு விலை வீடுகள் என்பதற்கான வரையறையையும் ஜிஎஸ்டி கவுன்சில் மாற்றி அமைத்துள்ளது. இதன்படி மெட்ரோ நகரங்களில் 60 சதுர மீட்டர் (சுமார் 645 சதுர அடி) அல்லது அதற்கு கீழ் கார்ப்பெட் பரப்பளவு கொண்ட ரூ45 லட்சம் வரை விற்கப்படும் குடியிருப்புகள், மெட்ரோ அல்லாத பிற பகுதிகளில் 90 சதுர மீட்டர் (சுமார் 968 சதுர அடி) கார்ப்பெட் பரப்பளவு கொண்ட ரூ45 லட்சம் வரை விற்கப்படும் குடியிருப்புகள் மலிவு விலை வீடுகளாக கருதப்படும் என ஜெட்லி தெரிவித்துள்ளார்.
கட்டுமான உரிமையாளர்கள்
தற்போது கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கான ஜிஎஸ்டி 12% ஆக இருந்து வருகிறது, இது வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது விற்கப்படும்போது கட்டுமானம் நிறைவுபெற்றது என்ற சான்றிதழ் வழங்கப்படாத வீடுகள், கட்டிடங்களுக்கான ஜிஎஸ்டி தற்போது 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டுமான உரிமையாளர்கள் இந்தப் புதிய ஜிஎஸ்டி முறையின் படி இன்புட் வரிப்பயன் ( உள்ளீட்டு வரிப்பயன்பாடு) கோர முடியாது.
அபார்ட்மென்ட் வீடுகள்
ஜிஎஸ்டி குறைப்பால் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் விலை குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வரி குறைப்பு, வீடுகளை வாங்குபவர்களுக்கு பெரும் பயனளிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. லோக்சபா தேர்தல் நெருங்க உள்ள நிலையில், நடுத்தர மக்களை குறிவைத்து இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
லாட்டரிகளுக்கு வரி குறைப்பு இல்லை
மலிவு விலை வீடுகள் மட்டுமல்லாது 380 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ளது. லாட்டரி சீட்டுகளுக்கான ஜிஎஸ்டி குறைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போது மாநில லாட்டரிகளுக்கு 12 ஜிஎஸ்டி வரியும் மாநிலம் அதிகாரம் வழங்கிய லாட்டரிகளுக்கு 28% ஜிஎஸ்டியும் இருந்து வருகிறது.